அதிகாலையின் அமைதியை கிழித்தபடி சாலையில் விரைந்தது அந்த இரு சக்கர வாகனம். தை மாதம் என்பதால் யாரோ மெனக்கெட்டுப் புகைப் போட்டு விட்டது போலப் புகை மூட்டமாய் ஊரை பனிப் போர்த்தியிருந்தது.
சல்லா துணியைப் போர்த்தி விட்டது போலச் சாலையே கண்ணுக்குத் தெரியாமல் பனி மூடியிருந்தது.
மிதவேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தவன் முகத்தைச் சில்லென்று குளிர்ச்சியாய் வருடிச் சென்றது குளிர் காற்று. அவன் உடலில் மெல்லிய சிலிர்ப்பு ஓடியது. சொந்த ஊரின் காற்றுக்கென்றே ஒரு சிறப்பு இருக்கத்தானே செய்கிறது. அவன் மனம் முழுவதும் வியாபித்துக் கிடந்த பதற்றத்தை கேள்விகளை மீறி அந்நொடி இயற்கையை இதமாய் ரசித்துப் பயணித்தான் அவன்.
காதல் மீகிய காதலியின் கரங்களைப் போல அவன் கேசம் கலைத்து விளையாடியது காற்று. அவன் உதடுகள் மென்மையாய் முறுவலித்தன.
அவன் வண்டி ஊர் எல்லையைத் தொடும் போது அதிகாலை மூன்று மணி. தாமரைக்குளத்தின் தொடக்கத்திலேயே அவர்களது தோட்டமும் வீடும் அமைந்திருக்க, வண்டியின் வேகத்தைக் குறைத்து, வீட்டின் முன் நிறுத்தினான்.
அவனோடு சேர்ந்து அவனது நண்பனும் வண்டியில் இருந்து கீழிறங்க, “தேங்க்ஸ்டா மதன்” என்று நண்பனின் தோளில் தட்டினான் அவன்.
“உன் தேங்க்ஸை நீயே வச்சுக்கோ. எனக்குத் தூக்கம் வருதுடா கார்த்திகேயா. ஆள விடு” என்று கையை உயர்த்திக் கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தான் மதன்.
கார்த்திகேயன் நண்பனை முறைத்து, “அப்பா ஏன்டா என்னைய அவசரமா ஊருக்கு வர சொன்னார்? உனக்கு எதுவும் தெரியுமா? இங்க என்னா பிரச்சனை?” என்று கேட்டான்.
“அடேய் இதையே எம்புட்டுத் தரம்டா கேட்ப? எனக்குத் தெரிஞ்சு ஒரு பிரச்னையும் இல்லடா. நீயும் வீட்டுக்கு நெதம் பேசுறதானே? பெரிய பிரச்சனைன்னா வாத்தி உன்கிட்ட சொல்லாம இருக்க மாட்டாரேடா” என்று கார்த்திகேயனின் தந்தை துரைசாமியை குறிப்பிட்டு அவன் சொல்ல, “ம்ம்” என்று ஆமோதித்தான் அவன்.
“என்னடா கார்த்தி?” என்று மதன் நண்பனின் தோளில் கையைப் போட, “என்னவா இருந்தாலும் பார்த்துக்கலாம் மச்சான். நீ வண்டியை எடுத்துட்டுக் கிளம்பு” என்றான் மதனிடம்.
“அட படுபாவி பயலே. அர்த்த ராத்திரி பஸ் ஸ்டாண்டுல கொசு கடியில காத்திருந்து உன்னைய வீட்டுக்கு கொண்டாந்து விட்டா, என்னைய விரட்டி விடுற நீயி. இருடா பொழுது விடிஞ்சதும் போறேன்” என்றான் மதன்.
“சாரிடா” என்று மதனின் தோளை தட்டி, “வீட்டுக்குள்ள வா” சுற்றுவேலி படலை திறந்து விட்டான்.
“இருக்கட்டும் நான் கிளம்பறேன் கார்த்தி”
“அடேய் மாத்தி மாத்தி பேசுவியா நீயி? உள்ள வாடா” என்று அவனை வற்புறுத்தி உள்ளே அழைத்துச் சென்றான்.
கார்த்திகேயன் வீட்டுக் கதவை தட்ட கையை உயர்த்தும் போது, கதவு உள்ளிருந்து திறந்தது.
“நா வண்டி சத்தம் கேட்கவும் எழுந்துட்டேன். வாங்கப்பா” என்று இருவரையும் பார்த்து வாஞ்சையுடன் சொன்னார் துரைசாமி. மகன் மேல் கூடுதலாகப் படிந்து மீண்டன அவர் கண்கள்.
“செத்த நேரம் படுத்து எந்திரிங்க ரெண்டு பேரும்” என்று கதவை விரிய திறந்து விட்டார்.
“எப்படிப்பா இருக்கீங்க?” என்று அவரிடம் கேட்ட கார்த்திகேயனின் கண்கள் உள்ளறை மேல் பாய்ந்து மீண்டன. அம்மாவை தேடினான்.
“அம்மா தூங்குறாப்பா. நீயும் படு வா” என்று அவனுக்கான பதிலைச் சொன்னார் அவர்.
“அப்பா” என்று அவன் தயங்கி நிறுத்த, “பஸ்ல வந்த அசதி இருக்கும் உனக்கு. படுய்யா கார்த்திகேயா. காலையில பேசுவோம்” என்று அவர் அழுத்தமாகச் சொல்ல, மெதுவாகத் தலையசைத்தான். ஆனால் மனம் முழுக்கக் குழப்ப ரேகைகள் படர நின்றான்.
அவர்கள் இருவருக்கும் போர்வை தலையணை எடுத்து வந்து தந்தார்.
அந்தக் கூடத்திலேயே பாய் விரித்துப் படுத்தார்கள்.
இருவரையும் உறக்கம் அண்டவில்லை. அவன் ஊருக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகி இருக்க, இடைப்பட்ட நாள்களில் நடந்ததை நண்பனிடம் கேட்டறிந்து கொண்டான். பேச்சில் பொழுதும் கரைய, மணி ஐந்து என்றது அலைபேசி.
“ஊருக்குள்ள மொத பஸ் இப்போ வந்துடும் கார்த்தி. என் வண்டிய இங்கன விட்டுட்டு நான் பஸ்ல போய்க்கறேன். உனக்கு வண்டி தேவைப்படும். இந்தா சாவி” என்று அவன் கையில் வண்டிச் சாவியைத் திணித்தான்.
“டேய் மதனே, நான் அப்பா வண்டியை எடுத்துக்கறேன்டா. நீ உன் வண்டியை எடுத்துட்டு போ”
“உங்கப்பா வண்டியா? எது? நீ பிறந்ததும் வாங்கின டிவிஎஸ் பிப்டியா டா?” என்று நக்கலாகக் கேட்டான்.
“அந்தப் புல்லட்டுக்கு என்னடா குறைச்சல்?” என்று சிரிப்புடன் கேட்ட கார்த்திகேயன், “சத்தியமா வண்டி வேணாம் மச்சான்” என்றான் உறுதியாக.
அவன் கையில் வண்டிச் சாவியைத் திணித்து, “உனக்குத் தேவைப்படும். அப்போ தேடிட்டு இருக்க முடியாது. பிடி” என்றான் அழுத்தமாக.
“காலையில பிரஸ்ல எனக்கு வேலையிருக்கு. நான் கிளம்பறேன், நீயி செத்த நேரம் தூங்கி எந்திரி. அப்புறமேட்டு உங்கப்பா என்ன சொன்னாருன்னு எனக்குப் போன் போட்டு சொல்லு” என்று எழுந்து கொண்டான். சற்று நேரத்தில் அதிகாலை முதல் பேருந்து வரவும் கிளம்பியிருந்தான் மதன்.
அவனை அனுப்பி விட்டு உள்ளே வந்த கார்த்திகேயனுக்கு உறக்கம் வரவில்லை.
“என்னவாக இருக்கும்? அப்பா எதற்காக அவரசமாக ஊருக்கு வரச் சொன்னார்” என்ற கேள்வியே மாம்பழத்து வண்டாய் அவன் மனத்தைக் குடைந்தது.
கார்த்திகேயன் சென்னை அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு சட்டம் படிக்கிறான்.
முன்தினம் மாலை கல்லூரி முடித்து அவன் வெளியே வர, அப்பாவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
எப்போதும் இரவில்தான் பேசுவான். அதுவும் அவன்தான் பெற்றோரை அழைப்பான். இப்போது அப்பாவே அழைக்கிறார் எனவும், “ப்பா, நல்லா இருக்கீங்களாப்பா?” என்று பதற்றத்தை மறைத்த குரலில் கேட்டான்.
“நா நல்லா இருக்கேனப்பா. உங்கம்மாக்கும் ஒன்னும் இல்ல” என்று முன்னெச்சரிக்கையாக மொழிந்து விட்டு, “தம்பி” என்றார் தவிப்புடன்.
“உன்னால காலையில ஊர்ல இருக்க முடியுமாய்யா?” என்று அவர் கேட்டதும் திடுக்கிட்டான்.
“நாளைக்குக் காலையிலயாப்பா சொல்றீங்க?” என்று உறுதிப்படுத்திக் கொள்ள விழைந்தான்.
“ஆமாப்பா. நா என்னாண்டு சொல்ல.. நீயி வந்தாதேன் சரியா வரும். வர முடியுமா பாரு. இல்லன்னா..” என்று அவர் இழுக்க, “நான் வர்றேன்ப்பா” என்று முடித்தான் அவன். கல்லூரி நிர்வாகத்தினரிடம் அப்பாவையே பேச வைத்து, அவசரம் என்று அம்மாவின் உடல் நிலையைக் காரணம் காண்பித்து விடுப்புப் பெற்றிருந்தான்.
அப்பாவின் குரலில் இருந்த தவிப்பும் துடிப்பும் அவனை ஊர் நோக்கி உந்தியது. ஐந்து வருடங்களுக்கு முன்பு அவன் அம்மா வாணிக்கு டெங்கு காய்ச்சல் வந்து இருபது நாள்களுக்கும் மேலாக வீடு, மருத்துவமனை என்று அலைந்து திரிந்து அதன் பிறகே நலம் பெற்றிருந்தார். ஆனால் அதன் பிறகு ஒன்று மாற்றி ஒன்றென அவருக்கு ஏதாவது வந்து கொண்டேயிருக்கிறது. அதனால் அடிக்கடி ஊருக்கு வந்து செல்வான். ஆனால் சமீபத்தில் வர முடியாத சூழல், அவனுக்குப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
அவனது உள்ளுணர்வு அம்மாவுக்கு ஒன்றுமில்லை என அடித்துச் சொல்லியது. அப்பாவும் அதையே உறுதி செய்தார். பிறகு என்ன? என்ற கேள்வி அவன் மனத்தைக் கீற வீடு வந்து சேர்ந்திருந்தான்.
அந்த யோசனையோடு விழித்திருந்தவனை உறக்கம் தழுவி கொண்டது.
அவன் காதுக்குள் பறவைகளின் கீச்சிடல் கேட்டது. எங்கோ காகம் கரைய, அதைத் தொடர்ந்து கன்று குட்டியின் அம்மா என்ற அழைப்பு கேட்க, பட்டென்று உறக்கம் கலைந்து கண் விழித்திருந்தான்.
“கார்த்திகேயா” அம்மா வாணியின் வாஞ்சையான குரல் அவனை வருட, படக்கென்று எழுந்து அமர்ந்தான்
எந்த வயதிலும் அம்மாவிடம் மட்டுமே நொடியில் குழந்தையாக மாறி விட முடிகிறது. அவர் நீட்டிய பசும் பால் காப்பியை ரசித்து அருந்தியபடி அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது வீட்டுக்குள் வந்த துரைசாமி, “பின்னாடி மல்லிப்பூ தோட்டத்துல பூ பறிக்க ஆள் வந்துட்டாங்கப்பா. அதேன் அவங்களோட பூ பறிச்சுட்டு வாரேன்” என்றார் மகனிடம்.
“உங்கப்பா உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னாருப்பா. நீ போய் என்னாண்டு கேளு. அந்தக் காப்பி டம்பளர கொண்டா” என்று அவனிடம் இருந்து காபி டம்ப்ளரை வாங்கிக் கொண்டு சமையலறை நோக்கி சென்றார். மற்ற நேரமாக இருந்திருந்தால் அம்மாவின் பின்னேயே சென்று அவருக்கு உதவியிருப்பான். ஆனால் இன்று அப்பாவை நோக்கி நகர்ந்தன அவன் கால்கள்.
இருவரும் வீட்டுக்குப் பின்புறம் இருந்த தோட்டத்துக்கு வந்தார்கள்.
அங்கே மல்லி, முல்லை, அரளி பூச்செடிகள் வரிசைக் கட்டி நின்றன. பத்துக்கும் மேற்பட்டோர் பூ பறித்துக் கொண்டிருந்தார்கள்.
துரைசாமி கணக்காளர் பணியை விட்டு சில வருடங்கள் ஆகின்றன. தற்போது அவர் முழு விவசாயி.
“ப்பா, ஊருக்குள்ள எதுவும் பிரச்னையாப்பா?” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டான் அவன்.
மகனை திரும்பி அழுத்தமாகப் பார்த்த தகப்பன், “கவிதாஞ்சலிக்கு கல்யாணம்ப்பா” என்றார்.