உதய ராகம் – 17 (3)

கரையில் நின்று அவளுக்குக் கைக் காட்டிய தாயின் கரத்தை கூட அவளால் கண்டு கொள்ள இயலவில்லை. அவளைச் சுற்றி இருந்த தண்ணீர், பார்வையைச் சுத்தமாக மறைத்திருந்தது.

தண்ணீருக்குள் நிற்க, நடக்க இயலா உடல், இங்கும் அங்குமாக அலைக்கழிய, இதயம் இஷ்டத்திற்குத் துடிக்க ஆரம்பித்தது. மூளை நொடியில் மரத்திருந்தது.

அவள் மெல்ல சுதாரித்து, “சுஹா, சுஹா” என்று பெருங்குரலெடுத்து கத்த துவங்கினாள்.

பயத்துடன், கடல் நீரையும் சேர்த்து உள்ளுக்குள் விழுங்கினாள்.

கால்களும், கைகளும் அதற்கு மேல் நீரை விலக்கி முன்னே செல்ல ஒத்துழைக்க மறுக்க, மெல்ல மெல்ல நினைவை இழக்கத் துவங்கினாள் ராகவி.

கண்களை மூடப் போன இறுதி நொடி, கைகளில் சிக்கிய தோழியின் மஞ்சள் நிற டாப்பை இறுக்கமாக பற்றித் தன் பக்கமாக இழுத்தபடி நினைவிழந்து இருந்தாள் ராகவி.

அவள் இரு நாட்கள் கழித்து மருத்துவமனையில் கண் விழித்த போது, அவளுக்கு அருகில் இருந்த படுக்கையில் சுஹாசினி இருந்தாள். ஆனால், தெய்வநாயகி மகளையும், மகளாகவே வளர்த்தவளையும் காப்பாற்றி விட்டு அவர் மீண்டு வர இயலா ஆழத்தில் மூழ்கியிருந்தார்.

தன்னால் தான் ராகவியின் அம்மா இறந்து போனார் என்ற குற்றவுணர்வு சுஹாசினிக்கு, அதே குற்ற உணர்ச்சி தான் ராகவியையும் அரித்தது. அதிலிருந்து முழுதாக மீண்டு வர அவளுக்கு முழுதாக ஒரு ஆண்டுத் தேவைப்பட்டது.

அதற்கு முந்தைய வருடம் தான் தாயை இதய நோய்க்கு பறிகொடுத்து இருந்த சுஹாசினி, ராகவியைத் தனது உலகமாக்கி கொண்டாள்.

அவளுக்கும் ஒரு மூத்த சகோதரி இருக்கத் தான் செய்தாள். ஆனால், தன்னை விட ஐந்து வயது சிறிய சுஹாசினியை அவர் பெரிதாகக் கண்டு கொள்வது கிடையாது.

சுஹாசினியின் தந்தைக்கு இனி தான் மட்டும் தனியாக நின்று இரு பெண் பிள்ளைகளைக் கரையேற்ற வேண்டும் என்ற கவலை பெரிதாக எழுந்ததில், காசை சேர்த்து வைக்கும் குறிக்கோள் ஒன்றை மட்டுமே தனது வாழ்க்கையாக்கி கொண்டார்.

பனிமலர் வீட்டில் இரண்டு அண்ணன்கள் என்பதால், இயல்பாகவே தன் வயதில், தன் வகுப்பில் என்று எல்லா விதத்திலும் பொருந்தி போன ராகவியின் குடும்பத்தில் ஒருத்தியாகி இருந்தாள் சுஹாசினி.

தெய்வநாயகியின் இறப்பிற்குப் பிள்ளைகளைக் குற்றம் சுமத்தவேயில்லை பெரியவர்கள்.

கண்ணதாசன், விசாலாட்சியும் சரி. மனைவியைப் பறி கொடுத்த சிதம்பரமும் சரி. பிள்ளைகளைக் காப்பாற்ற முடிந்ததே என்று நிம்மதி தான் கொண்டனர்.

தான் அங்கே இருந்தும் கூட மனைவியைக் காக்க முடியவில்லையே. அவளுக்கு உதவ முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியில் அவரும் பல நாட்கள் தவித்துப் பின் மீண்டு வந்தார்.

அந்நிகழ்விற்குப் பின் ராகவியை இன்னும் அதிகப் பாசமாக, அக்கறையாக வளர்த்தார்களே ஒழிய, எந்நிலையிலும் வெறுப்பைக் காட்டியதே இல்லை பெரியவர்கள்.

அழுகையில் குலுங்கிக் கொண்டிருந்த மனைவியின் முதுகை மெல்ல தட்டிக் கொடுத்தான் உதய்.

“ஷ்ஷ், அழாத பட்டே. நீங்களும் அப்போ சின்னப் பிள்ளைங்க தானே? தெரியாம செய்தது. விடுடா. அழக் கூடாது பட்டே. அம்மா இந்நேரம் இங்கே இருந்திருந்தா, உன்னை இப்படிப் பார்த்தா சந்தோஷப்படுவாங்களா சொல்லு?”

பேசி பேசியே மெல்ல அவளை இயல்புக்கு மீட்டு வந்தான். அழுது, அழுது ஓய்ந்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.

ராகவிக்குத் தாயின் இன்மை தெரிய கூடாது என்று சுஹாசினியும், சுஹாசினி தன் தாயின் மரணத்திற்கு அவள் தான் காரணம் என்று மறுக கூடாது என்று ராகவியும் பெரிதும் கவனம் எடுத்தனர்.

ஒருவரை ஒருவர் உயிராகப் பார்த்துக் கொண்டனர். நாளடைவில் அதுவே பழகி அவர்களின் இயல்பாக மாறி இருந்தது.

சுஹாசினியை, பனிமலர், “தாய்க் கோழி” என்று கிண்டல் செய்து விளிக்கும் அளவுக்கு, எப்போதும் ராகவியை ஒரு தோழியாகத் தன்னால் முடிந்த மட்டும் எந்தச் சூழலிலும் பாதுகாத்து உடன் நின்றாள் சுஹாசினி.

சுஹாசினி மேல் மனைவி காட்டும் அதீத பாசம், உதய்கு நிறையப் பொறாமையையும், கொஞ்சம் கோபத்தையும் கொடுக்கவே செய்தது. இன்று அது பெரிதும் மட்டுபட்டிருந்தது.

காலையில் அவள் எழுந்ததும் முதல் வேலையாக அந்தக் கேள்வியைக் கேட்டான் உதய்.

“சுஹாசினிக்கு நேத்து என்னாச்சு பட்டே?”

மெல்லிய தயக்கத்துடன் அவனை ஏறிட்டு, “அவளோட அக்கா மூனு வருஷத்துக்கு முன்னாடி அவங்க விரும்பினவரை கல்யாணம் பண்ணிட்டு வீட்டை விட்டு போய்ட்டாங்க” என்றாள்.

“ஓ…”

“இப்போ, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அவங்க இறந்துட்டாங்களாம்.”

“எப்படி?” என்றான். போலீஸ் மூளை சுறுசுறுப்பாக இயங்கி கேள்வி கேட்டது.

“தெரியல, அவ சொல்லலை. இன்னைக்கு அவளை நேரில் பார்த்து, என்னனு கேட்கணும். ம்ப்ச்.. கடைசியா இவ பேசும் போது, ஆறு மாசம் முன்னாடி, அவங்க அக்கா கர்ப்பமா இருந்தாங்க உதய்” என்றாள்.

“ஐயோ பாவம். அப்போ குழந்தை?”

“அவ அதைப் பத்தி ஒன்னும் சொல்லலைன்னு, சொன்னேன் இல்ல” என்றாள்.

“சரி, சரி. அவகிட்ட பேசு. எதுவும் ஹெல்ப் வேணும்னா என்கிட்ட கேட்க சொல்லு? சரியா பட்டே?” என்றான்.

புன்னகையில் மலர்ந்த முகத்துடன், “சரி” என்றாள் ராகவி.

அதற்குப் பின் அவர்களைக் காலை நேர பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

அறைக் கதவு தட்டப்படும் சத்தத்தில் கலைந்த ராகவி, புருவம் சுளித்து, யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, கதவை திறக்கப் போனாள்.

ரிசார்ட்டின் பணியாளர் வெளியில் நின்றிருந்தார்.

“லஞ்ச் மேம்”

“வேண்டாம். பசியில்ல” என்று விட்டு, கதவை மூடப் போனாள்.

“ஆல்ரெடி ஆர்டர் பண்ணிட்டாங்க மேம். நான் டெலிவர் பண்ண தான் மேம் வந்தேன்” என்றார்.

“ஓகே” என்று கதவை விரிய திறந்து வைத்தாள்.

அறையில் இருந்த காஃபி டேபிளில் அனைத்தையும் எடுத்து வைத்து, “என்ஜாய் யுவர் மீல் மேம்” என்று விட்டுப் போனார்.

பாத்திரங்களைத் திறந்து பார்த்தாள். அத்தனையும் அவளுக்குப் பிடித்ததாகவே இருந்தது. தனக்குத் தேவையானதை தட்டில் பரிமாறிக் கொண்டு, உண்ணத் தொடங்கினாள்.

error: Content is protected !!
Scroll to Top