நற்காதல் நெய்திடவா – 10 (2)

தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்க, உலகம் மறந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மாவின் பக்கத்தில் சென்று அமர்ந்தான் வெற்றி.

மறுபக்கம் அப்பாவும், தங்கையும் அமர்ந்திருக்க அவர்களையும் தலையைச் சாய்த்து எட்டிப் பார்த்தான் அவன்.

“என்ன? பூனை பாலை திருட அடுப்படியை எட்டிப் பார்க்கிற மாதிரி, ஒருத்தன் எட்டி எட்டி பார்த்திட்டு இருக்கான்? என்ன விஷயம்?” ரேவதி மகனை திரும்பிப் பார்க்காமலேயே கேட்க, அதிர்ந்து பின் சிரித்தான் வெற்றி.

சுந்தரம் மற்றும் சுவேதா இருவரும் சிரிக்க, ரேவதி மூவரையும் முறைத்து, “என்னடா விஷயம்? என்ன பண்ணிட்டு வந்திருக்க?” பல வருடங்களுக்குப் பின், அவன் நன்றாக வளர்ந்த பின்பு டா போட்டு அவர் அழைக்க, மிரட்டி கேள்வி கேட்க, வெற்றியின் முகத்தில் நிறைந்த புன்னகை.

தலையைப் பின்னுக்குச் சாய்த்துச் சத்தமாகச் சிரித்து, கண்ணைச் சுருக்கி, காரியம் சாதிக்கும் கள்ளத்தனத்துடன் அம்மாவை பார்த்தான் வெற்றி.

“யார் அந்தப் பொண்ணு?” ரேவதி நேரடியாக மகனின் முகம் பார்த்துக் கேட்க, ஒரு நொடி தடுமாறிப் போனான் அவன்.

“அப்பாகிட்ட பொண்ணு பார்க்க வேணாம்னு நீ சொன்ன போதே இந்தப் பூனையை நான் எதிர்பார்த்தேன். இப்போ வெளில வந்துடுச்சு இல்ல? சொல்லு? யார் அது?” மென்மையாய் புன்னகைத்து கேட்டார். அந்தப் புன்னகை அவனை இயல்பாக்கியது.

வெற்றி அப்பாவை பார்க்க, “என்னை என்ன வெற்றி பார்க்கற? நீதான் என்கிட்ட பொண்ணு யாருனு எதுவும் சொல்லலையே?” என்று பதில் சொல்லி மகனை சரியாகக் காட்டிக் கொடுத்தார் சுந்தரம்.

“அப்பா” என்று பல்லைக் கடித்தான் அவன்.

“சரி, பொண்ணு யாருனு சொல்லு. பொண்ணு பேர் என்ன? என்ன பண்றா? எந்த ஊர்?” ரேவதி வரிசையாகக் கேள்விகளை அடுக்க, “வேதவர்ஷினி. எங்க பேங்க்ல அசிஸ்டன்ட் மேனேஜர்.” என்று அம்மாவுக்கான பதிலைக் கொடுத்தான் வெற்றி.

அவன் வீட்டினரின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி ரேகைகள்.

“அந்தப் பொண்ணா? அன்னைக்கு உன் கேபின்ல பார்த்தேனே? நீ ஒன்னுமே சொல்லல வெற்றி?” அப்பா கேட்க, “அப்போ எங்களுக்குள்ள எதுவுமே இல்லப்பா.” என்றான் அவன்.

“இன்னைக்குக் காலைலதான் அவ என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதமே சொன்னா ப்பா”

“அப்படியா? உடனே அம்மாகிட்ட விஷயத்தைச் சொல்ல வந்துட்ட? அவ்ளோ நல்லவனா தம்பி நீ?” ரேவதி மகனை முறைத்து கேட்க, “அவளுக்கு அவங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்கறாங்க மா. அதான் சிக்கல். அவங்க வீட்ல உடனே எங்க விஷயத்தைப் பேசணும். அதுக்கு முன்னாடி உங்ககிட்ட பேசிடலாம்னு…” என்று அவன் இழுக்க,

“அவங்க வீட்ல என்ன சொல்லுவாங்க அப்படின்றது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்க வேலை என்னாகுறது? நீங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில வேலை பார்க்கறீங்க‌. ஒன்னும் பிரச்சனை ஆகாதா?” அப்பா கரிசனத்துடன் கேட்டார்.

அவரின் கவலை அநாவசியமானது என்று அவருக்குப் புரிய வைத்தான் வெற்றி.

அவன் பெற்றோர்கள் ஒன்று விடாமல் அனைத்தையும் அவனிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொண்டு, புன்னகையுடன் அவன் காதலுக்கு, அவர்களின் கல்யாணத்திற்குப் பச்சைக் கொடி காட்டினார்கள்.

மறுநாள் வேதவர்ஷினி பச்சை வர்ண காஞ்சிப் பட்டில் அவர்களை வந்து சந்தித்தாள். வெற்றி அவளைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்தான்.

அவன் வீட்டின் முன் வந்து இறங்கியதும், வெற்றியிடம் ஏதோ வம்பு பேசி சிரித்து, குறும்பாகக் கண் சிமிட்டி, அவளின் கைப் பிடிக்கப் போனவனின் கையைத் தட்டி விட்டுப் பழிப்பு காட்டி, அவன் முறைக்கவும், கண்ணைச் சுருக்கி அவனை நெருங்கி தோளில் இடித்து, அவனோடு வீட்டை நோக்கி நடந்து வந்த பெண்ணைப் பார்த்து ரேவதியின் முகம் புன்னகையில் விரிந்தது. அவருக்கு அவளைப் பிடித்தது.

அவர்கள் வேதாவை ஏற்கனவே வெற்றியின் வங்கியில் வைத்துப் பார்த்திருந்தாலும், நெருக்கமாகப் பார்த்ததில்லை. அறிமுகப்படுத்திக் கொண்டதும் இல்லை. அதற்கு அவசியமும் இருந்திருக்கவில்லை. அவர்கள் இன்று அறிமுகம் மட்டுமல்லாது நெருங்கவும் செய்தார்கள்.

வெற்றியுடன் வீடு நுழையும் போதே அவனிடம் வம்பு வளர்த்து, வலது கால் எடுத்து வீடு நுழைந்த பெண்ணை, முழு மனதோடு அந்தக் கணமே மருமகளாக ஏற்றுக் கொண்டது அந்த வீடு.

தன் காதலை வீடு அங்கீகரிக்கும் என்பது வெற்றிக்கு நன்றாகத் தெரியும். அவனது பெற்றோரே காதல் திருமணம் எனும் போது, அவன் காதலுக்கு எப்படி மறுப்பு தெரிவிப்பார்கள்? எப்படித் தடையாக நிற்பார்கள்?

வெற்றி முறையாக வேதாவை தன் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தினான்.

வேதா அவளது இயல்பு போல முதலில் தயங்கினாள். தடுமாறினாள். ஆனால், எல்லாம் முதல் இருபது நிமிடங்களுக்குத்தான். அதன் பின் சிரித்துப் பேசத் தொடங்கி இருந்தார்கள்.

ரேவதி அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

நாளை எப்படியோ? ஆனால், இன்று மிக நட்பாக, இனிமையாகப் பேசிய, பழகிய பெண்ணை அவருக்குப் பிடித்தது.

அவரிடமும், கணவரிடமும் மரியாதையுடன் பேசியவள், அவர்களின் மகளுடன் நட்பாகப் பேசுவதைக் கண்டும் காணாதது போலக் கவனித்தார் அவர்.

இதையெல்லாம் விட வேதாவின் கண்கள் அடிக்கடி வெற்றியை நோக்க, அவனும் பதில் தர என்று அவர்கள் முன்னேயே தங்களுக்கான தனி உலகத்தை உண்டாக்கியவர்களைப் பார்க்கையில் அவருக்குச் சிரிப்பு வந்த அதே நேரம், அவர் மனம் நிம்மதியில், மகிழ்ச்சியில் அமைதியடைந்தது.

தன் பிள்ளைகளின் மகிழ்ச்சியை விட வேறென்ன பெரிய வேண்டுதல் ஒரு தாய்க்கு இருந்து விடப் போகிறது? மகனுக்காக மகிழ்ந்தார் அவர்.

“வேதா, வெற்றி எங்ககிட்ட உங்க வீட்டு நிலைமையை நேத்துச் சொன்னான். இப்போ நீ சொல்லு, நாங்க என்ன பண்ணனும்? உங்க வீட்டுக்கு நாங்களே நேரடியா வந்து பொண்ணு கேட்கவா?” என்று கேட்டவர்,

“இல்ல, என்ன பண்ணா சரியா இருக்கும்னு, உங்க அண்ணாகிட்ட பேசிட்டு சொல்றியா? நீயும், வெற்றியும் டிஸ்கஸ் பண்ணிட்டு எங்களுக்குச் சொல்லுங்க. ஓகே? என்ன நடந்தாலும் எங்க சப்போர்ட் உங்களுக்கு உண்டு. உங்க ஃபேமிலிகிட்ட பேசவும் நாங்க ரெடிதான்” வேதாவின் முகம் பார்த்து அவர் சொல்லிக் கொண்டே போக, சட்டென இடைப் புகுந்து அவருக்குப் பதில் சொன்னாள் வேதா.

“தேங்க்ஸ் அத்தை. நான் முதல்ல வீட்ல பேசிட்டு சொல்றேன், பிளீஸ். அப்பா, அம்மாக்கு நான் ஷாக் கொடுக்க விரும்பல” என்றாள்.

அவள் பேச்சில் இருந்த நியாயம் புரிய, சரியென்று தலையசைத்தார்கள்.

“அப்போ நாங்க போய் வேதா அண்ணாவை பார்த்திட்டு வர்றோம். நான் வேதாவை அப்படியே அவ வீட்ல விட்டுட்டு வர்றேன்” அம்மா, அப்பா இருவரையும் பார்த்துச் சொன்னான் வெற்றி.

வேதா அவர்களிடம் சொல்லிக் கொண்டு அவன் பின்னே செல்ல யத்தனிக்க, ரேவதி தன் வருங்கால மருமகளுக்குக் குங்குமமும், பூவும் வைத்து ஆசிர்வதித்து அனுப்பினார். வேதா நெகிழ்ந்துப் போனாள்.

பத்து நிமிடங்களில் வெற்றியும், வேதாவும் அம்பத்தூர் நோக்கி பயணித்தனர்.

இதற்கு முன்பு எத்தனையோ காரியங்களுக்கு அண்ணனின் உதவியை நாடி இருக்கிறாள் அவள். ஆனால், கல்யாணத்திற்கு? பலமுறை கல்யாண ஏற்பாட்டை நிறுத்ததான் உதவி கோரி இருக்கிறாள். முதல் முறையாக என் கல்யாணத்தை நீதான் நடத்தி வைக்க வேண்டும் என்று கேட்கப் போகிறாள். எல்லாவற்றுக்கும் முதல் முறை என்று ஒன்று உண்டல்லவா?

ஒருவித பயமும் பதட்டமும் அவளைச் சூழ, அவளுக்கு வியர்த்து வழிந்தது. முன் தினம் பெய்த மழைக்கும் சேர்த்து வைத்து இப்பொழுது காட்டு காட்டென்று காட்டிக் கொண்டிருந்தான் சூரியன். அவள் மனநிலையைப் போல வெயிலும் அன்று உக்கிரமாகத்தான் இருந்தது.

ஆனால், அவளைத் தணிக்க முயன்றான் வெற்றி.

“எம்மாடி வேதா, உங்க அத்தை வீட்டுக்கு வழி சொல்லு” வெற்றி கேட்க, சாலையின் வாகன சத்தத்தை மீறி அவனுக்குக் கேட்க வேண்டி கத்தி வழி சொன்னாள் வேதா.

“என்ன சொன்ன? கேட்கல?” அவனும் கத்த, அவன் பக்கமாகச் சாய்ந்து, “வீட்ல இருந்து கிளம்பும் போதே வழி சொன்னேன் தானே? இப்போ தெரியாத மாதிரி கேட்கறீங்க?” என்று அவன் தோளில் முகம் பதித்துக் காதில் கத்தினாள் வேதா.

வெற்றியின் உடலில் மெலிதான சிலிர்ப்பு. சிரித்தான் அவன்.

“எம்மாடி வேதா, காதலை சொன்னதுக்கு அப்புறம் இப்படிப் பார்டரில் உட்கார்ந்தா எப்படி? கொஞ்சம் பக்கத்துல வர்றது. நீ பின்னாடி இருக்கியா இல்லையானு எனக்கு எப்படித் தெரியும்?” வம்பு வளர்த்தான். அவனைச் சீண்ட, வீம்பாக இன்னும் பின்னே தள்ளி அமர்ந்தாள் வேதா.

வெற்றி வண்டியின் வேகத்தைக் குறைத்தான். அந்த வேகத்தில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்வதைக் காட்டிலும், இறங்கி நடந்து விடலாம். அப்படியொரு அசுர வேகம். அவளுக்குக் கோபமும், சிரிப்பும் சேர்ந்தே வந்தது.

“ரொம்பப் பண்ணாதீங்க. என்கிட்ட அடி வாங்கப் போறீங்க. ஒழுங்கா வண்டி ஓட்டுங்க வெற்றி சார்”

“இந்தச் சாரை விட மாட்டேங்கறா. சார் சொல்றதையும் கேட்க மாட்டேங்கறா” அவளுக்குக் கேட்க வேண்டும் என்றே தலையைச் சரித்து, அவள் பக்கமாகச் சாய்ந்து சொன்னான்.

“ஐயோ, ரோட்டை பார்த்து வண்டியோட்டுங்க” என்று அவன் தோளில் அடித்தாள்.

“நீ ஒழுங்கா உட்காரு முதல்ல. அப்பதான் என்னால ஒழுங்கா வண்டியோட்ட முடியும்” வேகத்தைக் கூட்டியபடி சொன்னான் வெற்றி.

“ம்ஹூம். முடியாது”

“எல்லாத்துக்கும் இதே பதில் தானா?” என்று சீண்டியவனைத் தோளில் அடித்து அவனை இடித்துக் கொண்டு, நெருக்கமாக அமர்ந்தாள்.

சரியாக அந்நேரம் வெற்றி வாகனத்தை நிறுத்தினான். அவன் மேல் மோதி, தன்னை நிதானப்படுத்திக் கொள்ள, அவனை இறுக்கி பிடித்தாள் வேதா.

“உங்களைப் போய் நல்லவர், அப்பாவின்னு நினைச்சேன் நான். ஆனா..”

“லவ் பண்ற எல்லாவனும் அடப்பாவிதான் மா.” என்று கண் சிமிட்டியவனின் கண்களில் காதல் நிறைந்திருந்தது.

வெற்றி வண்டியின் முன் பக்கத்தில் இருந்த, அவளின் அத்தை குடும்பத்திற்காக, அண்ணிக்காக வாங்கிய இனிப்பு, பழங்கள், பூக்கள் அடங்கிய பையை எடுத்து வேதாவிடம் நீட்டினான்.

“இன்னைக்கே உங்க அண்ணாகிட்ட பேசணும்னு அவசரம் இல்ல வேதா. ஜஸ்ட் அவங்களைப் பார்த்திட்டு வா, போதும். அப்படியே பேசணும்னாலும் பயப்படாம, பதறாம, உங்க அண்ணாகிட்ட பேசு. ஓகே? என் காதல் உனக்குப் பலத்தைதான் கொடுக்கணுமே தவிர, உன்னைப் பலவீனமாக்கக் கூடாது. நீ தைரியமா இரு. என்ன வந்தாலும் பார்த்துக்கலாம். உன் கூட எப்பவும் நான் இருப்பேன்” காதோடு சேர்த்து அவள் கன்னம் பற்றி, அவள் கண்களைப் பார்த்து பேசிய வெற்றியை பிடிக்க அவளுக்குக் காரணங்கள் சேர்ந்து கொண்டே போனது.

“நான் இந்த ஏரியாவிலதான் இருப்பேன். நீ கிளம்பும் போது கால் பண்ணு, நான் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன். ஓகே?” வெற்றி கேட்க, சம்மதமாகத் தலையசைத்தாள் வேதா.

அவனைப் பார்த்துக் கொண்டே விலகி, மூன்று வீடுகள் தள்ளியிருந்த அவளின் அத்தை வீட்டை நோக்கி நடந்தாள் வேதா. அத்தை வீட்டுப் பால்கனியில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவளின் அத்தை மகள், விஜயின் மனைவியாகிய அவளின் அண்ணி.

error: Content is protected !!
Scroll to Top