சென்னையின் இரவுகளைக் குளிர் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது.
பிரியதர்ஷினிக்கு குளிர் ஆகாதே, ஆகவே கதகதப்பு வேண்டி கணவனை நெருங்கி அவன் கைகளுக்குள் சுருண்டாள்.
மறுகணம் அவளைத் தனக்குள் சுருட்டிக் கொண்டான் அவன்.
மென்மையாய் மோகம் படித்து முத்தங்களால் அவளை நிறைத்தான்.
“தூங்கலையா நீங்க?” மூச்சு வாங்க கிசுகிசுப்பாகக் கேட்டாள்.
“ம்ம்ம் பொறுமையா தூங்கலாம். நீ பக்கத்துல இருக்கும் போது உன்னைக் கொஞ்சாம கண்ணை மூடினா தூக்கம் கூட என் பக்கத்துல வர மாட்டேங்குது பிரியா” என்றான் அடர்ந்த குரலில்.
அதற்குக் கிளுக்கி சிரித்து, “பிரபாவுக்குப் பேசவா சொல்லித் தரணும். இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே என்னைக் கொஞ்சுனீங்க” என்று வெட்கமும் கூச்சமும் போட்டியிட கேட்டாள்.
அவள் சொன்னதில் அன்னப்பறவை போல அவனுக்குத் தேவையான பதிலை மட்டும் எடுத்துக் கொண்டு, “உனக்குப் பேச்சு மறக்க வேணா நான் சொல்லித் தரவா?” என்று அடிக்குரலில் கிசுகிசுப்பாகக் கண் சிமிட்டி அவன் கேட்க, அவன் கழுத்தில் கரம் கோர்த்து நெருக்கமாக இழுத்து, அவன் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டிருந்தாள். இப்போது அவனுக்குப் பேச்சு மறந்துப் போக, மூச்சின் வேகம் கூடியது. அறையில் மோக அலை கரை உடைக்க, காதலின் கைப் பிடித்துக் கவிதையாய் ஓர் கூடலை கொண்டாடி தீர்த்திருந்தார்கள்.
பிரியதர்ஷினி சுக அயர்ச்சியுடன் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தாள்.
என்னவோ அன்றிரவு அவனை உறக்கம் அண்டவே இல்லை. எப்போதும் போல நிறைவான கூடலுக்குப் பின்னர் உடலும் மனமும் தளர்ந்து இறகை போல லகுவாகி இருக்க வேண்டும். ஆனால், இன்று அப்படியில்லை. சமீபமாக இப்படித்தான் உணர்கிறான். மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து தவிக்கிறது. மனைவியின் அண்மையில் மட்டுமே அவனுக்கு அமைதி கிட்டுகிறது. அவன் தேடிய, அவன் தவித்த அமைதி அவளுடன் இருக்கையில் மட்டுமே சாத்தியமாகிறது. அது அவளுக்கும் தெரிகிறது. அவளும் அதை உணர்ந்தே இருப்பது போல அவனும் உணர்ந்தான்.
அவனை எப்போதும் போல அரவணைத்து கொள்கிறாள். பிரபஞ்சனின் கரம் மென்மையாய் மனைவியின் தலைக் கோதி கொண்டிருந்தது. ஆழ்ந்த உறக்கம் தந்த அமைதியில் கலைந்த ஓவியம் போல அவன் கண்களுக்குத் தெரிந்தாள் மனைவி. அவனது பொக்கிஷமான ஓவியம் அவள். அவன் வரைந்த ஓவியம். அவன் உதடுகள் மெலிதாகப் பிரிந்து முறுவலித்தன. தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் மனைவியை நெருங்கி அவள் கன்னத்தில் ஈரமாய் இதழ் ஒற்றினான்.
கன்னம் தொட்ட உதடுகள் கட்டுப்பாடில்லாமல் அவள் உதடுகளை நெருங்கின.
“பி..ர..பா” அவன் இதழ்களுக்குள் முணுமுணுத்தாள் அவள். மெல்ல அவனை விலக்கி, லேசாகத் தலையை உயர்த்தி அவன் முகம் பார்த்து, “என்ன? தூக்கம் வரலையா உங்களுக்கு?” என்று உறக்கம் சுமந்த விழிகளுடன் வினவினாள்.
“ம்ஹும்” என உதடு பிதுக்கி அவள் உதட்டை வருடினான்.
“ஒரு டிரைவ் போகலாமா?”
“போகலாமே” என்று சிரித்தவன் முகம் அவள் முகத்துக்கு நேராக வந்திருந்தது.
“பிரபா.. பிச்சுடுவேன் உங்கள. பேட்ஸ்மேன் டையர்ட்டாக என்னைக் கிரவுண்ட்டா யூஸ் பண்றீங்களா?” என்று கேட்டு முறைத்தாள். அவனோ சிக்கி கொண்ட பாவத்துடன் பரிதாபமாக முழித்தான்.
“என்ன முழிக்கறீங்க? ஆமாதானே?” என்று கிடுக்குப்பிடி போட்டாள்.
“ப்ச், போ பிரியா” என்று புரண்டு படுத்தவனை இழுத்து அணைத்தாள். தேவைகள் சேவைகளால் நிறைவேற்றப்பட்டன. இப்போது பிரபஞ்சன் அலைப்புறுதல் அகன்று ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திட, பிரியதர்ஷினி கொட்ட கொட்ட கண் விழித்துக் கிடந்தாள். அவள் மனம் கணவனைக் குறித்து யோசித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தது.
அவன் மறுப்பான், முரண்டுவான் என்பதை அவள் அறிவாள். ஆனால், இம்முறை அவனுக்கு அவள் கட்டுப்படுவதாக இல்லை, மறுக்க வாய்ப்பு கொடுப்பதாகவும் இல்லை.
அவளின் முடிவில் இருவரின் நலனும் அடங்கி இருக்கிறதே. அதனால் துணிந்து தன் முடிவை செயல்படுத்த துணிந்தாள்.
அதிகாலையில் எழுந்து முதல் வேலையாகப் பார்த்திபனை அழைத்திருந்தாள்.
“ஹலோ, என்னம்மா இந்நேரம் கால் பண்ணி இருக்கீங்க? ஆல் ஓகே? எதுவும் பிரச்னை இல்லையே? பிரபா எங்க?” என்று பதறி பரபரத்தான் பார்த்திபன்.
“அண்ணா..”
“என்ன பிரியதர்ஷினி? என்னாச்சு?”
“காம் டவுன் அண்ணா. நான் பிரச்சனைன்னாதான் உங்களுக்குப் போன் பண்ணணுமா?”
“ஓ, அப்போ பிரச்னை எதுவும் இல்லையா?” என்று அவன் சந்தேகமாகக் கேட்க, “நான் உங்ககிட்ட பேச கூப்பிட்டேன் ண்ணா” என்றாள்.
“அப்படியா? என்ன பேசணும்?” அவன் நம்புவதாக இல்லை.
“உங்க பிரபா எப்படி இருக்காங்க?”
“அதை நீதான்ம்மா சொல்லணும்” என்று வேகமாகச் சொல்லி விட்டு, “அச்சோ அவனை எங்க?” என்று தடுமாற்றத்துடன் கேட்டான்.
“என் பிரபா நல்லா தூங்கிட்டு இருக்கார். நான் கேட்டது உங்க ஃபியான்சி பிரபா.. பிரபாவதிய பத்தி” என்றாள் போலி கோபத்துடன்.
“அச்சோ.. பிரபா.. அவங்களைக் கேட்டீங்களாம்மா. நல்லா இருக்காங்க.” என்ற அவன் குரலில் புன்னகை இருந்ததை அவளால் உணர முடிந்தது.
“அண்ணா இன்னைக்கு உங்க டீம்க்கு மேட்ச் இருக்கா?”
“இருக்கேம்மா. ஏன் கேட்கறீங்க?”
“அதுக்கு இவரை வந்து கூட்டிட்டுப் போறீங்களா பிளீஸ்?”
“அவன் வர மாட்டேன்னு பிடிவாதம் பிடிப்பானேம்மா” என்று நண்பனை பற்றி நன்கு அறிந்தவனாகக் கடுப்புடன் சொன்னான்.
“நீங்க வீட்டுக்கு வாங்க. அவரை உங்க கூடக் கிரிக்கெட் ஆட கிரவுண்ட்டுக்கு கிளப்ப வேண்டியது என் பொறுப்பு” என்றாள் உறுதியாக.
“சரிம்மா” என்று சிரிப்புடன் சொல்லி அழைப்பை துண்டித்தான் பார்த்திபன்.
பிரபஞ்சன் எப்படித் தன் பிரியத்தின் பேச்சை கேட்காமல் இருப்பான்? அத்தனை நாள் வீம்பாக மறுத்தவன், இன்று மனைவியின் கலங்கிய கண்களைக் கண்டதும் அவன் மனம் கலங்கிடவும் யோசிக்கத் தொடங்கினான்.
“நீங்க உங்களை ஹர்ட் பண்ணி, அதுனால என்னையும் சேர்த்து ஹர்ட் பண்றீங்க பிரபா. பிளீஸ் இப்படிப் பண்ணாதீங்க. உங்களுக்குப் பிடிச்சதை செய்யாதீங்கன்னு நான் என்னைக்கும் உங்களைத் தடுக்க மாட்டேன் பிரபா. இப்போதான் உங்களுக்குக் கால் சரியாகிடுச்சே, அப்புறம் என்ன? இன்னும் எதுக்காகத் தயங்கறீங்க நீங்க?” என்ற அவளின் கேள்விகளும் கண்ணீரும் அவனை அசைக்க, அவள் முகத்தைக் கையில் ஏந்தி, “சாரி பிரியா” என்றான் மனதார.
அப்போதே அவனுக்காகக் காத்திருந்த நண்பனுடன் கிரிக்கெட் விளையாட சென்று விட்டான். அப்போது தொடங்கிய அவனது பல வருடத்தைய பழக்கம் திரும்பவும் வாரா வாரம் எனத் தொடர்ந்தது.
இப்போது வார இறுதிகளில் கிரிக்கெட் விளையாட சென்றாலும் மனைவி அழைத்தால் ஓடி வந்து விடுவான் என்ற எதிர்பார்ப்பு பிரியதர்ஷினிக்கு இல்லை. அவள் அழைத்தாலும் அவனது ஆட்டம் முடிந்துதான் வீடு திரும்புகிறான் அவன்.
பார்த்திபன் அவசரம் என அழைத்தால் பறந்துதான் போகிறான். அவர்களது நட்பின் ஆழம் புரிந்து, கோபம் வந்தாலும், அவர்களை நாலு திட்டு திட்டி விட்டு அமைதியாகி விடுகிறாள் பிரியதர்ஷினி. ஏனென்றால் பிரபஞ்சன் வாழ்வில் அவை எல்லாவற்றையும் விட அவள்தான் முக்கியம் என அனுதினமும் அவளுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தான் அவன்.
அந்தப் பிரியத்தின் முன் பிரச்சினைகள் சிறியதாகி விட, பிரச்சினைகளைப் பால்கனியில் பறவை ஜோடிகளைப் பார்த்தபடி ஓய்வாக அமர்ந்து மனம் விட்டு பேசி சரி செய்து விடுகிறார்கள் இருவரும். ஆகவே அவர்கள் வாழ்க்கை நீரோடை போல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் சீராகவே சென்றது.
ஒன்றரை மாதங்கள் கழித்து..
“பிரியா, எங்க டீம் டோர்னமென்ட் வின் பண்ணிடுச்சு” என்று ஆர்ப்பரித்து அவளிடம் அவர்கள் அணியின் வெற்றி செய்தியை பகிர்ந்தான் பிரபஞ்சன்.
அவனைத் திரும்ப விளையாட அனுப்ப அவள் செய்த சாகசங்கள் அவளுக்குத்தானே தெரியும்.
ஆகவே அகமகிழ்ந்து, “வாவ் பிரபா” என்று ஆர்ப்பரித்தாள்.
மரகதவல்லி அதைக் கேட்டதும் மலர்ந்து புன்னகைத்தார். மகனுக்குப் பிடித்ததை அவன் மீண்டும் செய்வதில் தாயாக மகிழ்ந்தார் அவர்.
அறையின் தனிமையில், “கங்கிராட்ஸ் மிஸ்டர் பி” என்று அவன் தோளை சுற்றிக் கைப் போட்டு அவள் முத்தமிட்டு சொல்ல, அவளின் இடையில் கரம் கோர்த்து இறுக அணைத்தான் அவன்.
அவளை முத்தமிட்டு மொத்தமாய்க் கொள்ளையிடும் காதலில் இறங்கினான்.
அவளும் மயங்கி கிறங்கி அவன் காதலில் கரைந்து அவன் கையில் உருக, “பிரியா” என்று கிசுகிசுத்தான்.
“ம்ம்ம், பிரபா..”
“உனக்கு இன்னைக்கு டேட்டா இருக்கும். நான் தள்ளி இருக்கணும்னு நினைச்சேன்” என்று கேள்வியாக அவள் கண்களைக் கூர்ந்தான்.
“என்ன டேட்?” என்று குழப்பத்துடன் கேட்டாள் அவள்.
“ம்ம்ம்” என்று உறுமியவனுக்குச் சிரிப்பு வந்து தொலைத்தது.
“அந்த டேட்” என்று கண் சிமிட்டினான்.
அவன் கண்கள் வெளிப்படுத்திய செய்தி அவளுக்குச் சற்றே விளங்கிட, “அதுவா பிரபா?” என்று அவனிடமே சந்தேகம் கேட்டாள்.
“ம்ம்ம்” என்று நெற்றி முட்டினான்.
“ஆமா, பிரபா. இந்நேரம் எனக்கு டேட் வந்திருக்கணும் இல்ல?” என்று தீவிர யோசனையுடன் சந்தேகம் கேட்டாள்.
“ஐயோ.. உன்னோட” இப்போது அவளைப் போலவே புலம்புவது அவன் முறையானது.
“போன மாசம் பத்தாம் தேதி வந்ததா..” என்று அவன் எடுத்து கொடுக்கவும், “அப்போ இந்த மாசம் வரலையா.. லேட்டா வருமா இருக்கும் பிரபா” என்று அசட்டையாகச் சொன்னாள்.
“இதெல்லாம் நார்மல்தானே?” என்று அவள் இயல்பாகச் சொல்ல, “ஆனா நான் ரொம்ப அப்நார்மலா உன்கிட்ட நடந்துக்கிட்டேனே பிரியா. அப்புறம் எல்லாம் உனக்கு எப்படி நார்மலா நடக்கும்?” என்று அவள் நாடியை உயர்த்தி எதிர்பார்ப்புடன் கேட்டான் பிரபஞ்சன். பிரியம் தன் பிரபஞ்சத்தைப் புதிராகப் பார்த்தது. பிரபஞ்சன் பிரியத்தின் புரியாத பார்வையைக் கண்டு புன்னகைத்தான்.