Skip to content
அத்தியாயம் 12
விடுதிக்கு எபி வந்து சென்ற பிறகு அலர்விழியால் அங்கு தனித்திருக்க முடியவில்லை. விருப்பம் நிறைவேறப் போவதில்லை என்று தெரிந்த பின்னும் பின்வாங்க மனதிற்குத் தெரியவில்லை.
எபி பற்றிய எண்ணங்களுக்கு விடுப்பு கொடுக்க, சௌமியோடு விளையாட்டு மைதானம் கிளம்பினாள். விளையாடிக் களைத்து மரத்தடி பெஞ்சில் அமர்ந்தாள். கண்கள் மூடியவள் முன் எபி தோன்றி மறைந்தான். அவன் நினைவு வேண்டாம் என்று மனதை மூடினாள். ஆனால் மூடிய இதயக் கதவுக்குள்ளிருந்து “மிஸ் மீ?” என்றான். பெண்ணிடம் பதிலில்லை.
“அக்கா போகலாமா?” என்று வந்து நின்ற சௌமியோடு மௌனமாகக் கிளம்பினாள்.
விளையாடி முடித்து, களைப்போடு விடுதி திரும்பியவள் நேரே அறைக்குச் செல்ல அவள் அறையிலிருந்த பக்கத்து மெத்தைக்கு ஆள் வந்திருக்கும் அறிகுறிகள் தென்பட்டது. யாராக இருக்கும் என்ற ஆர்வம் எழவில்லை. தனித்து விடாமல் பேச்சுத் துணைக்கு ஆள் இருந்தால் போதும் என்பது அவளின் தற்போதைய மனநிலை.
ஜானகி ஆன்ட்டி அறையைத் தவிர அனைத்து அறைகளிலும் மூன்று மெத்தைகள் இருக்க, இவள் தங்கும் அறையில் இரண்டு மட்டுமே. மற்றது எப்பொழுதும் காலியாகவே இருக்கும். ஆக, இன்று வரை அவள் மட்டும் தான் அந்த அறையில். அறையின் சாவி அலுவலக அறையில் இருக்கும் என்பதால் ஜானகி ஆன்ட்டியால் அவளில்லாத நேரத்திலும் அறையைத் திறக்க முடியும்.
குளித்து, உண்டு, மொட்டை மாடிக்குச் சென்று, விளையாடியதால் வேர்வையில் நனைந்த துணியைத் துவைத்து காயப்போட கொடி அருகில் வரவும் மீண்டும் அவன் தான் நினைவில். என்ன செய்தால் அவனை மறக்கலாம்? தெரியவில்லை பெண்ணிற்கு!
நிலவை வெறித்தாள். வானத்து நட்சத்திரங்களை எண்ணினாள். மொட்டை மாடியின் நீளம், அகலம் அளந்தாள். துணிக் கல்லின் எண்ணிக்கையும், கோடிகளின் எண்ணிக்கையும் கணக்குப் பார்த்தாள். அனைத்து கணக்கும் சரியாக இருந்தது, எபி என்ற கிறிஸ்துவன் அவள் வாழ்வில் எப்படிப் புகமுடியும் என்ற கணக்கு மட்டும் தகராறாய்ப் போனது. அவளே எதிர்பார்க்கவில்லை, அவனைப் பிரிய நினைப்பது வேதனையைத் தருமென்று!
வேதனை அனுபவிக்கும் மனம் எதையோ தேடித் தவித்தது. கைச்சுவர் அருகில் வந்தவள் மெல்ல எட்டிப் பார்த்தாள். என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவன் எப்படி அங்கு நிற்பான்? புத்தியும் தெளிவாக இல்லை… மனமும் ஒரு நிலையில் இல்லை.
ஆனால்… அது அவன் தானே? அவன் போல் தான் தோன்றியது. சட்டென்று மூச்சு அடைப்பது போல் தோன்றியது. அதே நேரம் மூச்சு சீரானது போலும் தோன்றியது. ‘முத்திப் போச்சு டி உனக்கு!’ கண்களைக் கசக்கிப் பார்த்த பின்னும் அவன் தெரிந்தான். ‘இன்னும் முத்தல’ மெல்ல சிரித்துக் கொண்டாள்.
ஜான்சனுக்கு ஏதோ தின்னக் கொடுத்துக் கொண்டே ஜானகி ஆன்ட்டியிடம் நின்று பேசிக் கொண்டிருந்தான். மனம் வேறு விதமாகத் தவித்தது.
‘மனோ…’ கத்தி அழைக்கத் தோன்றியது. வாய் வரை வந்த வார்த்தையை விழுங்கினாள். ‘மேல பாரு மனோ… மேல பாரு மனோ…’ தவிப்பில் தத்தளித்தவள், நிறுத்தாமல் ஜெபித்தாள். ‘தலை தூக்கி என்னை இவன் பார்த்துட்டா, நாங்க ஒண்ணு சேர்ந்துடுவோம்!’ முடிவே செய்துவிட்டாள்.
ஜானிகி ஆன்ட்டியிடம் விடை பெற்றவன், உள்ளே நின்று கொண்டிருக்கும் யாருக்கோ கை அசைப்பது தெரிந்தது. ஜான்சனைத் தட்டிக் கொடுத்தவனின் பார்வை சுற்றும் முற்றும் சென்றது. என்ன நினைத்தானோ… சட்டென்று மேலே பார்க்க, நிலவு ஒளியில் அவனையே பார்த்து நின்றவளைக் கண்டு கொண்டான்.
பல்வரிசை தெரிய அழகான புன்னகை சிந்த, பெருத்த நிம்மதியை அடைந்த உணர்வு அலர்விழிக்கு! தவிப்பு அடங்கியது. பெண் தன்னை மறந்து அவனுக்குக் கையசைத்தாள்.
சிரித்து தலை கோதிச் சென்றவன் இரண்டடிக்கு ஒரு முறை தலை உயர்த்தி மாடியைப் பார்த்தான். அவள் ஆகாசத்தில் பறந்தாள். ‘மனோ…’ அடித்துக் கொண்ட அவள் இதயம், அவன் தலை மறையவும் தான் இயல்பிற்கு வந்தது. அதன் பின் மீண்டும் மூளை விழித்துக் கொண்டது.
‘இவன இப்படிப் பார்த்துத் தொலைச்சா எங்க இருந்து இவன மறக்க…? சாமி, தயவுசெஞ்சு கொஞ்ச நாளுக்கு இவன என் கண்ணுல காட்டாத. மனோக்கு ஏதாவது ஒரு நல்ல வேலைய குடு. இங்க இருந்து முதல்ல மனோவ கிளப்பு சாமி. இவன இப்படி பாத்துட்டே இருந்தேன்… நானே போய் லூசு மாதிரி ஏதாவது உளறி வச்சுடுவேன்.
அப்புறம் என்னைப் பிடிச்சு அம்மா கிணத்துல தள்ளி விட்டுடுவாங்க. படிப்பும் போய், எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனுக்கு சேவகம் பண்ண வேண்டியதாப் போயிடும். என்னைக் காப்பாத்து சாமி! இவன என் கண்ணுல காட்டாத, ப்ளீஸ்!’ மனமில்லாமல் ஒரு வேண்டுதல் வைத்தவள் மீண்டும் மொட்டை மாடியை அளக்க ஆரம்பித்தாள். அவளோடு சேர்த்து குதித்துக் கொண்டே மாடியை அளக்க ஜான்சன் வாலை ஆட்டிக்கொண்டு வந்தான்.
சிறிது நேரம் அப்படியே யோசனையும், யோசனை இல்லாமலும் மந்தமாகக் கழிந்தது. அறைகளில் விளக்கு அணைப்பட ஆரம்பிக்கவும் கீழே அவள் அறைக்கு வந்தாள். அம்மா வயதிலிருக்கும் பெண்மணியை அவள் அங்கு எதிர்பார்க்கவில்லை.
வெள்ளை உடை அணியவில்லை என்றாலும் கிறிஸ்தவர் என்பது அவர் கையிலிருந்த வேதாகமம் கூறியது. முட்டி போடாமல் இருந்த வாக்கிலேயே குனிந்து ஜெபித்துக் கொண்டிருக்கவே அவர் முகம் தெரியவில்லை.
“பாப்பா… இந்த அல்லேலூயா கூட்டம் கிட்ட ஜாக்கரதையா இருக்கணும். அவங்களது மட்டும் தான் சரின்னு சொல்லி நம்மள மாத்திடுவாங்க. அவங்க கூட எல்லாம் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காத.” அம்மா கூறியது இவரைப் பார்த்ததும் நினைவில் வந்தது.
குனிந்திருந்தவர் முகம் பார்க்க ஆசை எழ… அவள் தலை கவிழ, அதே நேரம் அவர் தலை நிமிர ‘அச்சோ…’ என்று அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள். களையான இன்முகம். பருமன் இல்லாமல் குச்சியாகவும் இல்லாமல் அளவான தேகம். அவரை அவள் ஆராய, “ஹாய் அலர்விழி, ஹாப்பி நியூ இயர்!” என்றார் எஸ்தர்.
புது வருடம் பிறந்து வாரம் ஒன்றாயிருக்க, ‘யார்றா இது..?’ என்ற பார்வையோடு “தாங்க்யூ. உங்களுக்கும் ஹாப்பி நியூ இயர்!” என்றாள் புது அறைத்தோழிக்கு.
மகன் போலவே அம்மாவும் பெண்ணின் விழி அசைவில் ஈர்க்கப்பட்டார் என்று தான் கூறவேண்டும். ‘நீங்க?’ கேட்காமலே அவள் கேள்வி புரிய, “ஜானகியோட ஃப்ரெண்ட், முட்டி வலி மாடி ஏற முடியாது. சோ இங்க, ஜஸ்ட் ஃபார் எ நைட். உனக்கு ப்ராப்ளம் இல்லியே…?”
“நோ நோ… ஆன்ட்டி”
பழகாதே என்று உள்ளுக்குள் ஒலித்தாலும், எதிரில் இருப்பவரைப் பார்த்ததும் பிடித்துப் போக வேண்டுமா? இனிமையான குரல், அலட்டல் இல்லாத பேச்சு. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் பார்வையில் அத்தனை கனிவு. பெண்ணிற்கு பிடித்துப் போனதில் அதிசயமில்லையே.
கட்டிலில் அமர்ந்து கொண்டவளிடம், “சாப்டியா மா?” என்று கேட்க.. அவர் பேசுவாரா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவள் போல் உடனே, “ம்ம்… அப்போவே ஆன்ட்டி… நீங்க?” என்று கேட்டு வைத்தாள்.
கேட்டவளைப் பார்த்தார். மையத்தில் பார்த்திருக்கிறார். தன்னைச் சுற்றி ஒரு உலகம் இருப்பதே தெரியாமல் கணினித் திரைக்குள் தலை நுழைத்து அமர்ந்திருப்பவளுக்கு தன்னைத் தெரிய வாய்ப்பில்லை தான். அவரும், இன்று தான் இத்தனை அருகாமையில் பார்க்கிறார்.
முடி அனைத்தையும் சுருட்டி மேலே க்ளிப் செய்திருக்க… சுருள் சுருளாய் இங்கும் அங்குமாக வழிந்து நின்றது சில நூடுல்ஸ்.
அவரிடம் பதில் வராமல் போகவே.. “என்ன ஆன்ட்டி இன்னும் சாப்பிடலையா?” என்று முகம் பார்த்தாள்.
“வீட்டுல சாப்பிட்டு தான் வந்தேன் மா, கொஞ்ச நேரம் முன்ன தான் என் மகன் விட்டுட்டு போனான்.”
“ஓஹ்!” ‘வீட்டைப் பக்கத்துல வச்சுகிட்டு இங்க என்ன வேலை இந்தம்மாவுக்கு?’ அவள் கேட்டாளில்லை, முக பாவம் கேட்டு விட்டது.
“எனக்கும் ஜானுவுக்கும் ஒரு லைஃப் டைம் ஃப்ரெண்ட்ஷிப். முன்ன அடிக்கடி வந்து ரெண்டு மூணு நாள் தங்குவேன். இப்போ இந்த முட்டி வலி… மாடி ஏற முடியறது இல்ல. அவ மேல, நான் கீழ! சோ வெள்ளி நைட் வந்தா அடுத்த நாள் ஈவ்னிங் கிளம்பிடுவேன். நான் முன்ன வந்திருக்கேன், நீ உங்க பெரியப்பா வீட்டுக்குப் போயிடுவேன்னு ஜானு சொன்னா. கொஞ்ச மாசமா ஓவர் பிஸி! வர முடியறது இல்ல. இன்னைக்கு என் பையனைப் பார்த்திருப்பா போல… புலம்பித் தள்ளிட்டாளாம். அது தான் கூட்டிட்டு வந்து விட்டுட்டான். நாளைக்கு காலையில கிளம்பிடுவேன்.”
“இப்போ வீக்-எண்ட்ஸ்ல க்ளாஸ் போறேன். சோ பெரியப்பா வீட்டுக்குப் போக முடியறது இல்ல.”
நீண்ட நாள் பழக்கம் போல் இருவரும் பேசினர்.
“நீ ஹேர் கர்ள் பண்ணி இருக்கியா? ரொம்ப அழகா இருக்கு.”
“இல்ல ஆன்ட்டி அது அப்படித்தான் எப்பவுமே…” முன் தொங்கி நின்ற முடியை இழுத்து விட அது மீண்டும் சுருண்டு கொண்டது.
“உன் வயசில நான் இல்லாத வேலை எல்லாம் பண்ணுவேன் இந்த முடியில! நான் செஞ்ச சேட்டையில இப்போ பாரு, பாதி முடியைக் காணோம்.”
“எங்க அம்மாத விட உங்களுக்கு அதிகம் தான். ஆனா என் பாட்டிக்கு உங்களுத விட அதிகம். இடுப்புக்கும் கீழ வரைக்கும் இன்னும் இருக்கு. ஊருக்கு போனா அவங்க தான் எனக்கு எண்ண வைப்பாங்க” அவளும் அவள் பங்கிற்கு அளந்துவிட்டாள். அம்மா.. அப்பா.. பாட்டி… நகுநா என்று அவள் உலகம் அவர் முன் விரிந்தது. அவரும், முகபாவத்தோடு வந்த அவள் கதையை ரசித்துக் கேட்டார்.
“நீ ரொம்ப அழகா இருக்க அலர். அதுவும் உன் கண்ணு? என்ன அழகா கத பேசுது! பரதம் தெரியுமா?”
“ஹ ஹ ஹா… போங்க ஆன்ட்டி. நீங்க வேற. பரதநாட்டியம் எல்லாம் எனக்கு செட் ஆகாது. சும்மா கைய கால ஆட்டி சினிமாப் பாட்டுக்கு கராத்தே டேன்ஸ் ஆடுறதோட சரி! ஆனா நல்லா குத்துப் பாட்டுப் பாடுவேன். என்னோட ஸ்ட்ராங் வாய்சுக்கு அது தான் சரியா வரும்”
அவள் சிரிக்க… அவர் சிரிக்க.. நிறைய வெட்டிக் கதை பேசினர். சிரித்தனர்.
“உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் அலர்விழி. என்ன பாக்குற? ஜானகி சொல்லுவா, நானும் கண் கூடாப் பார்த்திருக்கேன். என்னையே பார்த்த ஃபீல் குடுப்ப! நாலு சுவருக்குள்ள பதுங்கிக் கிடக்காம ஏதாவது சாதிக்கணும்னு எனக்கு ஒரு வெறி… அது ஒரு காலம்! உன் கிட்ட அதையே பார்க்கும் போது டேஜாவு மொமென்ட்.”
“மிடில் க்ளாஸ் ஆன்ட்டி நாங்க. ஆனா எதுலயும் குறை வச்சதே இல்ல, என்னோட அம்மாவும் அப்பாவும். பாசம், கண்டிப்பு எல்லாம் அளவில்லாம இருக்கும்.. ஆனா பணம் மட்டும் இடிக்கும். இருந்தும் அவங்க சேமிப்பு எல்லாம் எனக்கும் என் தங்கை நகுநாவுக்கும் தான். நிறைய பேர் அம்மாட்ட சொல்லி கேட்டிருக்கேன்.
‘பொண்ணுங்களுக்கு இவ்வளவு செலவு பண்ணாத. பொண்ணுங்கனாலே வெறும் செலவு தான். வருமானம் கிடையாது. கட்டிக் கொடுத்த பிறகும் செலவு தான். அதனால உங்க வயசான காலத்துக்கு சேத்து வை’ன்னு அட்வைஸ் நிறைய வரும்.
அம்மா அப்பா அதை எல்லாம் காது கொடுத்துக் கூட கேக்க மாட்டாங்க. அதுவும் என்னோட அப்பா? அவர மாதிரி எல்லாம் பாக்கவே முடியாது. அவர் மூச்சுக் காத்தே நாங்க தான்!
என் ஆசை எல்லாம் அவங்கள நல்லா வச்சுக்கணும்னு தான். பொண்ணோ பையனோ ஃபினான்சியலி இண்டிபென்டென்ட்டா இருந்தா பெத்தவங்களுக்கு சப்போர்ட்டா இருக்க முடியும்.
நான் நல்லாப் படிச்சா தான் நல்ல வேலை கிடைக்கும். எனக்கு வெளிநாட்டுக்கு போய் சம்பாரிக்கணும்… அம்மா அப்பாக்கு சீக்கிரம் ரெஸ்ட் குடுக்கணும். பாட்டியக் கூட்டிட்டு நயாகரா போகணும். நகு கல்யாணத்துக்கு சேர்த்து வைக்கணும். எனக்கு கல்யாணம் ஆன பிறகும் வேலைக்குப் போகணும். ஏதாவது சாதிக்கணும் ஆன்ட்டி…
இப்படி நிறைய ‘ணும்’ இருக்கா, சோ போகுது…” மெல்ல சிரித்தாள்.
error: Content is protected !!