இடைவெளி 3(1)

“ராம்..? கையை எடுங்க” சாதனா சொல்ல,

“எனக்குப் பிடிச்சிருக்கு, எடுக்க மாட்டேன்” என்றான் அடமாக. இந்த ராம் நிச்சயம் சாதனாவிற்குப் புதிதாகத் தெரிந்தான். இதுவரை இப்படியெல்லாம் அவன் நடந்ததே இல்லை.

அவளுக்குத் தெரியவில்லை. பிடித்தவள் என்று பிடித்து வைக்காமல் அவன் சுதந்திரமாக விட்டிருக்க, இப்போது விவாகரத்து என்று உறவே ஊசலாடும் நிலைக்கு வந்ததும், அவன் பிடிவாதம் பிடித்தேனும் அவளைப் பிடித்து வைக்க நினைத்தான்.

சாதனா அவன் அடமாகப் பேசவும் ஒன்றும் பதில் சொல்லவில்லை, மஞ்சள் வெயில் கொஞ்சிய மாலை பொழுது,  நடுவெயிலுக்கும் இருளுக்குமான இடைவெளி நேரம். இவள் இடைவெளியில் இவன் கரங்கள் அழுத்தமாக இருக்க, சதுவுக்கும் இப்படி நடப்பது புதிதாக இருந்தது.  நீலம், அதில் வெண்மேகம், அதன் கீழே உயர்ந்து வளர்ந்த பச்சை மரங்கள்.

சிமெண்ட் சாலை போடப்பட்டிருக்க, அன்று வார நாள் என்பதால் அந்த சாலை கூட மிகவும் அமைதியாக இருந்தது. இருவருமாக மௌனத்தின் தூரத்த்தைக் கடந்தனர். நடந்து கொண்டே வந்தவர்கள் மக்கள் நடமாட்டமில்லாத ஒரு சமவெளிக்கு வந்தனர். சில உள்ளூர் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. சமபரப்பில் ஒரு பக்கமிருந்த பாறையில் சாதனா கால்வலி தாங்காது உட்கார, இப்போதும் கரத்தை எடுக்கவில்லை அவள் கணவன்.

“இங்க யாரு பார்க்கிறா? போதும் கையை எடுங்க ராம். கொஞ்சம் ரிலாக்ஸா உட்காரனும் நான்” என்றதும் முகத்தைத் தூக்கி வைத்தபடி கையை எடுத்தான். இருகைகளையும் கன்னத்தில் வைத்து, சுற்றி இருந்த இயற்கையை ரசித்தாள் சாதனா. ராம் வழக்கம்போல் சாதனாவைப் பார்த்தான். 

“சது” என்று ராம் பேச நினைக்க செல்வாவிடமிருந்து அழைப்பு.

“இவனா?” என்று முணுமுணுத்தபடி எடுக்க, அவன் பாவனையை சுவாரஸ்யமாகப் பார்த்தாள் சாதனா. 

“என்ன மிஸ்டர். பரசுராம் ஆபிஸ் பக்கம் ஆளை காணும்?” செல்வா தன் கணீர் குரலில் கேட்க, 

 

“நான் லீவ் அப்ளை பண்ணிட்டுதான் ஸார் வந்தேன்” என்றான்.

“யார்கிட்ட சொன்னீங்க? மேனேஜர் இப்படி பொறுப்பில்லாம இருக்கலாமா? ஒரு மெயில் இல்லை, மெசெஜ் இல்லை. யார்கிட்ட சொன்னீங்க?” என்று அவன் அதட்ட,

“என் மத்த இரண்டு செல்லம் மாதிரி இவன் இருக்கக் கூடாதா?” என்று மனத்தில் நினைத்தவன்

“மாதவன் ஸார்கிட்ட சொல்லிட்டுதான் வந்தேன்”

“அவர்கிட்ட சொன்னா ஆச்சா? உங்க பொண்டாட்டி டைவர்ஸ்  நோட்டீஸ் அனுப்பினாங்களே, அது விஷயமா கோர்ட் போயிருக்கீங்களா ஸார்?” என்று நக்கலாக செல்வா கேட்க,

“செல்வா, மாமா பாவம்டா. இப்போதான் டா சதுவோட பேச வந்தேன்” என்று பரசு கெஞ்ச செல்வாவின் முகத்தில் சிரிப்பு. எதிரில் நின்று தம்பியின் சேட்டைகளைப் பார்த்த மாதவன் குலுங்கி குலுங்கி சிரித்தான்.

“யார் ராம்?” சது ஆர்வமாகக் கேட்டாள். பரசுராம் தள்ளி நின்று பேசினாலும் அவன் பாவனையில் இவளுக்கும் புன்னகை.

“செல்வா” என்றான் மெல்ல.

“கொடுங்க” என்று போனுக்காக கை நீட்டினாள் சாதனா. அவனைப் போலவே தள்ளி போனவள்

“என்னடா என் புருஷனை ரொம்ப மிரட்டுற?” என்று தம்பியை செல்லமாக அதட்டினாள்.

“சதுக்கா! ,மாமா போன் செஞ்சா கூட எடுக்கமாட்டேன்னு போன, இப்போ என்ன அவர் போனை எடுக்கிற அளவுக்கு முன்னேறிட்ட போல..” என்றான் செல்வா கிண்டலாக. 

“அதெல்லாம் எங்களுக்குள்ள? நீ ஏன் அவரை வம்பிழுக்கிற?” என்று சாதனா திரும்பிக் கேட்டாள்

“எங்க மாமா நாங்க வம்பிழுப்போம், அதெல்லாம் எங்களுக்குள்ள” என்றான் செல்வாவும் அக்காவைப் போல்.

“உங்களை ஊருக்கு வந்து கவனிச்சிக்கிறேன், அவர் டைவர்ஸ் பண்ண வேண்டியது உங்களைத்தான் டா! பாவம் பரசு! அப்படி டென்ஷனாகிட்டார், அந்த உதய் கையை உடைக்கிறேன், என் சைன் போடுறானா அவன்?” என்றாள் கொஞ்சம் கோபமாக.

“ஹாஹா, வேற என்ன செய்ய சொல்ற? அவர் போன் செஞ்சா நீ எடுக்க மாட்டேங்கிற, அவரும் உன் இஷ்டத்துக்கு விடுறார். இப்படி அதிரடியா எதாவது பண்ணினாதான் மாம்ஸ் சரி படுவார்னு தெரியும். அதான் ஒரே ஒரு நோட்டீஸ், ஓவர் நைட்ல நீ இருக்க இடம் வந்தார் பார்த்தியாக்கா?” என்று கேட்டான் செல்வா. அக்காவும் தம்பியும் பேசிக்கொண்டு இருக்க, பரசுவின் பார்வை இங்கேதான். இருள் சூழ்ந்திருக்க, மனைவியை நெருங்கி வந்தான்.

“சது, இருட்டாகிடுச்சு. நம்ம காட்டேஜ் போகணும்” என்று பரசுராம் வந்து சொல்ல, அவனிடம் போனை நீட்டினாள்.

“சொல்லு செல்வா” என்றான்.

“மாமா, வரும்போது அக்காவோட வரணும். இல்லைன்னா அக்கா புருஷன்னு பார்க்காம அக்கக்கா பிரிச்சிடுவேன்” என்று மிரட்டினான் செல்வா.

“டேய்! போதும், போனை கொடு” என்று மாதவன் அதட்டி தம்பியிடமிருந்து வாங்கினான்.

“ஏண்டா அவன் பக்கத்துல நின்னுட்டே தான் என்னை மிரட்ட விட்டியா நீ?” மாதவனை பரசுராம் திட்ட,

“அதெல்லாம் இருக்கட்டும், அவன் சொன்னதை செய் மாமா நீ” என்றான் மாதவனும்.

“ஓன் மினிட்” என்று சாதனாவிடமிருந்து தள்ளிச் சென்றவன்

“எனக்கே அட்வைஸ் பண்றீங்களே, உங்க போதனையை என் பொண்டாட்டிக்கும் கொஞ்சம் செய்ங்கடா. மாமா நல்லவர்னு நாலு வார்த்தை சொல்லி அவளை காம்ப்ரமைஸ் பண்ணி விடுங்க” என்று கேட்டான்.

“அவ எங்க பேச்சைக் கேட்டுதான் எல்லாம் செய்வா பாருங்க, இப்ப எதாவது பேசினா எங்க பேச்சைக் கேட்டுத்தான் உன்னைக் கட்டினேன் சொல்லுவா மாமா, ஒழுங்கா நல்ல புருஷனா நடந்து எங்க மூணு பெயரையும் காப்பாத்தனும் மிஸ்டர். பரசுராம். ஒகே?” என்று மாதவன் மிடுக்காகக் கேட்க,

“அடுத்த மூணு மாசத்துல உனக்கும் கல்யாணம் ஆகும்டா மாப்பிள்ள, அப்ப உன்னை கவனிச்சிக்கிறேன், ஒரு அக்கா புருஷன் என்றும் பாராமல் அன் லிமிட்டெட்டா கலாய்க்கிறீங்களேடா காட்ஸில்லா பாய்ஸ்” என்று பரசுராம் திட்டினேன்.

“சீக்கிரமே என் புள்ளைக்கு உங்களை மாமாவாக்கி மூணு பேர் மேலையும் உச்சா போக விடுறேன் இருங்கடா, அப்போ தெரியும் இந்த பரசுராம் யாருனு” என்று சபதம் போட,

“அதெல்லாம் நாங்க டயபர்ஸ் மாட்டிடுவோம்” என்று மாதவன் சொல்ல,

“போனை வைங்கடா பிக்காலி பசங்களா, அவகிட்ட பேசும்போதெல்லாம் மாமா ஓமான்னு  வந்துட்டு இவனுங்களை மாமாவாக்கனுமாம். நீங்க ப்ரதர்ஸ் இப்படி செஞ்சா நான் சர்ச் பாதராத்தான் ஆகனும். நான் அப்பறம் கூப்பிடுறேன்” என்று போனை வைத்தவன் மனைவியைப் பார்த்தான்.

அவள் முகத்தில் ஆழ்ந்த யோசனை.

‘மலையிறக்க சொன்னா இவனுங்க மலையுச்சிக்கு ஏத்திவிட்டானுங்க போலயே!’ என்று கலவரமாக அவளைப் பார்த்தான். அந்த சிமெண்ட் சாலையில் ஆங்காங்கே மஞ்சள் விளக்குகள் ஒளிர்ந்திருக்க, லேசான குளிர். மாலையிலிருந்து இருளாக வானம் மாறியிருக்க, சாதனா நடக்கவும், பரசுவும்

அவளருகே கையைப்பிடித்தபடி நடந்தான். சாதனா பதில் பேசவில்லை.

“சது, என்னாச்சு?” என்று பரசுராம் கேட்க,

“என்ன உங்களை ரொம்ப ஓட்டுறானுங்களா?” என்று சின்ன சிரிப்புடன் கேட்டாள் சாதனா.

“அதெல்லாம் இல்ல, சும்மா ஜாலியா” என்றான் அவனும் சிரிப்போடு.

“அவனுங்க பேசுறது கோவமே வராதா உங்களுக்கு?”

“ஹேய்! நாங்களாம் ப்ரண்ட்ஸ், நீ ஏன் அப்படியெல்லாம் நினைக்கிற, உண்மையில எனக்கு அவனுங்க மூணு பெயரைப் பார்க்கும்போது நானும் அவனுங்க கூட பொறக்கல தோணும்” என்றதும் சாதனா சத்தமாக சிரித்துவிட்டாள்.

சாதனா அப்படியெல்லாம் சத்தமாக சிரிக்க மாட்டாள். தம்பிகள் போல் நிறைய விளையாட்டெல்லாம் கிடையாது, அக்கா என்பதால் கொஞ்சம் பொறுப்பு ஒட்டிக்கொண்டே இருக்கும். அதுவும் கம்பெனி பொறுப்பெல்லாம் ஏற்றபின் இன்னும் மிடுக்குதான் பெண்ணிடம், இந்த சிரிப்பு ராமிற்கு மிகவும் பிடித்தது.

error: Content is protected !!
Scroll to Top