“என்ன சக்தி நீ மட்டும் வர, எங்க அருவி?”
தனியாகக் கல்லூரிக்குக் கிளம்பிய சக்திவேலைக் கண்ட தேன்மொழி அவனிடம் கேள்வி கேட்க,
“அத்தைக்கு டயர்டா இருக்காம் பாட்டி, இன்னிக்கு காலேஜ் போகலையாம். ஸோ ஒன்லி மீ. பை ஹனி பாட்டி” என்று லிஃப்டுக்குள் நுழைந்தான் சக்திவேல். சக்தியைப் பார்த்து கொண்டிருந்த தேன்மொழியைக் கலைத்தது அகத்தியனின் குரல்.
“நான் ஹாஸ்பிட்டல் கிளம்புறேன்மா பார்த்து இருங்க” என்று சொல்லி, தனது ஷூவை மாட்டப் போன அகத்தியனை அரை நொடி தன் பார்வையால் அளந்த தேன்மொழி,
“நான் அருவி கிட்டப் பேச போறேன்” என்று சொன்னார்.
“அருவி காலேஜ் போயிருக்குமே, எங்க பேச போற?” என்று அருவி வீட்டில் இருப்பது தெரியாமல் அகத்தியன் சொல்ல,
“அவ வீட்ல தான் இருக்கா. எப்போ கல்யாணம்னு கேட்க போறேன் ” என்றதும் அகமெங்கும் அகத்தியனுக்கு அதிர்வலைகள் வலை பின்ன,
“மா” என்று தேன்மொழியைச் சத்தமாய்க் கூப்பிட்டான்.
“உனக்கும், அவளுக்கும் தான் டா” என்று தேன்மொழி இப்போது புன்னகையை நிரப்பியபடி கூற,
“மா” என்ற அகத்தியனின் முகமெல்லாம் முறுவலே முதல்மொழியென இருந்திட, தாய்மொழி கனிவாகியது.
அகத்தியன் தோள் தட்டியவர்,
“நேத்து நீ அருவியைப் பார்த்த பார்வையிலேயே தெரிஞ்சதுடா தியா” என்று தேன்மொழி சொல்ல, வெட்கம் கொண்ட முகத்தை மறைக்க வழியின்றி,
“அம்மா, இதெல்லாம் எப்ப நோட் பண்ணின நீ?” அகத்தியன் தாயின் அருகில் உட்கார்ந்து சிரிப்போடு கேட்டான்.
“ஏன் டா சீரியல்ல ஆதி பார்வதியை பார்க்கிறதேயே அவ்வளவு ஷார்ப்பா பார்க்கிறவ நான். என் பையன் நீ, ஒரு பொண்ணை பார்க்கிறது தெரியாமையா இருப்பேன். அதனால தான் நேத்து நீ பாடிட்டே இருக்கும்போது தாராவுக்கு மிஸ்ட் கால் கொடுத்து அவளைக் கால் பண்ண வச்சு, அங்கிருந்து வந்து தாரா கிட்ட எல்லாம் சொன்னேன்”
“தாரா கிட்ட அதுக்குள்ள என்னம்மா?”
அருவியின் சாரல் இன்னும் அவன் பக்கம் வீசா நிலையில், ஏன் தங்கைக்கெல்லாம் உடனே சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அவன் கேட்டான்.
“அவ சொல்லிட்டா, அண்ணா பிடிச்ச பொண்ணா பார்த்திட்டான். இனி நீங்க நல்ல அம்மாவா அண்ணிட்ட பேசுங்கனு, அருவி இன்னிக்கு லீவ் போட்டுட்டா, நான் அவ கிட்டப் போய் பேச போறேன்” முடிவாக தன் முடிவை அவர் சொல்ல, முடியாதென மறுத்தான் அகத்தியன்.
“அருவி இன்னும் ஓகே சொல்லலம்மா, அவ என்னை ப்ரண்டா தான் பார்க்கிறா, நானே பேசுறேன். நீ இப்போ பேச வேண்டாம். ஓகே டியுட்டிக்கு லேட்டாச்சு பை” என்றபடி அவன் கிளம்பிப் போக, அவன் சொல்வதையா தேன்மொழி கேட்பார். அவன் இறங்கியதும் இவர் ஆக்ஷனில் இறங்கி விட்டார். அருவி வீட்டின் அழைப்பு மணியையும் அழுத்தி விட்டு அவளுக்காகக் காத்திருந்தார்.
அகத்தியனுக்கோ அகமெல்லாம் அருவியின் உலா தான். நேற்று நடந்த நிகழ்வையெல்லாம் நினைத்துப் பார்த்தான்.
இவன், “அருவியோட ஹஸ்பண்டா நான் ஆகிடுறேன்” என்று சொல்லி அருவியை இறுக அணைத்துக் கொள்ள,
அருவிக்கு அவன் பேச்சு, அந்திமழை சாரலென இருந்த போதிலும், இன்னும் அவகாசம் வேண்டியது அவள் அகம்.
“அகத்தியன் ப்ளீஸ் ” என்று சொல்லி அவனிடமிருந்து விலகி எழுந்து நின்றாள்.
உரிமையற்ற நிலையில் அவனின் உரிமை செயல் ஒரு கோபத்தைக் கொடுத்தது.
“என்ன இது அகத்தியன்? அட்வாண்டேஜ் எடுக்கிறீங்களா?” என்று அருவி கேட்க,
அவன் முகத்தில் வெட்க நிழல். அவளை ரசனையாய் ரசித்துக் கொண்டே,
“பார்டா நானாவது ஜஸ்ட் எ ஹக். நீ என் கூட குடும்பம் நடத்தி குழந்தை வரைக்கும் கற்பனை பண்ணிருக்க. அதுக்கெல்லாம் நான் வெட்கப்படுறேனா அருவி?” என்று அகத்தியன் கேட்டான்.
அருவியோ எதார்த்தத்தையும் எதிர்காலத்தையும் சொல்லி இருக்க, அவன் அவளுக்கு எதிராகவே அதைத் திருப்பிட அவனை முறைத்தவள்,
“எனக்குத் தூக்கம் வருது” என்று சொல்லி கீழ இறங்கிப் போனாள். அப்போதே மணி ஒன்றுக்கும் மேல் என்பதால் அகத்தியனும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. மாலையில் அவளைப் பார்த்துப் பேசலாம் என்று நினைத்தவன் ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பிப் போனான்.
அகத்தியனுக்குத் தூக்கம் முழித்து பழக்கம். அருவியோ அட்டவணைப்படி அட்டென்ஷனில் வாழ்கிறவள்.
இரவில் தொலைத்த தூக்கம். அதன் தாக்கம் விழிக்க விடாமல் செய்ய, சக்தியிடம் சொல்லிவிட்டு மீண்டும் உறங்கிப்போனாள்.
அப்போதுதான் எழுந்து குளித்து ப்ரட்டை டோஸ்ட் செய்து சாப்பிட்ட அருவி, பாத்திரங்களைக் கழுவப்போக அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவைத் திறக்க, வாயிலில் தேன்மொழி.
“வாங்கம்மா” என்று சொல்லி அவரை உள்ளே அழைக்க, உள்ளே போய் உட்கார்ந்தவர் அருவியை அருகில் அமர்த்திக் கொண்டு அவள் கைப்பற்றினார்.
எப்போதுமே அருவியை அருகே வைத்துப் பேசுபவர்தான். ஆனாலும் இன்று அவரின் கைகளில் ஒரு நடுக்கம். விழிகளில் கொஞ்சம் கலக்கம்.
“அருவிம்மா நான் சொல்றது கேட்டு கோவப்படக் கூடாது சரியா?” என்று கேட்டார்.
தேன்மொழி மீது கோபம் கொள்வதா? என்று தான் தோன்றியது அருவிக்கு. தேன்மொழி மீது அருவிக்குத் தனி பிரியம் என்றே சொல்லலாம். இவள் சமையலில் எதாவது சந்தேகம் கேட்டால் அகத்தியன் போல் சிரித்துக் கலாய்க்காமல் சிரத்தையோடு சொல்பவர். வம்பு பேசாமல் எப்போதும் வாஞ்சையோடு இருக்கும் அவர் மீதா கோபம் வரும்?
“என்னம்மா, உங்க தாரா மாதிரி நான்னு சொல்வீங்களே எதுனாலும் சொல்லுங்கம்மா” என்று அருவி அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு சொல்ல,
“தியனுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு போல அருவிம்மா, நாலஞ்சு வருசமா எனக்கு என் வேலை தான் பிடிச்சிருக்குன்னு சொல்லி கல்யாணமே வேண்டாம் சொன்ன பையன், நேத்து உன்னைப் பார்த்து உருகிப் பாடுறான்” என்று தேன்மொழி பட்டென்று சொல்ல அருவிக்கு அதிர்ச்சி. அருவி நிச்சயமாய் அவர் அகத்தியனைப் பற்றிப் பேசுவார் என எதிர்பார்க்கவில்லை.
இருந்தும் எப்போதும் போல் இப்போதும் அவர் பேசுவதை அமைதியாக கேட்டாள்.
“எனக்கு ரொம்ப நாளா எங்க அவன் வாழ்க்கை முழுசும் தனியா இருந்துடுவானோன்னு பயம். ஆனா உன்னைப் பார்த்த பின்னாடி அவன் மனசை மாத்திக்கிட்டான். நான் கூட உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்மா. தாரா கூடவே இருந்துப்பேன். உனக்கும் தியனைப் பிடிக்கும் தெரியும். நான் சாகறத்துக்குள்ள அவனை கல்யாணம் பண்ணிக்கோ அருவி” என்றவரின் வார்த்தைகள், அருவிக்குள் அவள் அன்னையைப் பற்றின ஞாபகங்களை தூண்டி விட்டன.
‘நான் சாகறத்துக்குள்ள உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிடனும் அருவி’ என்பது தான் அவர் சாகும் வரை சொன்னது.
தாயின் நினைவில் லேசாய் நீரால் நனைந்தது அவள் விழிகள்.
“என்னைப் பத்தி அப்படி தான் உங்க அபிப்ராயமா மா?” என்று அருவி அழுத்தமாக கேட்க, அவருக்கு என்ன கேட்கிறாள் என்பதே புரியவில்லை.
“நீங்க மாசத்துல ஒரு தடவை அவர் கூட தங்கும்போதே ஏன் அம்மாவைக் கூடவே வச்சுக்கலன்னு உங்க மகன் கிட்டயே நான் கேட்டிருக்கேன், அவர் தான் நீங்க தனியா இருக்கணும், அங்கனா தாரா பசங்க இருப்பாங்கன்னு சொன்னார். அப்படி இருக்கும்போது எப்படி நீங்க இப்படிச் சொல்லலாம்?” என்று கேட்டதில் தேன்மொழிக்குள் தேன்மழை. கண்கள் கசிந்தன.
“அருவி அப்போ அடுத்த முகூர்த்தமே பார்ப்போமா?” என்று அவர் ஆர்வமாகக் கேட்டார். அவர் கவலை அவருக்கு. எத்தனை நாள் மகனின் நினைத்து தூக்கம் வராமல் தவித்திருப்பார்.
“எனக்கு உங்களைப் பிடிக்கும்மா. உங்க தியனையும் பிடிக்கும். ஆனா கல்யாணம் அது தெரியல. நிஜமா நாங்க இதைப் பத்தி பேசியிருக்கோம். ஆனாலும் எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க ப்ளீஸ்” என்று அருவி அவள் நிலையைச் சொன்னாள்.
“அதுக்கென்ன டா அருவி, ஒரு நாள் புல்லா டைம் எடுத்துக்கோ. அதுக்கு மேல டைம் எடுத்தா நாளைக்குப் பொறக்க போற குழந்தை என்னை மட்டுமில்லாம உங்களையும் பாட்டி தாத்தான்னு சொல்லிடும் சரியா?” என்று அவர் கேட்டு வைக்க அவர் பேச்சில்,
நேற்றைய இரவும், அகத்தியனும், அவன் அணைப்பும் இவளுக்குள் கற்பனை கலாபங்கள் விரிந்தன.
“மா?!” என்றாள் அதிர்வாக.
“அவனுக்காக மட்டும் சொல்லல அருவி உன்னையும் எனக்குப் பிடிக்கும். நீ தனியா இருக்கறது எனக்குக் கஷ்டமா இருக்கும். ஆனா அது பத்தி கேட்கப் பயம். தாரா மாதிரி நீயும் நல்லா வாழணும்னு மனசுல நினைப்பேன் ஒருவேளை உனக்குத்தான் தியன்னு எழுதி இருக்கும்போல” என்றார் அவள் மீது அக்கறை கொண்டவராக.
“புரியுதும்மா” அருவி சொல்ல,
“சரி விடு, அந்த சீரியல்ல சக்தி ஒரு புடவை கட்டியிருப்பா அருவி. அது உனக்குப் பொருத்தமா இருக்கும்னு நான் சொல்லியிருக்கேன்ல. அதான் உனக்கு கல்யாணத்துக்கு எடுக்கணும்” என்று அவர் பேச இவள் பேந்த பேந்த விழித்தாள்.
அவர் ஒரு சீரியல் பற்றிப் பேசினால் பரவாயில்லை. அவர் நார்த் டூ சவுத் நாற்பது சீரியல் பார்ப்பவராயிற்றே.
“என்னம்மா அதுக்குள்ள?? நான் யோசிக்கணும் ” என்று அருவி தயக்கமாகச் சொன்னாள்.
“அதுக்கென்ன டா, நல்லா யோசி, யோசிச்சு முடிக்கும்போது எல்லாம் ரெடியா இருக்கணும்ல. அந்த புடவை உனக்கு சூப்பரா இருக்கும். அது தான் கல்யாணத்துக்கு எடுக்கணும். நான் போய் டிசைன்லாம் பார்த்து வைக்கிறேன். நீ பொறுமையா யோசிடா” என்று சொல்லி விட்டு அவர் போக, அருவியின் பொழுதுகள் முழுவதும் யோசனையே!
யோசனை மட்டுமே!!
மாலை அகத்தியன் வீடு வந்த போது, வானம் இருட்டத் தொடங்கி இருந்தது.
மகன் உள்ளே நுழைந்ததுமே,
“தியா! எனக்கு முப்பதாயிரம் வேணும். புடவை வாங்கணும்” என்று கேட்க அதிர்ந்து போனான் அகத்தியன்.
“ம்மா! நீங்க கட்டுற புடவை காட்டன், அதுவும் நீங்க கம்மி விலையில இல்ல கட்டுவீங்க?” என்று அகத்தியன் கேட்டான்.
“காட்டன் புடவை இல்லடா, அந்த சக்தி பொண்ணு கட்டுவா. அது மாதிரி டிசைன்ல பட்டுல வாங்கணும்னா காஸ்ட்லியா தான் இருக்கும்னு தாரா சொன்னா”
“தாராவுக்கா புடவை?” தங்கை எப்போதும் மாடர்ன் மங்கை ஆகிற்றே என்று யோசனையிலிருந்தவன் உடை மாற்றி வர,
“தாராவுக்கு இல்ல அருவிக்கு டா” என்ற அம்மாவின் பேச்சில்.
“வாட்?” அகத்தியன் அதிர,
“ஆமா அருவிக்குத் தான் கல்யாணத்துக்கு வாங்கணும்ல” என்றார் ஆனந்தமாக.
“நான் சொல்லச் சொல்ல கேட்காம அருவிக்கிட்ட போய் பேசினீங்களாம்மா?” என்றான் கொஞ்சம் கோபமாய்.
“ஆமா நீ பேசுவன்னு நான் பார்த்தா அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும் அதான்” என்று அவர் அவனுக்கும் மேல் முறைத்தபடி சொன்னார்.
“உங்கள” என்று சொல்லி அகத்தியன் அருவியைப் பார்க்க வீட்டை விட்டு வெளியே வரப் பார்த்தால் சக்தி குடையோடு லிஃப்டுக்குப் போக நின்றான்.
“என்ன சக்தி, எங்க கிளம்பிட்ட? அத்தை எங்க?” என்று கேட்க,
“அத்தை கடைக்குப் போனாங்க அங்கிள். மழை வந்துடுச்சு. ஸோ என்னையை அம்ப்ரெல்லா எடுத்துட்டு வர சொன்னாங்க” என்று சொன்னான்.
மழையில் சின்ன பையனைத் தனியாக அனுப்ப வேண்டாம் என்ற நினைத்த அகத்தியன்,
“நீ குடையைக் கொடு சக்தி நான் போய்ட்டு வரேன்” என்று சொல்லி அவனிடமிருந்து குடையைப் பெற்று, அவர்கள் தெருமுனை தாண்டி இருக்கும் மெயின் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் சென்று பார்க்க அருவி அங்குதான் நின்றிருந்தாள்.
“வா அருவி, சக்தியை நான்தான் வர வேண்டாம் சொன்னேன்” என்று சொல்லி அவன் அழைக்க,
அருவி பதில் பேசாமல் அவனோடு சேர்ந்து நடந்தாள்.
மழைத்துளிகள் பட்டுத் தெறிக்க, குட்டி அருவியாய் முகத்தில் அது ஓட, குளிர் வேறு. இருவருமே பெரியவர்கள். சக்தி என்றால் குடை தாராளமாக இருந்திருக்கும். இப்போது அகத்தியனும் அருவியும் அருகருகே.
குளிரும் நெருக்கமும் கூச்சம் தர, அவனை விட்டு விலகி நடந்தாள் அருவி.
“அருவி என்னதிது குடைக்குள்ள வா?”
அவள் பேசாமல் முழுவதுமாக மழையில் நனைந்தபடி அவர்கள் குடியிருப்புக்குள் நுழைய, மழையில் வேக வேகமாக நீர்த்தெறிக்க நடந்த அகத்தியன், அவளை நெருங்கி,
“மழையில நனைஞ்சா கோல்ட் வரும். என் கூட வர பிடிக்கலன்னா குடையைப் பிடி அருவி” என்று சொன்னான். அகத்தியனுக்கு தன் அம்மா ஏதோ பேசி, அதனால் அருவிக்குத் தன் மேல் கோபம் என்று தவறாக எண்ணியிருந்தான்.
சில கணம் அவன் விழி பார்த்தவள், பின் முகமெல்லாம் மழைத் துளி விழ அகம் கொண்டவன் முகம் பார்த்து,
“மழையில நனைஞ்சா என்ன பார்த்துக்க எனக்கு ஆள் இருக்கு” என்றவளை அகத்தியன் ஆச்சரியமாகப் பார்க்க,
“என்ன டாக்டர் பார்த்துப்பீங்க தானே?” என்று புருவம் உயர்த்தி கேள்வி கேட்டு விட்டு அருவி வேகமாக லிஃப்டினுள் புகுந்து கொள்ள,
இப்போது அகத்தியனின் குடைக்குள் மழை!!