அத்தியாயம் 8

இதான் finger board, இது pick guard, இது bridge” என்று கிடாரின் பாகங்கள் ஒவ்வொன்றாய் சக்திக்கு விளக்கிக் கொண்டிருந்தான் அகத்தியன். 

அகத்தியன் கிடார் வாசிப்பது கண்டு சக்திக்கும் ஆசை முளைக்க, அதன் விளைவாய் அருவி அவனுக்கு வாங்கி தந்த புது கிடாரை வைத்துத் தான் பாடம் நடத்தினான் அகத்தியன். 

“இங்க பார் சக்தி, இப்படி தான் ஸ்டீரிங்க்ஸ் கவுண்ட் செய்யணும் ” என்றவன்

“ஓன், டின் டின் ” என்று அவன் ஒவ்வொன்றாய் எண்ண, அதில் இசை வந்தது.

அருவி வீட்டில் சமையலறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்க, அப்போது பார்த்து வாயில் மணி ஓசை. 

“சக்தி, அவனா வர வேண்டியது தானே யாரு?” என்று தனக்குள் பேசியபடி  அருவி  கதவைத் திறக்க பார்த்தால் தேன்மொழி. அன்று காலை தான் பெங்களூரிலிருந்து மகனைப் பார்க்க வந்திருந்தார். அருவி காலையிலே கல்லூரிக்குச் சென்று விட்டதால், இப்போது அவளைப் பார்க்க வந்தார். 

“அருவிம்மா” என்றவர் குரலில் வாஞ்சை நிறைந்திருந்தது. 

வாங்கம்மா” என்று அருவி அழைக்க, 

“என்ன பண்ற நீ?” என்று தேன்மொழி கேட்க, 

“ஓண்ணுமில்லம்மா கிச்சனை க்ளீன் பண்ணேன். சக்தி வந்தா தூங்கிட வேண்டியது தான்” என்று சொன்னார். 

“ஆமா மாடியில  தியன் கிடார் வாசிக்கிறான். ரொம்ப நாள் ஆச்சு அவன் வாசிக்கிறது கேட்டு,  நீ மட்டும் ஏன் தனியா இருக்க இரண்டு பேரும் போவோம் வா” என்று தேன்மொழி அழைக்க,

“இல்லங்கம்மா நீங்க போங்க” என்று அருவி அகத்தியனைத் தவிர்ப்பதற்காக மறுத்திடத் தேன்மொழி கேட்கவில்லை. 

“நாளைக்கு சண்டே தான? வா அருவி, எப்பவும் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிற” என்று சொல்லி அவளை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனார். 

அவருக்கு இன்று சீரியல் இல்லையே, இருந்தால் டீவியை விட்டு அசைவாரா என்ன? 

அருவிக்கு ஒவ்வொரு படியாய் ஏற ஏற அகத்தினில் அகத்தியனின் நினைவே. அன்று அவன் அவளைப் பார்த்த கண்ணடித்த பின், அருவி அகத்தியனைப் பார்ப்பதை அறவே தவிர்த்தாள். இப்போது தேன்மொழி வந்து அழைக்க, எப்படி அவனை எதிர்கொள்ளப் போகிறோம் என்ற எண்ணமே அவளுக்கு. 

அதுவும்  அவன் நட்பைத் தாண்டி விட்டேன் எனும்போது, இவள் மட்டும் எப்படி நட்பைப் பிடித்துத் தொங்குவது? நட்பையும் நட்டாத்தில் விட முடியவில்லை, காதலையும் ஏற்கமுடியவில்லை. 

தேன்மொழியை முதலில் கண்ட சக்தி,

“என்ன பாட்டி தூங்கல இன்னும்” என்று விசாரிக்க, 

“இல்ல சக்தி, தியன் கிடார் வாசிக்கிற சத்தம் கேட்டுச்சு. அதான் வந்தேன்” என்று சொன்னார்.

அகத்தியனோ, “மா!  உங்க சீரியல் எதுவும் இல்லனதும் தானே வந்தீங்க” என்று கிண்டல் பார்வையோடு தாயைக் கேட்டான். 

அவரோ, 

“ஆமா, வேற என்ன பண்ண சொல்ற? உனக்கு காலாகாலத்துல கல்யாணம் ஆகியிருந்தா இன்னேரம் பேரப்பசங்க கிட்டக் கதை சொல்லிட்டு இருந்திருப்பேன். தனியா இருந்தா சீரியல் தான் பார்க்கத் தோணும் ” என்று தேன்மொழி கோபத்தோடு சொன்னார். 

“மா, ப்ளீஸ்” என்றான் அகத்தியன். அவனோடு அவர் இருப்பதே மாதத்தில்  சில நாட்கள். அதிலும் இப்படி பேசினால் என்னதான் செய்வான்? அகத்தியனைக் காப்பாற்று விதமாகச் சக்தி, 

“அத்தை நீங்க எப்ப வந்தீங்க?” என்று தேன்மொழியின் பின்னால் வந்த அருவியைப் பார்த்துக்  கேட்டிட, 

“அருவி எங்க வரன்னு சொன்னா. நான் தான் தனியா இருக்காதேன்னு இழுத்துட்டு வந்துட்டேன்” என்று தேன்மொழி சொல்ல அகத்தியன் விழி வீச்சு மொத்தமும் அருவியின் மேலே. 

அருவி அமைதியாகத் தேன்மொழியின் அருகில் உட்கார்ந்து கொள்ள, அன்றைய இரவு போல் முதல் முறையாக. அகத்தியன் பாடிய இரவு மனத்தில் வந்து போனது. அன்று அவனிடம் எவ்வளவு இயல்பாகப் பேசி முடிந்தது. இன்றோ பார்க்கக் கூட முடியவில்லை.  

அருவி மகள் அலை ஓசை

இந்த அழகு மகள் வளையோசை

பொதிகை மலை மழைச்சாரல்” என்று அகத்தியன் விழி மூடி பாட மொழி மறந்தாள் அருவி

அதுவரை அவன் பக்கமே பார்வை பார்க்காதவள். அவனைக் கண்களில் கண்டிப்போடு பார்த்திட, ‘கண்ணை மூடினா  கனவில நீதானே!’ என்ற நிலையில இருப்பவனுக்கா இவள் கண்டிக்கும் பார்வை தெரியும்?

“எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு அருவிம்மா இது. யேசுதாஸ். அந்த வீணை. எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும்” என்று தேன்மொழி அருவியிடம் சொல்லவும் மென்மையாய் புன்னகைத்தவள், தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தாள். 

ஆனால் சக்திக்கு, ‘என்ன அங்கிள் அத்தையை கரெக்ட் பண்ண ட்ரை பண்றார் போல? சம்திங் சம்திங்’ என்று அருவியைப் பார்க்க, அவள் எந்த பாவமும் காட்டாமல் அழுத்தமாக, அமைதியாக உட்கார்ந்திருந்தாள். 

  

சிறிது நேரம் கழித்து தேன்மொழியின் அலைப்பேசி சத்தம் போட,

“தாரா கூப்பிடுறா, நான் பேசிட்டு வரேன் ” என்று மகளிடம் பேசப் போனார்.

மிகவும் பழைய பாடல் கேட்க விருப்பமில்லாத சக்தி, 

“அங்கிள், வேற பாட்டா பாடுங்க” என்று சொல்லவும்,

அதுக்கென்ன சக்தி? எனக்குப் பிடிச்ச பாட்டு, எனக்குப் பிடிச்சவங்களுக்கும் பிடிச்ச பாட்டு பாடுறேன். ரெடி, ஸ்டார்ட்” என்றவனின் விரல்கள் கிடாரை தீண்டிட, விழிகளோ அருவியைத் தீண்டின.

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனம் போகும் வழியை எந்தன் மனம் அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே’

என்று அகத்தியன் முகத்தில் ஒரு மென்முறுவல் காட்டி, மிகவும் ரசித்த நிலையில் பாடிட, அருவிக்குக் கோபம் அருவியெனக்  கொட்டியது.

அகத்தியன் பாடிய விதமும் பார்வை போன விதமும் சக்தியை வேறு விதமாய் நினைக்கத் தூண்டின.

ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்’

என்ற வரிகளின் போது அகம் கொண்டவளையே அதி தீவிரமாய் பார்த்து சக்தியிடம் அகப்பட்டுக்கொண்டான் அகத்தியன்.

ஆயிரம் அருவி’ என்று அகத்தியன் பாட, அருவியால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை

சக்தி கீழ போகலாம் வாஎன்று அவன் பாடல் முடிக்கும் முன்னே எழுந்து நின்று அழைக்க, 

அத்தை! அங்கிள் பாடி முடிக்கட்டும்” என்று சக்தி சொன்னான்.

முதல்ல கீழ போ” என்று அருவி அதட்ட


சக்திக்கு அகத்தியன் பாடல் வழியே அவன் அகம் புரிந்ததோ என்னவோ?அகத்தியனின் பாடலும் அருவியின் பிரதிபலிப்பும் சக்திக்கு இருவருக்குமிடையில் என்னவோ ஓடுகிறது என்று மட்டும் புரிய, அவனும் அருவியும் பேசட்டும் என தன் கிடாரை எடுத்துக் கொண்டு முன்னால் சென்றான். 

அருவியும் சக்தி கீழே போய் விட்டானா என்று பார்த்தவள், 

“என்ன நினைக்கிறீங்க அகத்தியன் உங்க மனசுல? வேணும்னே என் பெயர் வர பாட்டா பாடுறீங்க, தேன்மொழிம்மா, சக்தியெல்லாம் என்ன நினைப்பாங்க?”

“அவங்க என்ன நினைப்பாங்கன்னு நினைக்கிற நீ, நான் என்ன நினைக்கிறேன் ஏன் புரிஞ்சிக்க மாட்ற?”  என்று அழுத்தமாக அகத்தியன் கேட்டான். 

“நான் என்ன தப்பு பண்ணினேன்? ஏன்? எங்க இருந்து தீடீர்னு வந்துச்சு காதல், இத்தனை வருஷம் இல்லாம?” 

இத்தனை வருஷமா நான் உன்னைப் பார்க்கல அருவி. இது என்னோட காதல் மட்டும் இல்ல, அருவிக்கான அகத்தியனோட காதல்” என்று சொல்ல, 

“உங்கள” என்று தலையில் அடித்துக் கொண்டு போனாள் அருவி. 

அகத்தியனோ மாறா புன்னகையோடு போகும் அருவியைக் கண்டு ரசித்தான். வீட்டிற்குப் போன அருவிக்குத் தூக்கம் வரவில்லை. சக்தியோ அருவியின் முகத்தைப் பார்த்துவிட்டு, எதுவும் கேட்காமல் அமைதியாகப் போய் படுத்துக் கொண்டான். 

அருவிக்கு உறக்கமே வரவில்லை. படுக்கையிலிருந்து எழுந்தவள் தன் தந்தை தாயின் படத்திற்கு முன் சென்று உட்கார்ந்தாள். சிறிது நேரம் அப்படியே இருந்தவள் சக்தி தூங்கி விட்டானா என்று பார்த்துவிட்டு அவன் அறைக்கதவை நன்றாக மூடியவள். மீண்டும் தந்தையிடம் படம் முன் சிறிது நேரம் கண்மூடி நின்றாள். 

பின் மொட்டை மாடிக்குச் சென்று அகத்தியனுக்கு அலைப்பேசியில் அழைக்க, பன்னிரெண்டு மணிக்கு மேல் அருவி ஏன் தனக்கு அழைக்கிறாள் மருத்துவனாய் அவனை ஒரு பதற்றம் சூழ,

என்ன அருவி இந்த டைம்ல” என்று அவன் எழுந்து உட்கார்ந்து கேட்டான்.

“உங்க கிட்ட பேசணும், மாடியில வெயிட் பண்றேன்” என்று சொல்லவும் அவன் வேகமாக மாடிக்குப் போய் பார்க்க, அருவி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு படியில் உட்கார்ந்திருந்தாள்.

“என்ன அருவி பேசணும்னு சொன்ன?” அகத்தியன் அவள் முன் நின்று கேட்டான். 

“அப்பா நான் காலேஜ் சேர்ந்த கொஞ்ச நாள்ல இறந்துட்டாங்க. அண்ணா யுஎஸ்ல’தான் அப்பவும் வொர்க் பண்ணினாங்க. அம்மா ரொம்ப பயந்த சுபாவம். எல்லாமே எங்களுக்கு அப்பாதான். அண்ணாவும் நானும் ஆசைப்பட்டு கேட்டு அப்பா எதையும் இல்லன்னு சொன்னதில்ல. அப்பா போனப்புறம், சொந்தக்காரங்க எல்லாம் அப்பா இல்லாத பொண்ணு, உன் பிள்ளையும் அமெரிக்கா போய்ட்டான். காலத்துல அவளுக்குக் கல்யாணம் பண்ணுன்னு, அப்படி இப்படிச் சொல்லவும் அம்மாவுக்கு அவங்க நல்லா இருக்கும்போதே  எனக்குக் கல்யாணம் செய்ய ஆசை”

நான் அப்போ டிகிரி கூட முடிக்கல, எனக்கு சுத்தமா விருப்பமில்லனாலும் அம்மாவுக்காக ஒத்துக்கிட்டேன். அப்போதான் ஆரம்பிச்சது இந்த ஜாதகத் தொல்லை. அதையும் மீறி எதாவது வரன் அமைஞ்சா அவங்க கேரக்டர் இல்ல குடும்பமோ சரியில்லாம இருக்கும். ஒவ்வொரு முறை புடவை கட்டி பூ வச்சு, நின்னு, ச்ச”

“அப்படியே நான் இரண்டு டிகிரி வாங்கியும் முடிச்சிட்டேன். அப்புறம் ஒரு பத்து வருசம் முன்னாடி ஒரு வரன் வந்துச்சு. பொண்ணு பார்க்க வர அன்னைக்கு அவங்க அப்பாவுக்கு ஆக்ஸீடெண்ட். என்னோட ராசி சரியில்லன்னு சொல்லி அதுவும் முடிஞ்சுப் போச்சு. அது அம்மாவை ரொம்ப பாதிச்சிடுச்சு, அந்த ஸ்டெர்ஸ்லேயே இருந்தவங்க ஒரு நாள் நைட் தூக்கத்துல அவங்களும்…” என்றவளுக்குத் தொண்டை அடைத்தது.

“அருவி ரிலாக்ஸ்” என்று அகத்தியன் சொல்ல, 

“ஐ அம் ஓகே” என்றவள் மேலும் பேசினாள். 

அப்புறம் கொஞ்ச நாள் யுஎஸ்’ல இருந்தேன். ஆனா அம்மா அப்பாவோட ஞாபகம் எல்லாம் இங்கதானே இருக்கு. ஸோ எங்க ஃபளாட்ல தங்க வந்துட்டேன். அப்போதான் எனக்கு ஒரு பொண்ணு தனியா இருந்தா என்ன என்ன ஃபேஸ் பண்ண வேண்டி வரும்னு புரிஞ்சது. ஆண்களை விட என்னைக் காயப்படுத்தினது லேடீஸ் தான். நிம்மதியா ஒரு துணி காயப்போட முடியாது. என்னமோ அவங்க வீட்டு ஆளுங்கள நான் மயக்க ட்ரை பண்ற மாதிரி பேசுவாங்க”

“நான் எப்பவும் செய்ற விசயங்களைக் கூட, என்னால நிம்மதியா செய்ய முடியாது. அம்மா அப்பா இல்ல, அண்ணா வெளிநாட்டுல, ஸோ ஆளாளுக்கு ஒரு காய்கறி வாங்க போனா கூட எப்ப கல்யாணம்? ஏன் பண்ணல? இதே நான் காலேஜ் படிக்கிறப்ப யாரையாச்சும் கல்யாணம் செய்திருந்தா, என்ன பொண்ணு வளர்த்திருக்காங்கன்னு பேசுவாங்க. அதே நான் அப்பா அம்மா சொல்பேச்சு கேட்டு இருந்து கல்யாணம் ஆகலன்னா, ஏன் ஆகல கேட்கிறாங்க. அதுக்கு பின்னாடி இருக்க விசயங்கள் எல்லாம் யாருக்கும் தெரியவோ இல்லை, தெரிஞ்சிக்கவோ ட்ரை பண்றதில்லை”

“என் கஷ்டம் அவங்களுக்கு அவசியமில்லை, அதே மாதிரிதானே அந்த கேள்விகளும் அவசியமில்லைதானே?

எனக்குத்  தனியா வீட்ல இருக்க பிடிக்கல ஹாஸ்டல் போய்ட்டேன். அண்ணா அப்புறம் நிறைய அலையன்ஸ் கொண்டு வந்தார். எனக்குத் தான் ஒரு பிடித்தமின்மை வந்துடுச்சு.”

“அம்மா இருக்கும்போதே நடந்திருந்தா அவங்க நிம்மதியா இருந்திருப்பாங்க. எனக்கு கல்யாணமாகலன்ற கவலையில அவங்க அவ்வளவு சீக்கிரம் போய்ச் சேர்ந்திருக்க மாட்டாங்க. சரி அப்படி கல்யாணம் ஆனவங்க எப்படி இருக்காளுங்கன்னு பார்த்தா, இவங்க சொல்ற கதையெல்லாம் கேட்டு எனக்குக் கல்யாணம் செய்யணும்னு இருந்த கொஞ்ச நஞ்ச எண்ணமும் போயிடுச்சு” என்று அருவி சொல்ல,

உடனே  அகத்தியனோ,

“அவங்க யாரும் அகத்தியனோட மனைவியா இருந்ததில்லை அருவி” என்று சொன்னான். 

“இதான் இதனால தான் இவ்வளவு சொல்றேன். இனிமே நம்ம கல்யாணம் செஞ்சு என்ன செய்ய போறோம்? சின்ன வயசுலேயே ஆகியிருந்தாலும் காலப்போக்குல  ஒரு அட்ஜெஸ்மெண்ட் டெவலெப் ஆகியிருக்கும். இப்ப இத்தனை வருஷம் நம்ம இரண்டு பேருமே ரொம்ப சுதந்திரமா வாழ்ந்துட்டோம். இப்ப சேர்ந்து வாழறது எப்படி சாத்தியம் நமக்கு? உங்களுக்கு புரியுதா இல்லையா அகத்தியன், நம்மளோட இத்தனை வருஷ தனிமையை உடைக்கிறது சாத்தியமில்ல”

நோ அருவி, சின்ன வயசுல நடந்திருந்தா நிறையா சண்டை போட்டிருப்போம். அப்போ தனிமையோட வலி என்னனு இரண்டு பேருக்குமே தெரிஞ்சிருக்காது. நவ் வீ ஆர் மெச்சூர்ட். இழந்து போன காலத்தோட மதிப்பு தெரியும். நான் வரப்போ வீட்டுக் கதவைத் திறக்க நீ இருப்ப,  நம்மை ரெண்டு பேரையும் வெறுமையான வீடு வரவேற்காது, நாம இன்னும் நல்லா வாழ்க்கையை ரசிச்சு வாழ்வோம்” என்று அகத்தியன் அகத்தின் காதலை அப்படியே உணர்ந்து உரைத்தான்.

அருவியோ

இனிமே கல்யாணம் செஞ்சு, குழந்தைக்காக வெயிட் பண்ணி, அப்படியே பொறந்தாலும் நம்மளால நல்லா வளர்க்க முடியுமா? நமக்கு அதுக்குள்ள வயசாகிடும்” என்று சொன்னாள்.

ஆச்சரியத்தின் மொழிபெயர்ப்பாய் அகத்தியனின் குரல்

ஏய் அருவி!  நான் கூட இப்படி நம்ம குழந்தைகளை நினைச்சு யோசிச்சதில்லை. இதை விட நல்ல அம்மா நம்ம குழந்தைகளுக்கு கிடைக்க மாட்டாங்க” என்று அவளைப் பார்த்து வெகுவான ரசனையோடு  மொழிந்தான்

அவனை முறைத்தவள்

இதையெல்லாம் நான் யார்கிட்டையும், ஏன் அண்ணா கிட்ட கூட ஷேர் பண்ணினதில்ல. ஏதோ உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன். என்னை டிஸ்டர்ப் பண்ணாம போங்க” என்றாள்.

இரவுநேர உரையாடல்கள், நிஜம் காட்டுபவை. அருவியின் அர்த்த ராத்திரியின் உரையாடல்கள்  மிகுந்த அர்த்தமுள்ளவை என்பது அகத்தியனுக்குப் புரிந்தது. அருவி யாரிடமும் சொல்லாதவை எல்லாம் தன்னிடம் சொல்கிறாள் எனில் அவளுக்குத்  தன் மீது அதிக  நம்பிக்கை என்பது புரிய, அகத்தியனுக்குள் மார்கழிக் காற்றாக மகிழ்வு ஊற்றெடுத்தது.

அந்த இருள், அதில் அருவியும் அவனும். நட்சத்திரங்கள் நடைபயிலும் நள்ளிரவு நேரம், இவை எல்லாவற்றிற்கும் மேல் அருவி அவள் அகம் திறந்து பேசியது எல்லாம் அகத்தியனை ஒரு இத உணர்வில் தள்ளியது. அருவி புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டு படியில் இன்னமும் அமர்ந்திருந்தாள். என்னவோ அவளைப் பார்க்கப் பார்க்க அத்தனை பிடித்தது.

அன்பின் கண்ணில் யாவும் அழகே என்பது போல் அருவி அகத்தியனின் கண்ணிற்கு அத்தனை லாளிதமாய்த் தெரிந்தாள்.

தன் முன் நிழலாடக் கண்டவள், 

என்னோட  நிலையை நான் சொல்லிட்டேன். இப்போ போக போறீங்களா இல்லையா? பார்த்தீங்களா, இரண்டு பேரும் அவ்வளவு இண்டிபெண்டண்டா வாழ்ந்துட்டோம். நீ சொல்லி நான் என்ன கேட்கிறதுன்னு இன்னமும் இப்படியே நிக்கிறீங்க” என்று அருவி குற்றம் சாட்ட, 

“அப்படி இல்ல அருவி”  என்றவன் அவள் பார்த்த பார்வையில் இறங்கிப் போனான்.

யாரிடமும் சொல்லாத அவளகத்து வேதனைகள். அப்பா அம்மாவின் மறைவு. கடந்து வந்த தனிமை, அகத்தியன். எல்லாமே சேர்ந்து அவளை உணர்ச்சிப்பிடியில் பிடித்து வைத்திருக்க, ஆகாயத்தைப் பார்த்தவளுக்கு அந்த நீல நிற இருள், அந்த அமைதி எல்லாம் ஒரு அழுகையை வர வைக்க, வெகு வருடங்கள் கழித்துத் தேம்பித் தேம்பி அழுதாள். 

அப்போது ஒரு கரம் அவளைத் தன்னோடு அணைத்துக்கொள்ள, அகத்தியன் எனப் புரிந்தவளுக்கு அவன் முன் அழுகிறோமே என்ற எண்ணம் இன்னும் அழுகையை வர வைக்க, தைரியம் எல்லாம் தகர்ந்து போக, ஒரு கோபமும் முளைத்திட, 

என்னை விடுங்க போங்க ” என்று அவன் அணைப்பிலிருந்து விலக முயன்றாள்.

“அகத்தியனோட மனைவி ஆகிடு அருவி. நீ சொல்ற மாதிரி வயசாகிடுச்சு, காதல் எல்லாம் வேண்டாம், சீக்கிரம் கல்யாணம் பண்ணிப்போம்” என்று அவன் சொல்லி அவள் முகத்தை தன்னோடு சேர்த்து அழுத்திக் கொண்டான்.

“நோ” என்று அவன் வார்த்தைக்கும் அணைப்புக்கும் சேர்த்து அருவி மறுத்திட, 

“ஓகே, அகத்தியன் மனைவியா நீ ஆக வேண்டாம். சிம்பிளா வேற சொல்லவா?” என்று கேட்க, கேள்விக்கென பதில் என்பதாய் அவள் கேள்வியாக ஒரு பார்வை அருவி பார்த்தாள். அவள் பேச்சு மறுத்தாலும், அவன் அணைப்பை உதறித்தள்ளவில்லை என்பது அகத்தியனுக்குத் தைரியம் கொடுத்தது.

“அருவியோட ஹஸ்பண்டா நான் ஆகிடுறேன்” என்று சொல்லி அவளே எதிர்ப்பாரா வண்ணம் அருவியை தன்னோடு அணைத்துக் கொண்டான் அருவியின் அகத்தியன். 

error: Content is protected !!
Scroll to Top