“சக்திக்கு நீங்க வைக்கிற தக்காளி சட்னினா பிடிக்கும். அது எப்படி செய்றது சொல்றீங்களா டாக்டர்?” என்று அருவி அவ்வளவு தயங்கிக் கேட்கத் தடையில்லாமல் சிரித்தான் அகத்தியன்.
அவளது தயக்கம் கண்டு என்னவோ ஏதோ என்று அகத்தியன் நினைத்துக் கொண்டான்.
“த.. தக்கா.. தக்காளி சட்னியா” என்று அவன் அப்படியே சுவரில் சாய்ந்து நின்று வயிற்றைப் பிடித்துச் சிரிக்க, அருவிக்குக் கோபம் வந்துவிட்டது.
அப்படியே வீட்டுக்குள் அவள் போக அடி வைக்க,
“ஏய்! அருவி கூல் ” என்றவனுக்கு இன்னமும் சிரிப்பு அடங்கவில்லை.
“சாரி, சாரி…அருவி நில்லு, நான் சொல்றேன்” என்று அகத்தியன் மூச்சை இழுத்துவிட்டுச் சொன்னாலும் முகமெல்லாம் முறுவலே.
“தெரியலன்னு ஒரு விசயம் கேட்டா, இப்படி தான் கிண்டல் பண்ணுவீங்களா டாக்டர்?” அருவி கோபத்தோடு கேட்டாள்.
“கூல் அருவி. நீ அவ்வளவு தயங்கிக் கேட்கவும் ஏதோ பெரிய விசயம்னு நினைச்சேன். இதுக்கு போய் இவ்வளவு பில்டப். அதான் சாரி” என்று இரு கைகளையும் தூக்கிச் சொல்ல, கோபம் கொஞ்சமாய் மறைந்து அவள் முகத்தில் அமைதி அடியெடுத்து வைத்தது.
“பரவாயில்ல டாக்டர் ” என்றாள் அருவி.
“என்ன திடீர்னு? சக்தி கேட்டானா?”
“ஆமா, நான் எந்த சட்னி வச்சாலும் அங்கிள் மாதிரி இல்ல, அவர் தக்காளி சட்னி மாதிரி இல்லன்னு சொல்றான். எனக்குச் சமையல் அவ்வளவா வராது. அதான் உங்க கிட்ட எப்படி வைக்கிறீங்கன்னு கேட்கலாம்னு” என்று சொல்லவும் அருவியின் செயலில், அவன் அகத்தே ஒரு ஆச்சரிய அருவி கொட்டியது.
சக்தியின் சத்தமில்லா திட்டத்தின் ஒரு பகுதி அது. அடிக்கடி அருவிக்கும் அவனுக்குமான உரையாடலில் அகத்தியனை உள்ளிழுப்பான் சக்தி.
அகத்தியனுக்கோ அண்ணன் மகனுக்காக வந்து கேட்கிறாள். சமையல் வராது என்பதை ஒப்புக்கொள்கிறாள் என்று நினைக்க அருவியின் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது.
“அதுக்கென்ன சொல்லிட்டா போச்சு” என்றவன் செய்முறைகளைச் சொல்ல, அதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டாள் அருவி.
“தேங்க்ஸ் டாக்டர்” என்று சொல்லி அவள் போக,
“அருவி, பெயர் சொல்லியே கூப்பிடுங்க. எனக்கு என்னமோ டாக்டர் டாக்டர் சொல்ல ஹாஸ்பிட்டல் ஃபீல் வருது. இஃப் யூ டோண்ட் மைண்ட்” என்று போகிற போக்கில் சொல்லி விட்டுப் போனான் அகத்தியன்.
அகத்தியனுக்கு வண்டியில் செல்லும்போதும் சரி. ஹாஸ்பிட்டல் போன பின்னும் சரி. அந்த சிரிப்பு குறையவோ மறையவோ இல்லை. ஏனோ அருவி வந்து அப்படித் தயங்கிக் கேட்டது ஏதோ குழந்தை கேட்டது போல இருக்க, நினைக்க நினைக்க, அடக்கவியலா புன்னகை அரும்பியது.
அடுத்த நாள் காலையில் அவன் டியுட்டி முடிந்து வரும்போது என்னவோ அவனையே அறியாது முதல் நாள் மாலை அருவி அவனிடம் தயங்கிப் பேசியது. பின்பு முறைத்தது எல்லாம் ஞாபகத்தில் வர அவன் பார்வை எதிர்வீட்டினை நோக்கியது.
அருவியும் சக்தியும் கல்லூரி சென்றிருக்க,
‘அருவி எப்படி தக்காளி சட்னி வச்சாங்கன்னு தெரியலயே’ என்று யோசனை வந்தது. மாலை பார்க்கும்போது மறக்காமல் கேட்க வேண்டும் என்று நினைத்தான்.
அன்று மாலை சக்தி கல்லூரி விட்டு வரவும் பால்கனியிலேயே நின்றிருந்த அகத்தியன் அவனைக் கண்டு விட்டு,
“என்ன சக்தி, காலேஜ்லாம் எப்படி போகுது?” என்று கேட்டான்.
“சூப்பரா போகுது அங்கிள், என்ன நைட் டியுட்டி முடிஞ்சாச்சா?” என்று சக்தி கேட்க,
“அதெல்லாம் நேத்தோட ஓவர் நாளைக்கு மதியம் தான் போகணும்” என்றவன்,
“ஆமா நேத்து உன் அத்தை எப்படி தக்காளி சட்னி வைக்கனும்னு கேட்டாங்க, ஹௌ வாஸ் இட்?” என்று கேட்டான்.
கையை வைத்து தாடையைத் தடவிய சக்தி,
“நாட் பேட் அங்கிள், பட் நாட் லைக் யுவர்ஸ்” என்று சொன்னான்.
“ஹேய் மேன்! அருவி உனக்காக ஃபர்ஸ்ட் டைம் ட்ரை பண்ணிருக்காங்க. அப்படி சொல்லாத, நான் அதை நூறு தடவை செஞ்சிருப்பேன். கம்பேர் பண்ணாத சக்தி” என்று சொன்னான்.
சக்திக்கு, ‘ஹீரே! தக்காளி நல்லா வேலை செஞ்சிருக்குப் போல. அங்கிள் அத்தைக்கு சப்போர்ட் பண்றார் ’ என்று நினைத்தவன் இதை நீடிக்கச் செய்ய வேண்டி,
“அங்கிள் நீங்க கிடார் வாசிக்கிறேன்னு சொல்லி என்னை சீட் பண்ணிட்டே இருக்கீங்க. நைட் நான் வொர்க்லாம் முடிச்சிட்டு வந்ததும் இன்னிக்கு நீங்க வாசிக்கிறீங்க, டீல்? ” என்று கையை நீட்டினான்.
“டீல் மேன் ”என்று சக்தியின் கையோடு முட்டினான் அகத்தியன்.
அன்றிரவு சக்தி அகத்தியனோடு மொட்டை மாடிக்குச் சென்றான். அருவியும் அவனைத் தூங்க சொல்ல அவன் அலைப்பேசிக்கு அழைக்க, அவனோ வேண்டுமென்றே அதை வீட்டிலேயே விட்டுச் சென்றிருந்தான்.
வேறு வழியின்றி அருவி மாடி ஏறிப் போக, அருவி வருவதைக் கண்டு விட்டு அதுவரை கதை பேசிக் கொண்டிருந்த சக்தி அகத்தியனிடம்,
“அங்கிள் கமான், கிடார் ப்ளே பண்ணுங்க, எனக்குத் தூக்கம் வந்துடும்” என்று சொன்னான்.
“சக்தி, எதுக்கு அவங்களை டிஸ்டர்ப் பண்ற, வந்து தூங்கு வா டைம் ஆச்சு” என்று அருவி கூப்பிட்டாள்,
“ப்ச்! அத்தை ப்ளீஸ், அங்கிள் எனக்கு கிடார் ப்ளே பண்றேன்னு சொன்னாங்க, கேட்டுட்டுப் போகலாம் ” என்று சொல்லி அவளை இழுத்து உட்கார வைத்தான்.
அகத்தியனும், “தக்காளி சட்னி எப்படி இருந்துச்சு?” என்று அருவியைப் பார்த்து கேட்டான்.
“இந்த சாரை கேளுங்க டாக்டர்” என்று அவள் சொன்னாள்.
“அருவி நோ டாக்டர் ப்ளீஸ் ” அகத்தியன் புன்னகையோடு சொல்ல,
“ஓகே, ஒகே அகத்தியன்” என்றாள் அருவியும்.
சக்திக்கோ, ‘பெயர் சொல்லவே இவ்வளவு மாசம். இன்னும் இவங்க லவ் சொல்லி, கல்யாணம் பண்றதுக்குள்ள, எனக்கே பேரப்பசங்க வந்துடுவாங்க போல’ என்று நினைத்துக் கொண்டான்.
“அங்கிள் கமான்” என்று சக்தி சொல்லவும், தக்காளி சட்னியை மறந்துவிட்டு கிடாரை எடுத்துத் தீண்டத் தொடங்கினான்.
மோசார்டின் சிம்போனியை இசைத்தான். அந்த இரவில், மொத்த காற்றும் இசையானது, தென்றல் எல்லாம் இதமானது.
டீஷர்ட் ட்ராக் சூட் சகிதம் அவன் சுவரில் சாய்ந்து நின்று நிலவொளியில் விழி மூடி ரசித்து இசைக்க, அருவியும் தன் புடவை இழுத்துப் போர்த்திக் கொண்டு கை கட்டி அதில் கன்னம் வைத்து ரசிக்கலானாள்.
சக்திக்குத் தான் கடுப்பாய் வந்தது.
‘பிரதாப் போத்தன் மாதிரி என் இனிய பொன் நிலாவே வாசிச்சு எங்க அத்தையை கரெக்ட் பண்ண தெரியுதா பாரு, இப்ப தான் தெரியுது இவர் ஏன் நாற்பது வயசுல சிங்கிளா இருக்கார்னு. புவர் இன்டியன்’ என்று தலையில் கை வைத்தான்.
அதைப் பார்த்து விட்டு அகத்தியன்,
“என்ன சக்தி பிடிக்கலயா? இது மோசார்டோட சிம்போனி” என்று சொல்ல
“அங்கிள் ப்ளீஸ் பாடிட்டே வாசிங்க, இந்த சிம்போனி எல்லாம் புரியல எனக்குத் தமிழ் பாட்டாவே பாடுங்க ” என்று கடுப்போடு சொன்னான்.
“ஏய் எனக்கு புது பாட்டெல்லாம் தெரியாது. ஏன் ஜஸ்டின் பீபர் சாங் கேட்குற மோசார்ட் கேட்க மாட்டேங்கிற” என்று அகத்தியன் கேட்க,
“அங்கிள், என் அம்மா அப்பா தமிழ்ப் பாட்டுத்தான் கேட்பாங்க. அதுவும் எங்க டாடி அத்தை மாதிரி நைட் பாட்டு கேட்டுட்டே தூங்குவாங்க. ஸோ நோ ப்ராப்ளம். ஜஸ்டின் என் டேஸ்டுக்கு இருப்பார். மோசார்ட்லாம் வேண்டாம் ப்ளீஸ்” என்று சக்தி கெஞ்ச தொடங்கினான்.
“சரி சரி சக்தி ” என்று சிரித்தவன்,
“நான் காலேஜ்ல ஃபர்ஸ்ட் டைம் பாடின பாட்டு பாடுறேன்” என்று சொல்லி
‘எனது விழி வழி மேலே ஹோ…
கனவு பல விழி மேலே ஹோ…
எனது விழி வழி மேலே ஹோ…
கனவு பல விழி மேலே ஹோ…
வருவாயா நீ வருவாயா வருவாயா
வருவாயா என நானே எதிர் பார்த்தேன்
அதை சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு’ என்று கிடாரில் இசைத்தபடி அவன் அந்த காலத்துக்குள் சென்று விட்டவனாய் பாடிட,
‘அதை சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு’ என்று அருவியின் இதழ்களிலும் இசையும் வரியும் இணைந்தே தவழ்ந்தன அவள் அறியாமலே.
அவளுக்கு மிகவும் பிடித்த ஜானகிம்மா பாட்டல்லவா?
சக்தியோ அருவியை ஆச்சரியமாகப் பார்த்தான். இவர்கள் பேசும் வரையில் அமைதியாக இருந்தவள் இப்போது கூட சேர்ந்து பாட, அவனுக்கும் ஒரு உற்சாகம் தொற்றியது.
எழுந்து நின்றே ஆடி பாடினான். அருவியின் அலைப்பேசியை எடுத்து அதில் பாடல் வரிகளைப் பார்த்தவன் அகத்தியன் வாசிக்க,
“அதை சொல்லத் துடிக்குது மனசு
சுகம் அள்ளத் தவிக்கிற வயசு” என்று கத்தி உற்சாகத் துள்ளலோடு பாடினான்.
அருவிக்கும் அரும்பியது புன்னகை. அருவிக்குமே அவளது இளமைக்காலங்கள் நினைவிற்கு வர, முகத்தில் மலர்ச்சி.
முதுமைக்குள்ளும் முழுமையாகப் போகாமல் இளமையை இழந்து விட்ட நடுவயதுக்காரர்களுக்கு தான் முதுமையைப் பற்றின பயமும், இழந்து இளமைக்கான ஏக்கமும் நிறைந்து இருக்கும்.
அப்படி ஒரு நிலையில் தான் அகத்தியனும் அருவியும் இருந்தனர். அவர்களுக்கான பிரத்யேக பிரபஞ்சத்திற்குள் போனவர்களாக, இளமைக்காலத்துக்குள் தங்களைத் தேடியவர்களாக,
அகத்தியனின் கைகள் தானாக இசைக்க, அதில் அருவி அவளாக லயிக்க, சக்தி எப்போதோ அங்கிருந்து நழுவி விட்டான். அதைக் கண்டு கொள்ளும் நிலையில் இருவருமே இல்லை.
இசையால் நிரம்பியது அவர்கள் இரவு. அகத்தியன் இசைக்க, அருவி கண்மூடி இருந்ததால் சக்தி போனதை கவனிக்கவில்லை. அவன் பாடல் முழுவதும் முடித்த பின் பார்க்கச் சக்தி இல்லை என்றதும்,
“சக்தி, கீழ போய்ட்டான் போல அவ்வளவு மொக்கையாவா இருந்துச்சு அருவி?” அகத்தியன் ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி இன்னொரு காலை சுவரில் வைத்து கிடாரை தடவியபடி சந்தேகமாகக் கேட்டான்.
“நாட் அட் ஆல், நான் என்னையே மறந்துட்டேன். ரொம்ப ரொம்ப நல்லா பாடுறீங்க, அண்ட் வாசிக்கிறீங்க, தேங்க்ஸ். ஐ ஃபீல் குட்” என்று விட்டுப் போனாள்.
அருவி கீழே வந்த போது சக்தி தூங்கி இருக்க, அவளுக்கும் எதுவும் வித்தியாசமாகப் படவில்லை.
இது போல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சக்தி அகத்தியனைப் பாடச் சொல்ல, அருவியும் அதில் இணைந்து கொள்வாள்.
*************************
ஆறு மாதங்கள் முழுதாக முடிந்து போனது. சக்திக்கு முதல் செமஸ்டர் முடிந்து அடுத்த செமஸ்டரும் தொடங்கி விட்டது. சக்தி கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாவிற்குச் சென்றிருந்தான்.
மாலை வழக்கம்போல் வீடு வந்த அருவியை வீட்டின் அமைதி இம்சித்தது. விடுதியிலிருந்த போது யாரையாவது பார்ப்பாள். இங்கோ கல்லூரி வீடு என மாற்றி மாற்றிப் போய்க்கொண்டிருந்தாலும் சக்தி இல்லா இல்லம் அவளுக்குப் பிடிக்கவில்லை.
பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தவளின் கண்ணோரம் கசிந்தது. விழிகளில் துளி நீர்.
“அருவி” என்ற குரலில் அவள் திரும்ப ஹாஸ்பிட்டல் போய் விட்டு வந்த தோற்றத்திலிருந்தான் அகத்தியன். உடனே காரிகை கைகள் கண்ணீரைத் துடைக்க,
“என்ன அருவி சக்தியை மிஸ் செய்றியா?” என்றான்.
அருவிக்கும் அவனுக்குமான தோழமை நன்கு பலப்பட்டு இருந்தது இத்தனை மாதங்களில்.
“ம்ம்” என்ற அவள் குரல் அவள் வலியை மறைக்கிறது என்று புரிந்தவன்,
“வெயிட் பண்ணு வரேன் ” என்றவன் ஒரு பத்து நிமிடத்தில் இரண்டு காபி கோப்பைகளுடன் வந்தான்.
அருவியிடம் ஒன்றை நீட்டியவன்,
“ஹேவ் இட் ” என்று சொல்ல,
“வேண்டாம் அகத்தியன் ” இவள் மறுத்தாள்.
“உன்னை விட நல்லா போடுவேன் குடி. சக்தி உன்னை நல்லா பார்த்துக்கனும்னு அத்தனை தடவை சொல்லிட்டு போனான். இன்னிக்கு கூட கால் பண்ணினான், வாங்கிக்கோ” என்று நீட்ட அருவியும் வாங்கிக் கொண்டாள்.
“உங்க கிட்டத்தான் பேசுவான் அந்த பெரிய மனுஷன். எனக்கு டெக்ஸ்ட்தான் பண்றான் ” என்றவளுக்கு அவ்வளவு வருத்தம்.
“ஏன் என்னாச்சு?”
“சண்டை போடுறான். பெரிய இவன் மாதிரி” என்றாள் எரிச்சலுடன். இதே அருவி நல்ல மன நிலையிலிருந்திருந்தால் யாரிடமும் இதையெல்லாம் சொல்லி இருக்க மாட்டாள்.
ஆனால் அகத்தியனை ஆறு மாதங்களாகப் பார்க்கிறாள் தானே? அவனின் நட்பு மீது இவளுக்கு நிறைய மரியாதை உண்டு. அவன் சொல், செயல், பார்வை அத்தனையிலும் அவள் காணக் கண்டது கண்ணியம் மட்டுமே.
சக்தி இல்லாத தனிமை வாட்ட, அதுவும் அவளோடு அவன் பேசாமல் இருப்பது இன்னமும் வலியினை தருவிக்க, அதையெல்லாம் அந்த நேர ஆறுதலுக்காய் அகத்தியனிடம் இறக்கினாள்.
பத்து ஆண்டுகளாக, தனியாக இருப்பதும் தனிமையில் இருப்பதும் அவளுக்குப் பழகியதுதான். ஆனால் ஆறு மாதங்களாக, அண்ணன் மகனை தன் மகன் போல் பார்த்தவளுக்கு அவனில்லா தனிமை வலியினை தந்தது.
“என்னாச்சு அருவி? சின்ன பையன், கொஞ்சம் நாம தான் அட்ஜஸ்ட் செய்யணும். அந்த காலம் மாதிரி இல்ல” என்று அகத்தியன் சொல்ல
“அவனா சின்ன பையன்? ஏன் நீ கல்யாணம் செய்யலன்னு கேட்கிறான், என்னிஷ்டம் சொன்னா ரொம்ப பேசுறான்” என்றாள் சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாத நிலையில்.
“கேட்கிறேன்னு தப்பா எடுக்காத, ஏன் நீ கல்யாணம் வேண்டாங்கிற, எனி லவ் ஃபெயிலியர், அப்படி எதாவது?” என்று அகத்தியன் மிகுந்த தயக்கத்தோடு கேட்க,
கொதித்தாள் அருவி.
“எனக்கு வேண்டாம்னு நினைக்க காரணம் இல்ல, வேண்டாம்னா வேண்டாம் தான்” என்று அருவி அவ்வளவு அழுத்தமாகச் சொல்ல, அது என்னவோ அகத்தியனுக்கு ஒரு ஆசுவாசத்தைத் தர, காபியை ரசித்துக் குடித்தவன்,
“அப்போ, உனக்கு ப்ளாஷ்பேக் எல்லாம் இல்லை” என்று சிரித்தபடி கேட்க அவனின் இயல்புப் பேச்சில் இயல்புக்கு மீண்ட அருவியும்,
“அதெல்லாம் இல்ல” என்று சொல்லி அவன் தந்த காபியைப் பருகினாள்.
அகத்தியனோ, “அப்போ இந்த கதையில, நீ, நான், காதல் மட்டும் தான் இல்லையா?” என்றான் அருவியை அவ்வளவு காதலாகப் பார்த்துக் கொண்டே.
அருவிக்கோ குடித்துக் கொண்டிருந்த காபி புரையேறியது.