“மழை பிடிக்கும், ஆனா ஜலதோஷம் வந்திட்டா யார் என்னைப் பாரத்துப்பா டாக்டர்?” என்று அருவி சாதாரணமாகச் சொன்னவள் உடனே உள்ளேயும் சென்று விட்டாள்.
அகத்தியனுக்கு மனம் என்னவோ போல் ஆனது. அருவியும் உள்ளே சென்றுவிடக் காபியைப் பருகிவிட்டு கப்பை உள்ளே எடுத்துச் சென்றான்.
மழை வந்த வேகத்திலேயே சென்றுவிட, லேசாக இருட்டியும் இருக்க, மின் இணைப்பு வேறு இல்லை. சக்தியும் இல்லை. வீட்டிலேயே எவ்வளவு நேரம் சும்மா இருப்பது என்று நினைத்த அருவி பால்கனியில் ஒரு நாற்காலியைத் தூக்கி வந்து போட்டு உட்கார்ந்து கொண்டாள்.
செந்தூரம் சிதறிய வானம். ஆங்காங்கே மேகம் குடியிருக்க, வானம் பார்க்க வசீகரமாய் இருந்திட அதையெல்லாம் ரசித்திருந்தாள்.
ஹெட் செட் உபயோகிக்கும் பழக்கமில்லாதவள் அருவி. அதனால் போனை கையில் வைத்துப் பாடலை மெல்லிய சத்தத்தில் ஓட விட்டு அமர்ந்து கொண்டாள்.
‘தூங்காத விழிகள் இரண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று’
அமிர்தவர்ஷிணியில் அழகாய் பாடிக்கொண்டிருந்தார் ஜானகி.
“போன மழையைத் திரும்ப வர வைக்கலாம்னு ப்ளானா, அருவி?”
என்று பால்கனி சுவரில் சாய்ந்து நின்றான் கேட்டான் அங்கு வந்து நின்ற அகத்தியன்.
”புரியல டாக்டர் ” என்று அருவி சொல்ல,
“இந்த பாட்டு அமிர்தவர்ஷிணி ராகம். அது பாடினா மழை வரும்னு நம்பிக்கை ” அகத்தியன் சொல்ல ஆச்சரியம் அருவியின் விழிகளில்.
“மியூசிக் கத்துக்கிட்டீங்களா டாக்டர்?”
“எஸ் கிடார் வாசிப்பேன், கொஞ்சம் பாடுவேன் அருவி”
“சூப்பர்! எனக்கு யேசுதாஸ் வாய்ஸ் ரொம்ப பிடிக்கும். வெரி டிவைன். அதனால இந்த பாட்டுக் கேட்டேன். நமக்கு ராகம் ஸுருதி எல்லாம் தெரியாது”
“இசை ஒரு உணர்வு. அதைப் படிக்கவெல்லாம் தேவை இல்ல. நா.முத்துக்குமார் சொன்னது மாதிரி குயில் இசை பாட, ஸ்வர வரிசையெல்லாம் தேவையா என்ன?” என்று அகத்தியன் சொல்ல,
“ நீங்க சொல்றதும் சரிதான் டாக்டர். இந்த படத்துல வர எல்லா பாட்டுமே எனக்குப் பிடிக்கும். ஜானகிம்மா பாடின, ஒரு பூங்காவனம் அதுவும் சூப்பர்ல” என்று அருவி சொல்லவும்,
“பாட்டு மட்டுமில்ல அருவி, படம் கூட பிடிக்கும். அக்னி நட்சத்திரம் படம் வந்தப்ப நான் தர்ட் ஆர் ஃபோர்த் படிச்சிருப்பேன். தியேட்டர்ல பார்த்த ஃபர்ஸ்ட் படம். பிரபு, கார்த்திக், அமலா அவங்க மேல ஒரு க்ரேஸ் அப்போ” என்று அந்த நாள் ஞாபகத்துக்குள் அமிழ்ந்தவனாய் அகத்தியன் சொல்லிக் கொண்டு இருக்க,
அருவியோ அவன் சொல்வதை அமைதியாகக் கேட்டிருந்தாள்.
“கடைசியா என்ன படம் பார்த்தீங்க?” அருவி எதார்த்தமாகக் கேட்டாள்.
“ஒரு பத்து வருஷம் இருக்கும் நான் தியேட்டர் பக்கம் போய். இப்ப நான் பார்க்கிற ஒரே தியேட்டர் ஆபரேசன் தியேட்டர், சர்ஜன் இல்லை. பட் சம்டைஸ் போக வேண்டி இருக்கும். இவனுங்க படமா எடுக்கிறானுங்க” என்று அகத்தியன் அடுத்துச் சொல்ல அருவி இப்போது வாய் விட்டே சிரித்தாள்.
“நீங்க என்ன படம் பார்த்தீங்க அருவி?”
“நான் ரொம்ப தியேட்டருக்குப் போனதே இல்ல. அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி எல்லாரும் ஒண்ணா இருந்தப்போ போயிருக்கோம். அப்புறம் காலேஜ் படிக்கிறப்ப ப்ரண்ட்ஸோட இரண்டு மூணு படம் பார்த்திருப்பேன். ஜாப் போய்ட்டு ரொம்ப பார்க்கல. பட் பாட்டு மட்டும் நிறையக் கேட்பேன்”
இவள் சொல்லவும் அவனின் அலைப்பேசியில் எதையோ செய்தவன் அவளிடம் நீட்டினான். அருவி கேள்வியைத் தேக்கி நோக்க,
“இது ராஜா சாரோட சிம்பனி கேட்டு பாருங்க. உங்களுக்குப் பிடிக்கும்” என்று சொல்ல அதைக் கேட்கக் கேட்க, அருவிக்குள் இசையருவியெனப் பெருகி பெருவெள்ளமாக ஓடியது.
ராஜா என்பது பெயர் அல்ல. ஒரு சகாப்தம். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வாழ்ந்தவர்களின் உயிரோடு கலந்துவிட்ட உணர்வு.
அந்த சிம்பனியின் பெயரைப் பார்த்து வைத்துக் கொண்டவள்,
“தேங்க்ஸ் டாக்டர், நல்ல ரெகமெண்டேஷன்” என்றாள் அருவி.
சிறிது நேரத்தில் சக்தியும் வந்துவிட, சக்தியோடு கழிந்தன அருவியின் பொழுதுகள்.
அடுத்த நாள் காலையில், சக்தி யோகா செய்கிறேன் என்று மொட்டை மாடிக்குச் சென்றுவிட, அவனுக்குக் கல்லூரிக்கு நேரமாகிவிடும். கிளம்ப வேண்டுமே என்று அவனைத் தேடி மொட்டை மாடி வரை வந்தாள் அருவி.
கீழே இருந்து அழைத்தாலே கேட்கும் தான். ஆனால் அந்தளவிற்குக் கூட சத்தம் போடுவதையோ பிறர் கவனம் கவருவதையோ அருவி விரும்ப மாட்டாள்.
மாடிக்கு வந்தவள் முதலில் சக்தியைப் பார்க்க, அவன் யோகா மாதிரி எதையோ செய்ய, யாரைப் பார்த்து இவன் செய்கிறான் என்று பார்க்க டீஷர்டும் ஷார்ட்ஸுமாக சக்தியைப் போலவே அகத்தியனும் உடையணிந்து யோகா செய்ய, அருவிக்கு அவனை அப்படிப் பார்த்து சங்கடமாகப் போய் விட்டது.
கூடவே கோபமும்.
‘வயசான காலத்துல வயசுப்பசங்க மாதிரி ஷார்ட்ஸ பாரு. இந்த சக்தியால இதெல்லாம் நான் பார்க்க வேண்டி இருக்கு’ என்று நினைத்தவள்,
“சக்தி சிக்ஸ் தர்டி ஆகிடுச்சு, வந்து குளிச்சுட்டு ரெடியாகு” என்று சொன்னாள்.
“நீங்க யோகா முடிச்சிட்டீங்களா அத்தை” சக்தி கேட்க,
உடனே,
“நீங்க யோகாவெல்லாம் பண்ணுவீங்களா அருவி?” என்று அகத்தியன் கேட்கவும் இவள் பதில் சொல்லும் முன் சக்தியே,
“எஸ் அங்கிள். அத்தை யோகா எல்லாம் நல்லா செய்வாங்க. என்ன நாலு சுவத்துக்குள்ளே செய்வாங்க. நீங்க பாருங்க எவ்வளவு சூப்பரா இந்த மார்னிங்ல சில் ப்ரீஸ்ல. சன்னைப் பார்த்துட்டே செய்றீங்க” என்று அவன் வளர்ந்த கலாச்சாரம் கொண்டு சொன்னான். அங்கே அப்படி ஆண் பெண் பேதமெல்லாம் அவன் கண்ணில் படவில்லையே.
“அதெல்லாம் உனக்குப் புரியாது. உனக்கு காலேஜ் டைம் ஆச்சு, போ சக்தி” என்று அருவி கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லவும்,
“பை அங்கிள்” என்றபடி சக்தி இறங்கிப் போய்விட்டான்,
நேற்று இருந்த சுமுக நிலை கண்டு அகத்தியன்,
“இவ்வளவு நல்ல க்ளைமைட் எஞ்சாய் பண்ணலாமே அருவி. நிறைய லேடீஸ் கூட நம்ம அபார்ட்மெண்ட் பார்க்ல யோகா பண்றாங்களே! காலையில வெளியே வந்தாலே நல்ல ஆக்சிஜன் கிடைக்குமில்லையா” டாக்டராய் அவன் அக்கறையில் சொன்னான்.
“எல்லாம் சொல்ல நல்லாயிருக்கும். அதெல்லாம் உங்களுக்குப் புரியாது டாக்டர்” என்ற அருவியின் குரலில் ஒரு ஆற்றாமை இருந்தது.
“புரியற மாதிரி சொல்லணும் டீச்சர்”
“அதை தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க டாக்டர்?”
“அதை மறைச்சு நீங்க என்ன பண்ண போறீங்க அருவி?” என்று கேள்வியையே பதிலாக்கினான்.
“ஆணோட தனிமைக்கும் பெண்ணோட தனிமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு டாக்டர். இப்ப எனக்கு டைம் ஆச்சு பை” என்றபடி அவள் இறங்கிப் போக, அவள் கேள்வியும் அவனுள் ஆழ இறங்கியது.
அன்று டியுட்டி முடிந்து வந்தவன் சக்தியோடு பேசிக் கொண்டிருக்க, அருவி வாசலில் வந்து சக்தியைப் பார்த்தவள்,
“நான் துணியை எடுத்துட்டு வரேன் சக்தி” என்று சொல்லிவிட்டுப் போக, அகத்தியனுக்கோ அருவி சொல்லி விட்டுப் போன,
‘ஆணோட தனிமைக்கும் பெண்ணோட தனிமைக்கும் நிறை வித்தியாசம் இருக்கு டாக்டர்’ என்ற வார்த்தைகள் நீங்காமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
“சக்தி, எனக்கு ஒரு கால் பண்ணணும் அப்புறம் பார்க்கலாம் பை” என்றவன் வேகமாக மாடிக்கு ஓடிச் சென்றான்.
துணிகளை எடுத்துக் கொண்டிருந்த அருவியிடம் , “காலையில தான் டைம் இல்ல. இப்ப கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க டீச்சர்” என்று அகத்தியன் வந்து கேட்டான்.
அருவிக்கு முதலில் என்ன சொல்ல வேண்டும் என்பதே புரியவில்லை. புரிந்த போது அவனை முறைத்தாள்.
“என்னை யார் கேள்வி கேட்டாலும் எனக்குப் பிடிக்காது டாக்டர்” என்று அருவி அடக்கப்பட்ட கோபத்தோடு சொன்னாள்.
“நான் கேள்வி கேட்கல அருவி. நிஜமாவே நீங்க சொன்னதோட அர்த்தம் தெரியல அதான் கேட்கிறேன்” என்று அவன் சொல்ல,
“டாக்டர்” என்று பல்லைக் கடித்தவள்,
“காலையில நீங்க டிஷர்ட் ஷார்ட்ஸோட போய் மொட்ட மாடியில வெட்ட வெளிச்சத்துல யோகா பண்ணீங்க, இதே நான் சுடிதார் போட்டுப் போய் அதே மாதிரி செஞ்சா கூட யாரையோ மயக்க அப்படி செய்றேனு சொல்வாங்க. போதுமா?” என்றவளின் வார்த்தைகள் அவள் இந்த வலியையும், இதே வார்த்தைகளையும் கடந்து வந்திருக்கிறாள் என்பது புரிய அகத்தியனுக்குச் சங்கடமாகப் போய் விட்டது.
“ ஐ அம் ரியலி சாரி அருவி” என்றான்.
அருவியோ பதிலேதும் பேசாமல் வேகமாகத் துணிகளை அள்ள,
“ஒன்னு சொல்லட்டுமா அருவி. நிறையப் பேருக்கு நம்மளைப் பார்த்து பொறாமை, நம்ம சிங்கிளா கெத்தா வாழறோம்னு” என்று அவள் மனநிலை மாற்ற வேண்டி அவன் சொன்னான்.
அருவிக்கோ, ‘நீங்க சிங்கிள் மட்டுமில்ல அங்கிளும் கூட’ என்று நினைக்க, எப்போதும் அளந்து சிரிப்பவளின் அதரங்கள் இன்று அளவில்லா சிரிப்பினில் விரிந்தது.
அவள் சிரித்த மகிழ்விலும் மன திருப்தியிலும்,
“நான் உங்களை காயப்படுத்தனும்னு நினைச்சுக் கேட்கல அருவி, அப்படி இருந்தா ஐ அம் சாரி”
“இட்ஸ் ஓகே டாக்டர்” என்றபடி அருவியும் இறங்கி வந்துவிட்டாள்.
அத்தையை இன்னும் காணுமே என்று தேடி வந்த சக்தியின் காதுகளில் இவர்கள் உரையாடல் விழ, எதையும் காட்டிக் கொள்ளாமல் கீழிறங்கி வந்துவிட்டான்.
ஆனால் உள்ளுக்குள் நிறைய யோசனைகள்.
‘அத்தை இவ்வளவு நல்லா பேசுற ஒரே ஆள் அகத்தியன் அங்கிள். எத்தனை நாளைக்கு அத்தை தனியா இருப்பாங்க. சக்தி நீ சிங்கிளா இருக்கறது இட்ஸ் நாட் எ பிக் டீல். சீக்கிரமே அத்தையை அங்கிள் கூட மிங்கிள் ஆக்கணும்’ என்று மனத்தில் முடிவு செய்து கொண்டவன் அதற்கான வேலைகளைச் சத்தமில்லாமல் செய்யத் தொடங்கினான்.
*******
அடுத்த மாதம் தேன்மொழியும் ஊரிலிருந்து வந்துவிட, அருவியைப் பார்க்கும்போதெல்லாம் பேச்சுக் கொடுப்பார்.
அருவியும் அகத்தியனைக் கண்டால் செண்டிமீட்டர் சிரிப்பு ஒன்றிரண்டு வார்த்தைகள் என்று பேசி விட்டு செல்வாள். இருவருக்குள்ளும் ஒரு நல்ல தோழமையும் மரியாதையும் வந்திருந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை.
முதல் நாள் தேன்மொழி பெங்களூருக்குச் சென்றிருந்தார். அகத்தியன் டியுட்டிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். சக்தி நண்பர்களோடு வெளியே சென்றிருந்தான். அருவி மட்டும் வீட்டினில் தனியாக.
அவர்கள் வீட்டு பால்கனியில் நிற்பதும் அகத்தியன் கதவைத் திறப்பானா எனப் பார்ப்பதுமாக அவள் பார்வை இருக்க, அகத்தியன் கதவைத் திறந்துவிட, அவளுக்குள் முளைக்கின்றன தயக்கங்கள்.
“டாக்டர் ” என்று அழைத்து விட்டவளுக்கு எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை.
“சொல்லுங்க அருவி ” கதவைப் பூட்டியவன் அவள் முகம் பார்த்துக் கேட்டான்.
“அது ஒரு டவுட் ” என்று அருவி தயங்க,
“அருவிக்கு என்ன டவுட்?” என்று அவன் கை கட்டி சுவற்றில் சாய்ந்து நின்று கேட்டான்.
அவள் கேட்ட கேள்வியில் அகத்தியனுக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது. அருவியோ அகத்தியனைக் கோபத்தில் முறைத்தாள்.