கல்லூரியில் காண்பிக்கும் அதே கண்டிப்பான பாவனையில்,
“ஏன் மிஸ்டர்! நான் எப்ப அப்படிச் சொன்னேன்?” என்று கேட்டாள் அருவி.
“சொல்லணும்னு இல்ல மேடம், நீங்க என்னைப் பார்க்கிற பார்வையே சொல்லுது” என்று அகத்தியன் அவள் அகம் படித்தவனாகக் கேட்டிட, அருவியோ அலட்சியமான குரலில்,
“குடிகாரங்க கிட்ட எல்லாம் நான் பேச்சு வச்சிக்கிறதில்லை” என்றாள் பட்டென்று.
“குடிகாரங்க கிட்டதானே பேசமாட்டீங்க, எங்கிட்ட ஏன்?” என்று அகத்தியன் திருப்பிக் கேட்க,
“ஓஹ்ஹ்” என்று அலட்சியமான குரலில், “ஒரு நாள் காலையில நீங்க பீர் பாட்டிலோஸோட வரதை நான் பார்த்தேன்” என்று அருவி சொல்லவும் இதுவரை அருவியிடம் இருந்து அலட்சிய பாவம் அகத்தியனின் முகத்தில் இடம் பெயர்ந்தது.
எதிர் வீட்டில் ஒருவன் இருக்கிறான் என்று அருவிக்குத் தெரியும். ஆனால் அவன் யார் எப்படி இருப்பான் என்றெல்லாம் தெரியாது. அவன் மருத்துவன் என்பது அவன் வீட்டுப் பெயர்ப் பலகை பார்த்துத் தெரியும். குடி வந்த ஒரு நாள் காலையில் அகத்தியனைப் பாட்டிலும் கையுமாகப் பார்த்தவளுக்கு அவனைப் பற்றிய அபிப்ராயம் நல்லதனமாக மனத்தில் விளையவில்லை.
அகத்தியனோ நன்றாய் இன்னும் சாய்ந்து கொண்டவன்,
“ஸோ வாட்?” என்று கேட்க, அந்த பாவனை பேச்சு எல்லாம் அருவிக்கு கோபத்தைக் கொடுத்தது.
அதற்குள் அவர்கள் தளம் வந்திருக்க, அகத்தியனின் பதிலில் அருவி விழிகளில் வினா வைத்து விழித்திட,
“முன் கோபம் மாதிரி முன் தீர்மானமும் தப்பான விசயம்” அகத்தியன் லிஃப்டின் வாசலில் நின்றபடி சொல்ல,
“வாட் டூ யூ மீன்?” என்றாள் அருவி.
“என் கையில இருக்க இந்த வைட் கோட் அண்ட் ஸ்டெத் உங்க கைக்கு வந்திட்டா நீங்க டாக்டர் ஆகிடுவீங்களா என்ன? இல்லை தானே? நான் எப்பவும் காலையில டெரஸ்ல யோகா பண்ணுவேன், நைட் யாரோ தண்ணியடிச்சுட்டு பீர் பாட்டில்ஸ் சிகரெட் பாக்கெட்ஸ் இருந்துச்சு. லேடீஸ்லாம் துணி காயப்போட வருவாங்க, சின்ன பசங்களாம் வருவாங்கன்னு நான் அதைப் பார்த்துட்டு டிஸ்போஸ் செய்ய எடுத்துட்டு வந்தேன்” என்று அவன் விளக்க அருவி பட்டென்று
“சாரி டாக்டர்” என்றாள். ஒரு நொடி கூட யோசிக்கவில்லை.
அகத்தியனை அலங்கரித்தது அவனது ட்ரேட்மார்க் புன்னகை.
“இதனால தான் சக்தியை எங்கிட்ட பேச விடலையா நீங்க?”
“ஆமா, பட் ரியலி சாரி டாக்டர்” என்று அருவி உணர்ந்து சொன்னாள்.
“இட்ஸ் ஓகே எப்பவும் முறைச்சிட்டே இருப்பீங்களா, அதான் ஏன்னு தெரிஞ்சிக்கனும் தோணிச்சு. அஸ் எ டாக்டரா என்னோட பேஷண்ட்ஸ்க்கு நான் கொடுக்கிற அட்வைஸ். நோ ஸ்மோக்கிங், நோ டிரிங்க்ஸ். அதை நானே ஃபாலோ செய்யலன்னா எப்படிங்க?” என்றவன் அவன் வீட்டு கதவைத் திறக்க ஆரம்பித்தான்.
“சக்தி சின்ன பையன் இல்லையா, எங்க தப்பான ஆளுங்க கூட பழகிடுவான்னோன்னு ஒரு பயம். அதனாலதான், பட் நிஜமா சாரி டாக்டர்” என்று அருவி சொன்னது உண்மையே.
ஆனால் முழுமையான உண்மை அல்ல. தனியாக இருக்கிறோம், இவன் வேறு இப்படி எதிர் வீட்டினில் குடிகாரனாக இருக்கிறானே என்ற பெண்மைக்கே உரிய எச்சரிக்கை உணர்வு தான் அவளை அகத்தியனிடம் இருந்து மிகவும் தள்ளி வைத்தது. இதையெல்லாம் எப்படி அவனிடம் சொல்ல என்று அருவி நினைக்க, அவள் சொல்லாமல் விட்டது கூட அவனுக்குப் புரிந்தது.
அகத்தியன் தன்னைப் பற்றி யார் விமர்சித்தாலும் கண்டுகொள்ளாதவன்தான். ஆனால் அருவி முகத்திற்கு நேரே முறைக்கவே ஏன் என்று தெரிந்து கொள்ளும் வேகம் அவனுள் பிறந்தது.
கதவைத் திறந்தவன், “இட்ஸ் ஓகே அருவி” என்று புன்னகைத்துவிட்டுச் செல்ல அருவி அவள் வீட்டினுள் நுழைந்தாள். இதையெல்லாம் பார்த்திருந்த சக்தி,
“என்ன அத்தை அதிசயமா இருக்கு, அங்கிள் கூட பேசிட்டு வரீங்க?” என்று கேட்க, சக்தி தான் நினைத்ததை விட மெச்சூர்ட் என்று புரிந்த அருவி எல்லாவற்றையும் அவனிடம் சொன்னாள்.
“அங்கிள் ரொம்ப ஜெனியுன் அத்தை, பட் உங்க மேலயும் தப்பில்ல” என்றதும்,
“ஏன் சக்தி? எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட், உன் வயசுக்கு எப்படி டா அவர் கூட பேசுற. நம்ம ப்ளாட்ல அவரை விட சின்னவங்க எல்லாம் இருக்காங்க. உனக்கு எப்படி அவரைப் பிடிக்குது?” என்று அருவி கேட்க,
“ஹா ஹா அத்தை! நானும் வயசானவங்களாம் அப்படிதான் நினைச்சேன். நீங்க, அப்பா எல்லாம் போர் அங்கிள் மத்த பெரியவங்க மாதிரி அட்வைஸ் எல்லாம் செய்ய மாட்டாங்க. ரொம்ப பேச மாட்டாங்க. பேசினாலும் ரொம்ப ஜோவியலா இருப்பாங்க. அதனால எனக்குப் பிடிக்கும்”
“வந்தப்போ நானும் எதிர்வீட்ல எதாச்சும் அழகான பியுட்டி இருக்கும்னு பார்த்தா, அன்னிக்கு தேன்மொழி பாட்டி வந்தாங்க. அப்புறம் அவங்க தியான்னு கூப்பிடவும் யாரோ கேர்ள்னு நினைச்சா அங்கிள் வந்து நிக்கிறாரு” என்று சக்தி சொல்ல அருவியோ கொட்டும் அருவியென சிரித்தாள்.
“உனக்குத் தேவை தான் டா” என்று சிரித்தபடி அருவி
சமையலுக்குக் காய் நறுக்க, சக்தி தனது அசைன்மெண்டை எழுதிக் கொண்டிருந்தான்.
“ஏன் அத்தை நீங்கத் தனியா இருக்கீங்களே பேசாம எங்க கூடவே யூஎஸ் வந்திருக்கலாமில்ல?” என்று சக்தி திடீரென கேட்க, அவனைக் கேள்வியாய்ப் பார்த்த அருவி,
“என்ன சக்தி, தீடீர்னு இப்படி கேட்கிற? “ என்றாள்.
“இல்ல அத்த, நீங்க முன்னாடி பாட்டி இருந்தவரைக்கும் அவங்க கூட இருந்தீங்க, யாருமில்லாம ஒரு மாதிரி கஷ்டமா இருக்குமில்லையா?” என்று அவன் அவள் வருத்தம் உணர்ந்தவன் போல் சொல்ல,
“அதெல்லாம் பழகிடுச்சு சக்தி, ஆமா நீ அம்மா அப்பாவை ரொம்ப மிஸ் பண்றியா?” என்று இவள் அத்தையாக அக்கறை கொண்டு கேட்டாள்.
“ஆமா அத்தை, டூ வீக்ஸ்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அப்போ உங்களுக்கும் அப்படித்தானே இருக்கும்” என்றவனின் தலையைக் கலைத்தவள், தன் நிலையிலிருந்து யோசிக்கும் அண்ணன் மகன் மீது வார்த்தையால் வடிக்க முடியாத வாஞ்சை பிறந்தது அருவிக்கு. அவன் தலையைச் செல்லமாய் வருடியவள்,
“அடே பெரிய மனுஷா, நான் குழந்தை கிடையாதுடா. அதெல்லாம் அத்தைக்குக் கஷ்டமா இல்ல. இப்ப நீ வேற இருக்க” என்றவள் சமைக்கப் போய் விட்டாள்.
அன்றிரவு அருவி ஆழ்ந்த தூக்கத்திலிருந்தாள். திடீரென அவளை வந்து எழுப்பினான் சக்தி.
“அத்த, அத்த ஹாலுக்கு வாங்க”
“என்ன சக்தி என்னாச்சு” பதற்றமாக அவள் எழுந்து வர,
ஹாலில் கேக் வைக்கப்பட்டிருந்தது.
“ஹாப்பி பர்த்டே டியர் அத்தை” என்று அவன் அருவியைக் கட்டிக்கொள்ள,
“ஹே!” என்ற அருவிக்குப் பேச்சே இல்லை, விழிகளில் லேசாய் சாரல். முகம் நிறைய மலர்ந்த புன்னகை மட்டுமே.
அடுத்து இருவரும் கேக் எல்லாம் வெட்டி முடிக்க, சக்தி அருவிக்கென வாங்கி வந்த மோதிரத்தைத் தர,
“டேய் எப்படா வாங்கின, ஏது இவ்வளவு பணம்?” என்று அருவி கேள்வியாய்க் கேட்டாள்.
“அத்தை! நோ கொஸ்டின்ஸ். ஜஸ்ட் எஞ்சாய்” என்றபடி சக்தி சிரிக்க,
“சக்தி!!!”
“எங்கிட்ட என்னோட சேவிங்க்ஸ் இருந்துச்சு அத்தை. தட் டூ டாலர்ஸ்னால நிறைய வந்துச்சு. அதையெல்லாம் யோசிக்காம எப்படி இருக்கு ரிங்? அதை சொல்லுங்க” என்று அவன் ஆவலாய் அருவியிடம் கேட்டான்.
அண்ணன் மகளை ஒற்றைக் கையால் அணைத்துக் கொண்டவள்,
“தேங்க்ஸ் ஸோ மச் சக்தி, நான் எக்ஸ்பெக்டே பண்ணல. ஐ அம் ரியலி சர்ப்ரைஸ்ட்” என்றாள்.
அடுத்த நாள் காலையில் இவர்கள் இருவரும் கல்லூரிக்குக் கிளம்பி கீழே படிக்கட்டுகளில் இறங்கிட, அப்போதுதான் அகத்தியன் இரவுப்பணி முடிந்து திரும்பினான்.
இவர்களைக் கண்டவன், சக்தியைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு,
“ஹாப்பி பர்த்டே அருவி” என்று சொல்ல அருவிக்குள் ஆச்சரியம் முளைத்தாலும், முகத்தில் காட்டாது
“தேங்க்ஸ் டாக்டர்” என்று மட்டும் சொன்னாள். அகத்தியனும் தலையசைத்து விட்டுச் சென்று விட்டான்,
“ஹேய்! அவருக்கு எப்படி என் பர்த்டே தெரியும். இதெல்லாமா சக்தி சொல்லுவ?” என்று அருவி அண்ணன் மகனைக் கடிந்து கொண்டாள்.
அவள் வயது தெரிந்திருக்குமோ என்ற கவலை அருவிக்கு. வயது ஏறுவதைப்பற்றியெல்லாம் கவலையற்றவள் அருவி. ஆனால் அவளின் வயது தெரிந்தால், ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்ற கேள்வி காம்போவில் வருமே. பிறரின் பேசுபொருளாவது அருவிக்குப் பிடிக்காத ஒன்று.
“அன்னிக்கு அகத்தியன் அங்கிள் கூட வெளியே போனது உங்களுக்கு கிஃப்ட் வாங்கத்தான் அத்தை. இல்லன்னா நான் உங்க கூடவோ இல்ல ப்ரண்ட்ஸ் கூடவோ போயிருக்க மாட்டேனா. அங்கிள்னா பெரியவங்க, எனக்கு ஜீவல்ஸ் வாங்கி பழக்கமில்ல. அதான் அங்கிள் கிட்ட சொன்னேன்”
“என்ன சொன்ன”
“அத்தைக்குப் பர்த்டே. கிஃப்ட் வாங்கனும்னு”
“அங்கிள் வேற எதாச்சும் கேட்டாரா?”
“என்ன கிஃப்ட்னு கேட்டார். எவ்வளவு அமவுண்ட் வச்சுருக்கக் கேட்டார். தட்ஸ் ஆல்” என்று சொல்லவும் தான் அருவிக்குள் திருப்தி.
அகத்தியனும் அவனின் அம்மா போல் தோண்டி துருவாதது அவளுக்கு அகத்தியன் மீது ஒரு நன்மதிப்பை நல்கியது.
“ஏன் அத்தை இவ்வளவு கொஸ்டின்ஸ் கேட்கிறீங்க. அவர் ஜஸ்ட் விஷ் தானே பண்ணினார்” என்று சக்தி புரியாமல் கேட்டான்.
“சக்தி, லேடீஸ்ட்ட ஏஜும் ஜென்ஸ்ட்ட சேலரியும் கேட்கக் கூடாது. அதான் டாக்டர் பர்த்டேன்னதும் அதையெல்லாம் கேட்டிருப்பாரோ நினைச்சுக் கேட்டேன். தட்ஸ் ஆல்” என்றாள் அவனைப் போலவே.
“அங்கிள் யாரைப் பத்தியும் எதுவும் கேட்க மாட்டார். பேச மாட்டார். நீங்கக் கேட்கிற அளவுக்குக் கூட கேட்க மாட்டார் அத்தை” என்று சக்தி சொல்ல,
அருவியோ , “டேய் அங்கிள், ஐ.எஸ்.ஐ மார்க் போட்ட அக்மார்க் நல்லவர் தான் டா. முதல்ல சீக்கிரம் வா, உன் காலேஜ் பஸ் போயிட போகுது” என்று அவனை இழுத்துக் கொண்டு போனாள்.
“ஹலோ ஆன்ட்டி, அவர் எனக்கு அங்கிள் உங்களுக்கு இல்ல. உங்க வயசுக்கு அவரை அங்கிள் சொல்றீங்க. வாட்ஸ் திஸ் யா?” என்று அவன் அருவியைக் கிண்டல் செய்ய,
“டேய் வேண்டாம்டா. நான் உனக்கு மட்டும் தான் ஆன்ட்டி, ஆனா அவர் ஊருக்கே அங்கிள்” அருவி கடுப்பில் சொன்னாள்.
“நீங்களும் எல்லாருக்கும் ஆன்ட்டி தான் ஆன்ட்டி” என்று சக்தி அருவியை வம்பிழுக்க, அதற்குள் அவன் கல்லூரி பேருந்து வந்துவிட்டது.
“சாயங்காலம் வீட்டுக்கு வருவ தானே, அப்போ இருக்கு” என்று மிரட்டி அனுப்பினாள். ஆனால் முகம் என்னவோ மென்னகையைச் சுமந்திருந்தது.
அடுத்த வந்த நாட்கள் அமைதியில் கழிய, அன்று மாலை அருவி பால்கனியில் நின்றிருந்தாள். முன்பாவது ஹாஸ்டலில் உடன் தங்கும் பெண்களிடம் பேசுவாள். இங்கு யாரிடமும் பேசுவது கிடையாது. கல்லூரி, வீடு, சக்தி என்றதாகிப் போனது அருவியின் உலகம். அப்படியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஹாய் அருவி” என்ற குரல் கேட்கச் சட்டெனத் திரும்பியவள் பார்வையில் டீ ஷர்ட் ட்ராக் சூட் சகிதமாய் அகத்தியன்.
“ஹாய் டாக்டர் ” என்று இவளும் புன்னகை செய்தாள்.
“சக்தி எங்க ஆளை காணோம்?” என்றவனின் கையில் காபி கோப்பை இருக்க, அதைப் பருகிக் கொண்டே பேசினான் அகத்தியன்.
அகத்தியனைப் பற்றி அருவிக்கு இருந்த அபிப்ராயம் மாறியதிலிருந்து, இருவரும் எப்போது பார்த்தாலும் சின்னதாய் ஒரு சிரிப்போடு கடந்துவிடுவார்கள்.
“ப்ரண்ட்ஸ் கூட சினிமாவுக்குப் போயிருக்கான்” என்றாள் அருவி.
“ஓ ” என்று அகத்தியன் சொல்கையிலேயே லேசாய் மழைத்தூறல் இவர்கள் மேல் தெளிக்க, அகத்தியன் விழிகளை மூடி அதை ரசித்து, பெருமூச்சை உள்ளிழுத்து காபியையும் மண்வாசத்தையும் நுகர்ந்து கொண்டு இருக்க, அருவியோ தூறல் கொஞ்சம் வேகமாய்த் தெளிக்கத் தொடங்கியதுமே, பால்கனியை விட்டு நகர்ந்து, வீட்டு வாசலின் அருகில் நின்று கொண்டாள்.
“என்ன அருவி, மழை பிடிக்காதா? லேசான தூறல் தானே?” அகத்தியன் கேட்க
அருவி தந்த பதிலில் அதுவரை மழைச்சாரலிலும் மண்வாசத்திலும் திளைத்திருந்த அகத்தியனுக்குள் என்னவோ உடைந்து போனது.