“ஆதிக்கும் பார்வதிக்கும் கல்யாணமாகிடுச்சான்னு பார்த்து சொல்றியா அருவி?”
இப்படி வந்து தேன்மொழி தீடீரென கேட்க உண்மையில் ஒன்றும் புரியாமல் நின்றாள் அருவி.
“யாரும்மா அவங்க?” என்று அறியாதவளாய் அருவி கேட்டாள்.
சக்திக்கோ இதையெல்லாம் கேட்கச் சிரிப்பு பீறிட்டது. பட்டாசெனப் பையன் வெடித்துச் சிரித்தான்.
“சக்தி” என்று அருவி அதட்டினாள்.
அப்போதும் சக்தியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. காரணம் இந்த இரண்டு நாட்களில் அருவி கை ரீமோட்டில் நர்த்தனமாடியது இரண்டே இரண்டு சேனல்களில் மட்டுமே. ஒன்று நியுஸ், இன்னொன்று பாட்டு. அப்படி இருக்க அவளிடம் இந்த தேன் பாட்டி வந்து சீரியல் பற்றிக் கேட்கிறதே என்று சக்திக்குச் சிரிப்பு வந்தது.
“அது சீரியல் அத்த” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“அடடா! சக்தி நீயும் பார்ப்பியா ?” தேன்மொழி பாட்டிக்குச் சக்தி மீது இனப்பாசம் பெருகியது.
சக்தியும், “இல்ல பாட்டி, அம்மா பார்ப்பாங்க அதனால தெரியும் ” என்று சொன்னான்.
“வீட்ல டீவி நல்லா தான் ஓடிட்டு இருந்துச்சு, பொட்டுன்னு நோ சிக்னல்னு வருது ” என்றவருக்கு ஆதிக்கும் பார்வதிக்கும் கல்யாணமாகிட வேண்டுமே என்ற கவலை அப்பட்டமாய்த் தெரிந்தது.
அருவி கொஞ்சம் பரந்த மனம் கொண்டவளாய்,
“உள்ள வாங்கம்மா, இங்க நம்ம டீவியிலேயே பாருங்க ” என்றவள் சக்தியிடம் திரும்பி,
“சக்தி, பாட்டிக்கு என்ன சேனல் வேணுமோ வச்சி கொடு ” என்று சொல்லச் சக்தியும் வைத்துக் கொடுத்தான்.
தேன்மொழி ஆர்வம் பாதியும் அதை விட அதிகம் கவலையோடும், என்னவோ அகத்தியனுக்கே திருமணம் நடக்கப் போகிறது போல் அத்தனை கவலையோடு தொலைக்காட்சியைப் பார்க்க, அருவிக்குப் புன்னகை பூக்க, அதைச் சக்தியும் பார்த்து விட்டு அவனும் ரகசியமாகப் புன்னகைத்தான்.
“தோசை சாப்பிடுங்கமா ” என்று அருவி தேன்மொழியை உபசரித்தாள்,
“அதெல்லாம் எட்டு மணிக்கே ஆச்சும்மா, லேட்டா சாப்பிட்டா தியன் திட்டுவான் ” என்று சொல்லி விட்டு மீண்டும் டீவியில் கண் பதித்தார்.
“பால் சாப்பிடுறீங்களாம்மா?” என்று மீண்டும் கேட்க, அருவிக்கு ஒரு இதமான மென்னகையைப் பதிலாகத் தந்தவர்,
“எதுவும் வேண்டாம்மா, சாப்பிட்டு மாத்திரைப் போட்டாச்சு. நீ சீரியல்லாம் பார்க்க மாட்டியா அருவி ?” என்று அவர் விசாரித்தார்.
சக்தி பொசுக்கென்று மீண்டும் சிரித்தவன் அருவி பதில் சொல்லும் முன்பே,
“பாட்டிமா, எங்க அத்தையோட பாலிசியே சிகரெட் குடிக்கிற ஆம்பிளையும் சீரியல் பார்க்கிற பொம்பளையும் நல்ல வாழ்ந்ததா இல்லைங்கறதுதான் ” என்று சக்தி சொல்ல,
“ரொம்ப வாலு பையன் சக்தி நீ ” என்று சொல்லியபடி தேன்மொழி பெரிதாகப் புன்னகைத்தார்.
“சக்தி, காலையில காலேஜ் போகணும், போய் தூங்கு முதல்ல ” என்று விரட்டியவள், அமைதியாக டீவி முன் தேன்மொழியோடு உட்கார்ந்து கொண்டாள்.
சீரியல் ஓடும் வரை அதிலேயே கண்ணாக இருப்பவர் விளம்பர இடைவெளி விட்டதும் அருவி பக்கம் திரும்பினார்.
“தியன் எப்பவும் டீவியெல்லாம் கரெக்டா வச்சிடுவான். எதாவது பார்க்காம விட்டுட்டா கூட அப்புறமா லேப்டாப்ல போட்டுக் காட்டுவான் ”
“என் பொண்ணு வீடு பெங்களூர்ல இருக்கு, அங்கதான் எப்பவும் இருப்பேன். மாசத்துக்கு ஒரு வாரம் தியனோட இருப்பேன் ” என்று தேன்மொழி சொல்ல அருவியின் அதிகபட்ச பதில் சென்டிமீட்டர் அளவு சிரிப்பு அவ்வளவே.
அருவிக்கு நிச்சயமாய் இப்படியெல்லாம் பேசி பழக்கமில்லை. ஆனால் அவர் இவளை எதுவும் கேள்வி கேட்காமல் பேசுவதே போதுமென இருந்தது. பார்க்கும் எல்லாரும் எப்போது திருமணம் என்றோ? ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் அவளை நோக்கி வீசப்படும் கேள்விகளை அறவே வெறுத்தாள் அருவி.
அவள் யாரைப் பற்றியும் பேச மாட்டாள். அவளைப் பற்றி யார் பேசுவதையும் விரும்ப மாட்டாள். இப்போது தேன்மொழி சகஜமாகப் பேசினாலும், இயல்பிலேயே எதையும் தோண்டித் துருவும் ஆர்வம் அற்றவள் அருவி என்பதால் அவள் நிலை அமைதியே.
அடுத்து சீரியல் தொடர மீண்டும் தேன்மொழியின் கவனம் அதில் பதிந்து போனது. பத்து மணிவாக்கில் எதிர் வீட்டில் கேட் திறக்கும் சத்தம் கேட்டு தேன்மொழி உடனே,
“என் பையன் வந்துட்டான் போலம்மா நான் கிளம்புறேன் ” என்று சொல்லி அவர் வேகமாக எழ நாடகம் இன்னும் நிறைவு பெறவில்லை என்பதால்,
“முழுசா பார்த்துட்டு போங்கம்மா ” என்று சொன்னாள்.
“பரவாயில்ல அருவிம்மா, தேங்க்ஸ்மா. தியன் போன்ல காட்டுவான் நீ தூங்கு, என்னால உனக்கு லேட்டாச்சு” என்று அவள் கன்னம் தட்டி விடைபெறவும் அவர் செயலில் கனிவுற்றது காரிகை மனம்.
“அதெல்லாம் இல்லம்மா, நான் எப்பவும் தூங்குற டைம். குட் நைட்மா” என்று சொல்ல,
“குட் நைட்மா” என்று தேன்மொழியும் விடைபெற அருவியின் அகத்தினுள் வந்து அமர்கின்றன துளி ஆச்சர்யமும், பெரும் அமைதியும்.
அவளை ‘ஏன்மா இன்னும் கல்யாணமாகல?’ என்று கேட்காத ஒரு நபர் ஆயிற்றே! எங்கே அவர் எதாவது கேட்டிடுவாரோ என்று இவ்வளவு நேரம் அவளுள் பரவிய அச்சம் அகன்றதில் ஆசுவாசம் அருவியென அவள் அகத்தினில் பொழிந்தது.
தன் வீட்டிற்குள் சென்ற தேன்மொழி,
“தியா! வந்துட்டியாப்பா டீவில சிக்னல் இல்லையா, அதான் அருவி வீட்டுக்குப் போய்ட்டு வந்தேன். உன் போன்ல வச்சிக்கொடேன், இன்னும் சீரியல் முடியல ” என்ற சொன்ன அம்மாவைப் பார்த்து அன்பு நிறைந்த புன்னகையைச் சிந்தியவன்,
அவன் போனில் அதற்கான செயலியைத் தேடி எடுத்து அம்மாவிடம் நீட்டினான். அடுத்து அறைக்குள் புகுந்து உடை மாற்றி வந்தவன் தட்டில் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டு அம்மாவின் பக்கத்தில் தரையில் உட்கார்ந்தான்.
தேன்மொழி சோபாவில் உட்கார்ந்து கொண்டே கீழே அமர்ந்திருந்த அகத்தியனின் தலைகோதினார்.
அன்னையின் அன்பு வருடல். அகத்தியனுக்குப் பிடித்த ஒன்று.
“என்னம்மா உங்க ஆதிக்கும் பார்வதிக்கும் கல்யாணமாகிடுச்சா ?” என்று கிண்டலாய்க் கேட்டான்.
“ஆகப்போகுது, அவனெல்லாம் பாரு, அவங்கம்மாவுக்கு தெரியாம பண்றான். நான் உன்னை யார வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி பல வருசம் ஆச்சு. நீதான் கேட்கல” என்று ஆரம்பிக்க,
அகத்தியன் அப்படியே டேக் டைவர்ஷன் எடுத்தான்.
“ஏன் மா! சீரியல் மிஸ் ஆச்சுன்னா ஆப்ல பார்த்துக்கலாம் தானே! அதுக்கு ஏன் மா அவங்களையெல்லாம் டிஸ்டர்ப் பண்ணனும் ?” என்று கேட்டான்.
அருவி அவனை இந்த ஒரு வாரமாகப் பார்க்கும் பார்வையில் தெரிவது பிடித்தமின்மைதானே? பின்பு ஏன் அவள் வீட்டிற்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்டான் அகத்தியன்.
ஆனால் தேன்மொழியோ,
“அந்த அருவிப்பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. அது சீரியலே பார்க்காதாம், அவங்க அண்ணன் பையன் சொன்னான். ஆனாலும் என் கூட உட்கார்ந்து பார்த்துச்சு” என்று சொல்லவும்,
‘ஓ! என்னைதான் அவங்களுக்குப் பிடிக்கல போல, அம்மா கிட்ட நல்லா நடந்திருக்காங்க. இட்ஸ் ஒகே ’ என்பதாக அந்த எண்ணத்தை விட்டவன் அம்மா சீரியல் பார்க்கும் வரை அவரோடு உட்கார்ந்திருந்தான்.
அவர் பார்த்து முடித்த பின்,
“சீக்கிரம் தூங்குங்கம்மா இனிமே இப்படி லேட் நைட் சீரியல் பார்க்கறேன்னு தூக்கம் முழிக்காதீங்க ” என்று அக்கறையில் சொல்ல, அது இனிக்கவில்லை போல அவன் அன்னைக்கு.
அடுத்த நொடியே அவர் ஆயுதத்தைக் கையில் எடுத்தார்.
“உன் கல்யாணத்தைத்தான் பார்க்கக் கொடுத்து வைக்க மாட்டேங்குது, அட்லிஸ்ட் டீவியிலாச்சும் பார்க்கலாம்னா அதுக்கும் பொறுக்காதே உனக்கு” என்று கோபமாகப் பேசினார்.
“மா! உனக்கு என் கல்யாணத்தைப் பார்க்க முடியலன்னு கவலையா இல்ல நான் சீரியல் பார்க்க கூடாதுனு சொன்ன கோபமா?” என்று அவர் தாடையைப் பிடித்துக் கொஞ்சலாய்க் கேட்டான்.
“இரண்டும்தான்டா ” என்றார் இன்னும் கோபமாக. அம்மாக்களுக்கு மட்டும் கோபத்தோடு கண்ணீரும் காம்போ ஆஃபரில் வரும் போல. கண்களிலும் நீர் நிறைந்து விட்டது.
அகத்தியன் ஒன்றும் திருமணம் வேண்டாம் என்றவன் இல்லை. இருபத்து எட்டு வயதிற்கு மேல் அவனுக்கு பெண் தேட தொடங்கினார் தேன்மொழி. ஆனால் அவன் ஜாதகத்தில் ராகு கேதுவெல்லாம் ரவுண்ட் கட்டி விளையாட ஒன்றும் அமையவில்லை. அப்படியே அமைந்தாலும் ஏதோ ஒரு தடுமாற்றம்
ஒன்று இவர்களுக்குப் பிடிக்காமல் போகும், இல்லை பெண்வீட்டார்க்கு, அப்படியே தட்டிக்கழிந்து போக, இதோ வயது நாற்பதில் வந்து நிற்கிறது.
ஒரு முப்பத்து நான்கு வயதிற்கு மேல் அகத்தியனுக்குமே திருமண ஆசை என்பது தீர்ந்து போனது. பெரும்பான்மையான பெண்கள் திருமணத்திற்குப் பின் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று சொல்ல, அவன் அம்மாவை விடுவதா? அந்த காரணத்திற்காகவே பாதிக்கும் மேல் பெண்களை இவன் நிராகரித்திருக்கிறான்.
அதுவும் திருமணமான அவனின் நண்பர்களின் புலம்பலை எல்லாம் கேட்ட பிறகு அவனுக்குத் திருமண நாட்டம் என்பது முற்றிலுமாய்த் தொலைந்து போனது.
அம்மாவின் அழுகைக் கண்டவன் உடனே அவரை அணைத்துக் கொண்டு,
“என் செல்லம்மால, கல்யாணம் நடக்கணும்னு இருந்தா நடக்கும், இல்லன்னா சிங்கிளா கெத்தா நான் வாழ்ந்துட்டுப் போவேன்மா, இதுக்கெல்லாம் அழாத ப்ளீஸ்” என்று சொல்லவும் தான் அவர் கொஞ்சம் சமாதானமானார்.
அடுத்து வந்த ஒரு வாரம் விரைவாகச் சென்றுவிட, அருவிக்கும் சக்திக்கும் கல்லூரி சென்று வரவே நேரம் சரியாக இருந்தது. அகத்தியனின் அம்மாவும் ஊருக்குச் சென்று விட, எதிர் வீடு எதிரி வீடு போலவே இருந்தது.
பேச்சு வார்த்தை என்ன, பார்வை பரிமாற்றம் கூட இல்லை. ஆனால் அருவி இல்லா நேரத்தில் அங்கிளுடன் சக்தி மிங்கிள் ஆன கதை அருவி அறியாதது.
அன்று மாலை அருவி வீடு வந்த போது வீடு பூட்டி இருந்தது. எப்போதும் சக்தி முதலில் வீடு வந்துவிடுவான். அருவியிடம் இருந்த ஸ்பேர் கீயை வைத்து அவள் வீட்டைத் திறந்து விட்டு சிறிது நேரம் பார்க்க, அப்போதும் சக்தி வரவில்லை.
ஐந்து மணிக்கே வீடு திரும்பி விடுபவன் இன்று வராமல் இருக்க, சக்தியின் அலைப்பேசிக்கு அழைத்தாள். அதுவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் என்று வர, அருவியின் அகத்தின் எம்மருங்கிலும் பரவியது எல்லையற்ற பயம்.
இவள் அவனுக்காக வீட்டின் வாசலிலேயே நின்று கொண்டிருக்க, சக்தியோ கையில் ஒரு பையோடு அகத்தியனிடம் கதையளந்தபடி லீஃப்டினுள் இருந்து வெளி வர, அருவிக்கு அவ்வளவு கோபம். இருவரின் மீதும் கோபப் பார்வையை வீசினாள்.
சக்தி வீட்டிற்குள் நுழையும் வரை பொறுமையைப் பொத்தி வைத்தவள், கதவை அடைக்கையில் அதனையும் அடைத்து வைத்து சக்தியிடம் கத்தினாள்.
“எங்க போன சக்தி?”
“எனக்குக் கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டி இருந்தது அத்தை, நீங்க வந்த பின்னாடி போனா லேட் ஆகும்னு அகத்தியன் அங்கிள் ஃப்ரீயா இருந்தார்னு அவரோட போனேன்” என்று சக்தி நிதானமாகச் சொன்னான்.
“உன்னை யார் அவர் கூடவெல்லாம் போகச் சொன்னது சக்தி? என் பேச்சைக் கேட்கவே கூடாதுன்னு சபதம் எடுத்திருக்கியா நீ? உன் போனுக்கு ட்ரை பண்ணினா அதுவும் நாட் ரீச்சபிள்” என்றாள் இன்னும் கூடிய வேகத்துடனும், கோபத்துடனும்.
நம்மை நம்பி ஒரு பொறுப்பைக் கொடுக்கையில், வருகிற ஒரு வகையான அதீத பயம். அதைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டிய பயம். அப்படியான பொறுப்பு அருவிக்கு சக்திவேல்.
“இனிமே தெரியாதவங்க கூடவெல்லாம் போகக் கூடாது ” அத்தை கட்டளையெனச் சொல்ல, கட்டுப்படுமா இளங்காளை? இவள் காளைக்கு மூக்கணாங்கயிறு மாட்ட நினைக்க, காளைக்கோ மூக்கின் மேல் கோபம் வந்தது.
“அகத்தியன் அங்கிள் ஒன்னும் தெரியாதவங்க இல்ல அத்தை! சும்மா நொச்சு பண்ணாதீங்க” கடுப்பாய் சின்னக்காளை சொல்லி விட்டுச் சென்று விட, அருவிக்கு என்ன செய்ய வென்றே தெரியவில்லை.
அடுத்த நாள் இயல்பில் கழிய, அன்று மாலை அருவி லிஃப்டில் தனியாக வருகையில், அகத்தியனும் உள்ளே நுழைய, அருவியின் முகத்தில் ஒரு அலட்சியம் குடி கொண்டது. அவன் பக்கம் திரும்பாமல் இவள் கையில் வைத்திருக்கும் ஹாண்ட் பேக்கை இறுக்கிப் பிடித்து நின்றாள்.
அகத்தியன் அருவியைப் பார்த்து மிக மிக நிதானமான குரலில்,
“எங்கிட்ட உங்களுக்கு என்ன பிரச்சனை அருவி?” என்று கேட்டிட,
அகத்தியனின் கேள்வியில் ஒரு நொடி திடுக்கிட்டாலும் திடத்துடனே அவனை நோக்கினாள் அருவி.