எதிர்வீட்டுக் கதவு திறக்க, எதிர்ப்பார்ப்பு எல்லாம் பை பை சொல்லிடும் வண்ணம் எதிரில் நின்றது பியுட்டி அல்ல, பாட்டியே !
சக்திக்கோ ‘பிரியாணில பீஸ் இல்லன்னா பரவாயில்ல, இங்க பிரியாணியே இல்லன்னா என்ன பண்றது? ’ என்று நினைத்தவன் அதிர்ச்சியில்,
“அய்யோ! பாட்டீ” என்று தன்னையும் மீறி கத்திவிட்டான் .
உடனே திரும்பினார் தேன் பாட்டி,
“என்னப்பா கூப்பிட்டியா?” என்று சட்டென கேட்டார்.
“ஆஹா! எஸ் பாட்டி, ஐ அம் சக்தி” என்று சொல்ல,
“ஐ அம் தேன்மொழி, இந்த ப்ளாட்ல இருக்கியா நீ?” என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே மீண்டும் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
“தியா! நான் இங்க இருக்கேன்” என்று பாட்டி சத்தம் போட,
‘பாட்டியோட பேத்தி போல, தியா மீன்ஸ் லைட், கமான் மை தியா” என்று அவன் பரபரப்பாய் கதவைப் பார்த்தான்.
வந்தவன் அகத்தியன்.
அகத்தியனை கொஞ்சம் உற்று நோக்கினான் சக்தி.
கையில் வெள்ளை கோட், ஒரு மினி சூட்கேஸ் இருக்க, வயதினைப் பார்த்தால் எப்படியும் நாற்பது போல் தோன்றியது.
அப்போது தான் எதிர்ப்ளாட்டை நன்றாய்ப் பார்த்தான் சக்தி.
டாக்டர். அகத்தியன் என்று ஸ்டெதஸ்கோப் வடிவலான பெயர் பலகையின் நடுவில் அவனது பெயர் இருந்தது.
‘ஒருவேளை டாக்டருக்கு டாட்டர் இருக்குமோ? ’ என யோசனை ஓடுகையில், அகத்தியன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சக்தியைப் பார்க்க, அவனின் பார்வை அவர்களது வீட்டை நோக்க,
சக்தி மனத்திலோ , ‘சீனியர் சிட்டிசன்ஸ் ஃபர்ஸ்ட் வராங்களா? ’ என்று நினைத்து நின்றான்.
ஆணின் பார்வை அங்கிளுக்குப் புரியாதா என்ன?
“எங்க வீட்ல நானும் அம்மாவும் மட்டும் தான் “ என்று அகத்தியன் அவனின் த்ரேட் மார்க் புன்னகையோடு சொல்ல, அசடு வழிந்தான் சக்தி.
உடனே “ஹாய் அங்கிள், ஐ அம் சக்தி ” என்று சக்தி கை நீட்டினான்.
“ஐ அம் டாக்டர்.அகத்தியன். நைஸ் டூ மீட் யூ” என அகத்தியனும் சிறியவனின் கை பற்றிக் குலுக்கினான்.
“இந்த ப்ளாட்ல புதுசா குடி வந்திருக்கியா சக்தி?” என்று தேன் பாட்டி கேட்டார்.
“ஆமா பாட்டி, யூஎஸ்லேர்ந்து இங்க ஸ்டடீஸ்காக வந்திருக்கேன். அத்தை கூட இருக்கேன்” என்று சொன்னான்.
“ஓ! நைஸ் ஆல் தி பெஸ்ட் மை பாய்” என அகத்தியனும் புன்னகையோடு பேசத் தொடங்க, சக்தியும் அவனோடு சகஜமாய்ப் பேசத் தொடங்கினான். அகத்தியனுக்கு எப்போதுமே முகத்தினில் மென்முறுவல் தவழ்ந்து கொண்டே இருக்கும். அவனிடம் நோயோடு வருபவர்களை சிடுசிடுவென பார்க்காமல் புன்னகையோடு பார்த்து, கனிவோடு பேசி, கருத்தாய் மருத்துவம் பார்ப்பவன் அவன்.
அதுவும் அகத்தியன் அமெரிக்காவில் தான் மேற்படிப்பு படித்துள்ளான் என்பதை அவனது பெயர் பலகைப் பார்த்து அறிந்த கொண்ட சக்திக்கு இன்னுமே அவனோடு பேசுவது பிடித்திருக்க, அகத்தியன்தான்,
“அம்மா, உள்ளே போய் உட்காருங்க, எவ்வளவு நேரம் நிப்பீங்க, சாரி மை பாய், எனக்கு டியூட்டிக்கு டைம் ஆச்சு.. சீ யூ இன் தி ஈவினிங்… டேக் கேர்” என்று சொல்லி விட்டு படியில் இறங்க, அப்போது பார்த்து படியேறினாள் அருவி. இவன் வருவதைக் கண்டவள் அப்படியே ஒதுங்கி நிற்க, அகத்தியன் குடுகுடுவென்று படிகளில் இறங்கிப் போனான்.
மூன்றாவது மாடி என்றாலும் அகத்தியன் இறங்கும்போது படிகளில் இறங்கி ஏறும்போது மட்டும் லிஃப்டில் வருவான்.
அருவிக்கு எங்கு போனாலும் படிக்கட்டுகள் தான். ஆனால் சிலசமயம் ஏறும்போது மட்டும் லிஃப்டினை பயன்படுத்துவாள்.
கையில் அவள் பைகளை வைத்திருக்க, உடனே சக்தி அதை அருவியிடம் இருந்து வாங்க, முறைத்துக் கொண்டே அதனைக் கையில் கொடுத்தவள் வீட்டினுள் சென்றாள்.
“உங்கிட்ட நான் என்ன சொன்ன சக்தி? எதிர்வீட்ல பேசக் கூடாது வெளியே வராதன்னு சொன்னேன் தானே?” என்று திட்ட ஆரம்பித்தாள்.
“ஆ! அத்தை ப்ளீஸ் அந்த பாட்டி கிட்டையும் அங்கிள் கிட்டையும் தானே பேசினேன். ஹி இஸ் எ ஜெண்டில் மேன், அண்ட் டாக்டர் டூ. அதை ஏன் பெரிய இஷ்யூ ஆக்குறீங்க?” என கேட்டவன் பைகளை டேபிளின் மேல் வைத்து விட்டு, சோபாவில் உட்கார்ந்தான்,
“யாரு? அவர் ஜெண்டில் மேன் நீ பார்த்த, டோண்ட் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர். நான் இங்க வந்து இரண்டு வாரம் ஆகப்போகுது, உன்னை விட எனக்கு மனுஷங்களை நல்லா தெரியும், உன்னோட அமெரிக்கா அதிகப்பிரசங்கி தனத்தையெல்லாம் இங்க காட்டாத! தெரியாதவங்கட்ட பேசக்கூடாதுன்னா பேசக்கூடாது. தட்ஸ் இட் ” என்று அருவி கண்டிப்பாய் சொன்னாள்.
“ஆல் ஆர் ஸ்ட்ரெஞ்சர்ஸ் அட் ஃபர்ஸ்ட் தான் அத்தை, ப்ச்.. ஒரு ஹாய்தானே சொன்னேன் எதுக்கு இப்படி ரியாக்ட் செய்றீங்க?” என்று அவன் ஒரு மாதிரி சோர்வாய்க் கேட்க, அருவியும் அதை அப்படி விட்டு விட்டு,
“சரி டா, கோச்சுக்காத! இங்க வாங்க, அத்தை உங்களுக்கு என்ன வாங்கி வச்சிருக்கேன் பாருங்க” என்று அவனை அறையினுள் அழைத்து சென்று அவனுக்கென வாங்கி வைத்த ஆப்பிள் லேப்டாப்பைக் காட்ட, சக்தி சக்திமான் ஆனது போல் அப்படி குஷியாகி,
“தேங்க்ஸ் மச் அத்தை, தேங்க் யூ, நியூ மாடல் டூ தேங்க்ஸ்” என அருவியை கட்டிப்பிடித்து சொல்ல, அவன் தலையைச் செல்லமாய்க் கோதியவள்,
“உனக்கு தேவையானதை இன்ஸ்டால் பண்ணிக்கோ, இன்னிக்கு நல்லா ரெஸ்ட் எடு, நாளைக்கு நாம காலேஜ் போய் ப்ரோசிஜர்ஸ்லாம் பார்ப்போம். ” என்று சொன்னாள்.
அன்று மாலை சக்தியை அழைத்து சென்று சேண்ட்வெஜ், பிட்சா என வாங்கி தந்து அவனோடு லிஃப்டில் ஏற, தீடீரென ஓடி வந்து ஏறினான் அகத்தியன். அருவி அவனைக் கண்டும் காணாமல் நிற்க, சக்தி முகத்தினில் சன்னமாய் ஒரு மென்புன்னகையோடு அகத்தியனைப் பார்க்க, லிஃப்டில் நன்றாய் சாய்ந்து நின்று தன்னை சமன்படுத்திய அகத்தியன், சக்தியைப் பார்த்து,
“ஹாய் சக்தி சென்னை எப்படி இருக்கு?” என விசாரிக்க,
“சென்னை வந்திருக்கேன் அங்கிள். நிறையை டைம்ஸ், பட் இட்ஸ் நியூ ஆல் தி டைம், நிறைய சேஞ்சஸ்” என சக்தி சொன்னான்.
அருவி அகத்தியனிடம் பேசும் சக்தியைக் கண்களினால் கண்டிக்க, அதை சக்தி பார்த்தானோ இல்லையோ அகத்தியனிடம் அருவியின் பார்வை அகப்பட்டுக்கொண்டது.
அகப்பட்ட பார்வையின் அர்த்தம் படிக்க, என்ன செய்துவிடுவேன் இவள் அண்ணன் மகனை இப்படி சாதாரணமாய்ப் பேசியதற்கே இந்த பெண் முறைக்கிறாள் என்பதாய் அகத்தியனின் எண்ணம்.
அவள் விழிப்பார்வைக்கெல்லாம் அசருபவனா அகத்தியன்?வேண்டுமென்றே மூன்றாம் தளம் வரும் வரையில் சக்தியோடு பேசிக்கொண்டே வந்தான்.
“சக்தி, ப்ளோர் வந்துடுச்சு வா” என்று கடுப்பாய் சொல்லி அருவி வெளியே வர, அவள் பின் அகத்தியனும் சக்தியும் வந்தனர்.
அருவி வீட்டினுள் நுழைந்து கொள்ள இன்னமும் சக்தியும் அகத்தியனும் பேசிக் கொண்டே இருந்தனர்.
“சக்திதீயீயீய்! கம் இன்” என்று அருவி அதட்டிய பின்னே சக்தி உள்ளே வர, அகத்தியனுக்கு இவளுக்கு என்னைப் பற்றி என்னதான் அபிப்ராயம் ஓடுகிறது என்ற எண்ணம் ஓடியது.
இருந்தும் மற்றவர் பார்வை பற்றியெல்லாம் கவலை கொள்பவன் அல்ல அவன். அப்படி இருந்தால் நாற்பது வயது வரை சிங்கிள் ஸ்டேட்டஸீலே வாழ முடியுமா என்ன?
உள்ளே வந்த சக்திக்கோ அகத்தியன் முன் அருவி அப்படி அதட்டியது சங்கடத்தை தந்திட. அவன் வயதுக்கே உரிய கோபமும் உருவாக,
“அத்தை வாட் டூ யூ திங் ஆஃப் யூர்செல்ஃப்? முதல்ல வீட்ல புரோபசரா நடந்துகிறதை விடுங்க, அண்ட் நான் உங்க ஸ்டூண்டண்ட் கிடையாது. சும்மா அதட்டுறது மிரட்டுறதெல்லாம் செய்யாதீங்க! யார் கிட்ட பேசணும் பேசக் கூடாதுன்னு நீங்க ரூல்ஸ் போடாதீங்க ” என்று கோபமாக சொன்னவன் அறைக்குள் போய் விட, அருவிக்குக் கஷ்டமாக இருந்தது.
தனியாகவே இருந்து பழக்கப்பட்டவள் ஆயிற்றே! அதுவும் தாய் இறந்த பின் இந்த பத்தாண்டுகளாக ஹாஸ்டல் வாசம்தான். தான் உண்டு, தன் வேலை உண்டு கூடவே கொஞ்சம் தனிமையுண்டு என்று வாழ்பவள்.
தலைமுறை இடைவெளி என்பது பெரிய தலைவலி. அது மிகவும் கவனமாக கையாள வேண்டிய ஒன்று.
சக்தியிடம் இன்னும் பொறுமையாகப் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள் அருவி. காலேஜில் பேசுவது போல் இப்படி கண்டிப்பாக கட்டளையாகப் பேசக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டாள்.
சக்தி அறைக்குள் இருக்க, இவள் துணிகளைக் காயப்போட மொட்டை மாடிக்குச் சென்று விட்டு கீழிறங்க,
தேன்மொழி வெளியே நின்று கொண்டிருந்தார். அந்த தளத்திற்கென தனியே பால்கனி உண்டு. இரு வீடுகளும் எதிரெதிரே இருக்க, அருவி துணிகளைப் போட்டு விட்டு வர, தேன்மொழி மெல்லமாய்ப் பேச்சுக் கொடுத்தார்.
“புதுசா குடி வந்திருக்கியாம்மா?”
“ஆமாங்கம்மா”
“உன் பெயர் என்ன? என்ன பண்ற?”
“என் பெயர் அருவிம்மா, காலேஜ்ல லெக்சுரரா இருக்கேன்” என்றாள் அமைதியாக,
இவர் இவ்வளவு கேள்வி கேட்டும் பதிலுக்கு அருவி எதுவுமே பேசவில்லை. பேசக்கூடாதென்பது இல்லை, அதுதான் அருவி.
அருவியின் பழக்கமும் கூட, அதிகம் பேசமாட்டாள். தேவைக்கு மீறி ஒரு வார்த்தை வராது.
ஆனால் வயதானவர்களுக்குப் பேச்சுத் துணை என்பது அவசியம் என்பதை விட சில சமயங்களில் அத்தியாவசியம் ஆகிவிடுகிறது. தேன்மொழி அருவி கேட்காவிடினும் ,
“நான் தேன்மொழி, நாங்க பத்து வருஷமா இங்கதான்மா இருக்கோம் எதாவது தேவைன்னா சொல்லும்மா” என்றார் பரிவாய்.
“சரிங்கம்மா” என்று புன்னகையோடு சொன்னவள் வீட்டிற்குள் புகுந்து கொண்டாள்.
அடுத்து இரவுக்கு என்ன சமைக்கலாம் என்று பார்த்தவள் , தோசை ஊற்றப் போக, அது கிழிந்து கொண்டே இருக்க, அருவிக்கு டென்ஷன் கூடியது.
இதுவரையில் அவள் அவளைத் தவிர யாரையும் பார்த்துக் கொண்டது இல்லை. அம்மா கூட அவர்தான் இவளைப் பார்த்துக் கொண்டார். சக்தி வளரும் பையன். அவளை நம்பி அண்ணனும் அண்ணியும் அவனை அனுப்பி இருக்கிறார்கள் என்பதால் கொஞ்சம் கூடுதலாய் அவன் மீது கவனம் செலுத்த, அது சில நேரம் அதீதமாய் தப்பிப் போய்விடுகிறது.
சக்திக்குப் பிடித்த மாதிரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குக் கொஞ்சம் டென்ஷனை தர, தோசை தாறுமாறாய் போக, அருவி என்ன செய்கிறாள் எனச் சக்தி எட்டிப்பார்த்தான்.
“என்ன சக்தி?”
“என்ன பண்றீங்க அத்தை?” சக்தியின் கோபம் எல்லாம் அந்த அந்த நிமிடங்கள் மட்டுமே.
“தோசை ட்ரை பண்றேன், வர மாட்டேங்குது” இவள் கொஞ்சம் தயக்கத்துடன் சொன்னாள்.
“அதை கொடுங்க அத்தை” என்றவன் கல்லை வேகமாக தேய்த்து தோசையை ஊற்ற அருவி ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“எப்படி சக்தி! செமையா பண்ற” இவள் மனம் திறந்து பாராட்டினாள்.
“என் ப்ரண்டோட டேட் இந்தியன் ரெஸ்டாரெண்ட் வச்சிருக்காங்க அத்தை. அங்க போறப்ப நாங்க கத்துக்கிட்டது” என்றவன் தோசைகளை சுட்டு தட்டில் வைத்து அருவிக்குத் தந்தான்
“ஏய்! நீ ப்ரஸ்ட் சாப்பிடு” என்று அருவி மறுக்க,
“நோ! நோ! நீங்க முதல்ல சாப்பிடுங்க” என்று அவன் தட்டை அவளை நோக்கி நீட்டினான்,
அருவியின் விழிகளில் அரும்பியது சின்னதாய் ஒரு அருவி.
“என்னாச்சு அத்தை? ஏன் ஒருமாதிரி ஆகிட்டீங்க?”
“தாத்தா இப்படித்தான் என்னை உட்கார வச்சு தோசை தருவாங்க சக்தி” என்றாள் கொஞ்சம் நெகிழ்ந்த குரலில்.
“தாத்தாவை மிஸ் பண்றீங்களா?”
“ரொம்ப்ப்ப்ப்ப்ப” என்ற அருவி நிச்சயமாய் சக்திக்குப் புதிது தான்.
அப்படியே இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட, கதவு தட்டும் ஓசையில் அருவி வெளியே பார்க்க, தேன்மொழி தான் நின்றுகொண்டிருந்தார்.
“சொல்லுங்கம்மா” என்றாள் அருவி.
அடுத்து தேன்மொழி கேட்டதில் சக்திக்கு உள்ளே சிரிப்பு பீறிட்டது. அதுவும் அருவியின் அதிர்ந்த முகத்தை பார்க்க பார்க்க இவனுக்கு இன்னும் வேடிக்கையாக இருந்தது.