“ஹாய் டார்லிங்” என்று அவனோடு ஹைஃபை போட்டுக்கொண்டார் தேன்மொழி.
சக்தி உறங்க, குளிக்க மட்டுமே எதிர் ப்ளாட் செல்வது. மத்தபடி மாமன் வீடுதான் சக்திக்கு. அவனோடு சேர்ந்து தேன்மொழியையும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் வரை பார்க்க வைத்து விட்டான் சக்தி. அருவி அகத்தியனின் அவாவினால், தேன்மொழி மொத்தமாக மகனோடு செட்டிலாகிவிட்டார்.
“சக்தி கை கழுவிட்டு வா சாப்பிடலாம்” என்ற அருவியைப் பார்த்து,
“என்ன அத்தை, கோல்டா மாமா கிட்ட சொன்னீங்களா?” என்று சக்தி கவலையாகக் கேட்டான்.
“அவன் கிட்ட சொல்லல, இப்ப மதியத்திலிருந்து தான் செம கோல்ட் சக்தி, நேத்து மொட்டை மாடியில பனியில உட்கார்ந்திருந்தாங்களே அதான்” என்று தேன்மொழி சொன்னார்.
“ஆமா ஆமா, என் இனிய பொன் நிலாவே! த ர ர ரா தர த” என்று கிடாரில் மீட்டுவது போலவே சக்தி ஆக்ஷன் செய்ய,
“உங்களை” என்ற அருவி வெட்கம் சுமந்த வதனத்தோடு சக்திக்குச் சாப்பாடு எடுத்து வைக்கப் போனாள்.
போகும் வழியில் போன இரவின் ஞாபகம்.
நேற்று இரவு சக்தி அகத்தியனிடம்,
“மாம்ஸ் முன்னாடியெல்லாம் அத்தையை இம்ப்ரெஸ் பண்ண கிடாரை எடுப்பீங்க, இப்ப கிடாரை வாசிச்சு ஃபைவ் மந்த்ஸ் ஆகப்போகுது” என்று குறைபட்டான்.
“ஹேய் சக்தி! உங்க அத்தை என்னைப் பார்த்துத் தான் இம்ப்ரெஸானா, கிடார் பார்த்து இல்லை. என்ன அருவி?” என்று புருவம் உயர்த்தி அகத்தியன் கேட்க,
“தியன், சக்தி பேசாம சாப்பிடுங்க” என்றாள் அருவி.
அருவிக்குமே அவன் பாடல் என்றால் ஆசைதான். ஆவல் தான். ஆனால் ஆவலையும் மீறிய அதீத காதல் தேடல் இருவருக்குள்ளும்.
இருவருமே பேசாதிருந்த தனிமை பொழுதுகளை இப்போது வாய்க்கப்பெற்றிருக்கும் வாழ்க்கையின் தனித்த பொழுதுகளில் பேசியே தீர்த்தனர்.
அதிலும் அகத்தியன் பேச, அருவி கேட்டுக்கொண்டே இருப்பாள். அவளுடனான அத்தனை நொடிகளையும் அவன் ரசித்த வாழ அவா கொள்ள, இசை என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே.
அனைவரும் உண்டு முடித்தவுடன், அந்த அபார்ட்மெண்ட் வாசிகள் தங்களை வீட்டுக்குள் வைத்த அடைத்தவுடன் பதினொரு மணி வாக்கில் அகத்தியன், அருவி, தேன்மொழி, சக்தி எல்லாரும் மாடிக்குச் சென்று உட்கார,
“என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
த ர ர ரா தர த
தொடருதே தினம் தினம்
த ர ர ரா தர த
பொன்மாலை நேரங்களே
என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே
தேனாடும் ரோஜாக்களே”
அகத்தியன் இசைக்க சக்திக்கு ஒரே குஷி.
“மாம்ஸ், எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருது சொல்லவா?” என்று கேட்டு,
“ஒரு நாள் நீங்க வேற பாட்டு வாசிச்சப்ப, என் மைண்ட் வாய்ஸ் இதான். என்ன இது அங்கிள், என் இனிய பொன் நிலாவே பாடி அத்தையை இம்ப்ரெஸ் செய்யலன்னு” என்று சொல்ல தேன்மொழிக்கு ஒரே சிரிப்பு.
கொஞ்சம் நேரம் கழித்து “மாம்ஸ், எனக்கு வீக்லி ஒன்ஸ் டிரெயினிங் தரீங்க, கிடார் வாசிச்சு, யாராவைது கரெக்ட் பண்ணனும். இப்பவே ஆரம்பிச்சா தான் நான் சீக்கிரமே என் ஸ்டேடஸை சிங்கிள் டூ மிங்கிள் ஆக்க முடியும்” என்று அவன் எப்போதும் அகத்தியனிடம் பேசுவது போல் பேசிட, அருவி அதையெல்லாம் கேட்டதில்லையே.
“சக்தி என்ன பேசற நீ?” என்று அதட்ட,
“விடு அருவிம்மா, சக்தி சும்மா விளையாட்டுக்கு சொல்றான்” என்று தேன்மொழி சமாதானம் செய்ய, அப்போதும் அருவி முறைப்பாய் அண்ணன் மகனைப் பார்த்தாள்.
“எனக்குத் தூக்கம் வருது, நான் வீட்டுக்குப் போறேன்” என்று சொல்லி சக்தி ஓடி விட,
தேன்மொழியும் “நேரமாச்சு பனி வேற கொட்டுது, வாங்க நம்மளும் போவோம். வா அருவி” என்று சொல்லி எழுந்து கொள்ள, அகத்தியன் அருவியின் கையைப் பிடித்துக் கொண்டு அவளை எழ விடவில்லை.
“மா, நீ போ. நாங்க பின்னாடியே வரோம்” என்று சொன்னான்.
“சளி பிடிச்சிக்கும்டா”
“நான் தான் டாக்டர் இருக்கேனே” புன்னகையாய் அகத்தியன் சொல்ல,
“நீ ஓசில டிரிட்மெண்ட் பார்ப்பங்கறதுக்காக நாங்க ஊசி குத்திக்கனுமா. போடா சீக்கிரம் வாங்க” என்று சொல்லி விட்டு கீழே போய் விட்டார்.
அருவியும்,
“வாங்க தியன் போகலாம், குளிருது, மழை வர மாதிரி வேற இருக்கு” என்று சொல்ல,
இருவரும் எழுந்து கொள்ள, அருவியைச் சுவரில் சாய்த்து அணைப் பிடித்து நின்றான் அகத்தியன்.
கொண்டல் காற்றா, கூதல் காற்றா, எதுவோ ஒன்று உடல் தீண்டிடச் சத்தமில்லா இரவு பொழுது.
அகத்தியன் செயலில் அருவியின் விழிகள் விரிந்து கொள்ள,
“நான் செப்பல் கூட போடல குளிருது வாங்க தியன் போகலாம்” அருவி சொல்ல, அகத்தியனோ அருவி எதிர்ப்பாரா வகையில் அந்த ஏகாந்த இரவில் அவள் இடையைப் பற்றித் தூக்கி, அவன் காலின் மேல் அவள் கால்கள் நிற்குமாறு செய்தான்.
“தியன் என்னதிது கீழ போகலாம்” அருவி அவளை ஆட்கொண்ட வெட்கத்தோடு சொன்னாள்.
“போகலாம் இப்ப குளிராது, அதுக்கு முன்னாடி ஒரு டவுட். சக்தி சொன்ன மாதிரி நீ என்ன பார்த்து இம்ப்ரெஸ் ஆனியா? இல்ல என் மியுசிக்கா? சொல்லு” என்று ஆவலும் காதலுமாகக் கேட்டான்.
மெல்லினமாய் ஒரு மென்னகை அவளிடம்.
“இது என்ன கேள்வி? எனக்கு யார் மியுசிக் போட்டாலும் பிடிக்கும். நான் உங்களைப் பார்த்துத் தான் இம்ப்ரெஸ் ஆனேன். உங்க மியுசிக் பார்த்தெல்லாம் இல்ல போதுமா. இப்ப போகலாமா?” என்று கேட்டு அவன் பிடியிலிருந்து இவள் விலகப் பார்த்தாள்.
“சரி, வேற என்ன பிடிக்கும் உனக்கு?” என்று அகத்தியன் விடாமல் கேட்க,
“இப்படியே நீங்க என்ன பிடிக்கும்னு கேட்டே இருந்தா, எனக்குக் கண்டிப்பா சளி பிடிக்கும். வாங்க போகலாம்” என்று அவனை இழுத்துக் கொண்டு போனாள் அருவி.
போகும் போது,
“என்ன ஆச்சு தீடீர்னு ஒரே கேள்வி?”
“தெரியல மொட்டை மாடி நமக்கு ரொம்ப ஸ்பெஷல் இல்லையா, நம்மளோட ஃபர்ஸ்ட் ஹக் அங்கதான். இங்க இருக்க காத்துல நம்ம பேசினதெல்லாம் இன்னமும் மிதந்துட்டு இருக்கும்” என்று அவன் காதலாகச் சொல்ல, அதையெல்லாம் இன்றைய பொழுதில் அருவி நினைக்க, தானாக அவளிதழில் அளவில்லா புன்னகை அரும்பியது.
ஒருவர் அருகிலிருந்து நம்மைச் சிரிக்க வைப்பது என்பது வேறு. ஆனால் அகத்தில், அவர் நினைவே நம்மைப் புன்னகைக்க வைக்க, அன்பின்றி வேறென்ன காரணி இருந்திட முடியும்?
அருவிக்கு அகத்தியன் என்றே பெயர் போதும், அவளை ஆழ்ந்த ஆனந்தத்தில் ஆழ்த்த.
சிறிது நேரத்தில் அகத்தியன் வந்துவிட, தேன்மொழி மகனை வைத்து செய்துவிட்டார்.
“டேய் தியா, நீ டாக்டர்னா டீரிட்மெண்ட்தான் பார்க்க முடியும். ஆனா கஷ்டப்படுறது அருவி தானே? உன்னால அவ தும்மிட்டே இருக்கா. பனியில மாடியில நிக்காதன்னு சொன்னா கேட்டா தானே?” என்று திட்டினார்.
சக்திக்கு மனம் அவ்வளவு நிம்மதியாக இருந்தது. மருமகளை மகள் போல் பார்க்கும் தேன்மொழி. அவ்வளவு அன்பாக இருக்கும் அகத்தியன்.
சிலரைப் பார்த்தால் நமக்கும் அவர்களைப் போலவே வாழத் தோன்றும். அவர்களை மௌனமாக ரசிக்கத் தோன்றும். அப்படித்தான் இருந்தது சக்திக்கும். காதலிக்க வேண்டும் என்ற ஆசையை அவனுக்குள் விதைத்தனர் அருவியும் அகத்தியனும்.
அகத்தியன், “சாரிம்மா” என்று சொன்னவன்,
“அருவிம்மா அருவிம்மா” என்று கூவிக் கொண்டே அருவியைத் தேடினான்.
“எனக்குத் தலைவலிக்குது, காஃபி வேணும் ஃபுல் கப் நோ ஷேரிங்” என்றபடி வந்து நின்றாள் அருவி.
அகத்தியன் சிரித்துக் கொண்டே காஃபி கலக்கியவன் சக்திக்கும் தேன்மொழிக்கும் தந்துவிட்டு அருவியைத் தேடி பால்கனிக்குப் போனான்.
எப்போதும் இருவரும் அங்குதான் நின்று காஃபி அருந்துவது. காலையானாலும் சரி மாலையானாலும் சரி.
“அருவி ஹேவ் இட்” என்று காஃபியைத் தந்தவன், அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்து,
“என்ன அருவி கோல்டா?” என்று கேட்க,
“மழையிலயோ பனியிலையோ நனைஞ்சா நீங்க பார்க்க இருக்கீங்க. ஆனா எனக்குத் தான் அம்மா சொல்ற மாதிரி கஷ்டமா இருக்கு. என்ன தான் ஹஸ்பண்ட் டாக்டரா இருந்தாலும், அவதிப்படுறது நான்தான். இனிமே உங்க கூட மாடிக்கே வர மாட்டேன்” என்றாள் கொஞ்சம் கோபத்தோடு.
“கூல் அருவி இந்த காஃபி குடிடா தலைவலி போய்டும்” என்று அகத்தியன் சொல்லி அவளைத் தன் அருகில் நிற்க வைத்துக் கொள்ள,
அவன் காஃபியை ரசித்துக் குடித்தவள்,
“உங்களுக்கு எங்கிட்ட எப்படி ப்ரோபோஸ் பண்ணீங்க ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.
“வயசாச்சு, நீயே சொல்லு தப்பா சொன்னா கோச்சுப்ப” என்று அவன் உஷாராகச் சொல்ல,
“உங்களை” என்று முறைத்தவள், “இங்க, நீ நான் காதல் மட்டும்னு சொன்னீங்க இல்லையா?” என்றாள் அவனைப் போல் காதலாகவே.
“ஆமா, இப்பவும் எப்பவும் அதே தான். நீ நான் காதல்தான் அருவி” என்றான் அதே அதீத காதலோடு.
“ம்ஹூம்! நமக்கிடையில வேற ஒன்னும் இருக்கு” என்று மனைவி மறுத்திட,
“சக்தி, அம்மாவா” யோசனையாக அகத்தியன் கேட்டான்.
“அவங்க நம்மைச் சுத்தி இருக்கவங்க, நான் நமக்கிடையிலன்னு சொன்னேன்” என்று சொல்ல, அவன் விழிகள் யோசனையாகப் பார்க்க, அகத்தியன் எதிர்ப்பாரா நேரம் அவன் பக்கம் திரும்பியவள் அவன் தோளில் கையிட்டு மெல்லமாய் அணைத்து நிற்க,
“அருவி என்னதிது, பால்கனி டா இது பப்ளிக்” என்று விலக முயன்றான்.
“ஓவரா பண்ணாதீங்க டாக்டர்” என்றவள்,
“இப்ப நமக்கு இடையில என்ன இருக்கு பாருங்க” என்று சொல்லி நின்றாள்.
இருவருக்குமிடையில் காற்றும் காதலுமன்றி வேறென்ன? கணவனுக்கு விளங்கவில்லை. ஆனாலும் அவள் அணைத்து நிற்க, அவள் விழிகளில் ஆவல் அரும்பியிருக்க, அகத்தியனுக்குச் சின்ன சந்தேகம், உள்ளம் நல்லவிதமாய் ஊகம் செய்ய, அருவியும் அவள் விழியும் அதில் வழியும் ஆவலும் ஏதோ உணர்த்தின.
அகத்தியனின் விழிகளும் விரிந்தன. அவளை அணைத்துப் பிடித்தவன்,
“அருவி அம்மாவாகப் போறீயா?” என்று ஆவலும் காதலும் போட்டிப் போட கேட்டான்.
“அப்பாவாகிட்டீங்க டாக்டர்” என்றாள் அருவியும் அவனை விட மகிழ்வானதொரு மன நிலையில்.
அகத்தியனின் விழிகளில் நீர், நிச்சயமாக அவன் எதிர்பார்க்கவில்லை. இருவருக்குமே கொஞ்சம் வயதாகிய நிலையில், எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும் என்ற எண்ணத்தில் அவன் இருந்தான்.
அவனுக்குள் புதிதாய் சில உணர்வுகள் புலர்ந்திட,
“அருவி” என்று அணைத்துக் கொண்டான்.
“இது பால்கனி பப்ளிக் ” என்று அவனைப் போலவே அருவி சொன்னாள்.
“பரவாயில்ல, எப்ப தெரியும்? வா ஹாஸ்பிட்டல் போவோம்” என்று சொன்னான்.
“டவுட்டா இருந்துச்சு, மார்னிங் நீங்க ஹாஸ்பிட்டல் போனதும் செக் பண்ணினேன். உங்க கிட்டத்தான் ஃபர்ஸ்ட் சொல்லணும்னு வெயிட் பண்ணினேன்”
இருவருக்குமே உணர்வுகள் உயர்ந்தோங்கிய நிலை. உள்ளம் எல்லாம் உவகைத் துள்ளல். விழிகள் மழைத்தூவ, அருவிக்கும் அதே நிலை! அதை மாற்ற நினைத்த அகத்தியன்,
“ஆமா அது என்ன டீச்சர் எப்பவும் என் டயலாக்ஸ் காப்பி அடிக்கிறீங்க சொந்தமா சொல்லணும்” என்று அருவியை வம்பிழுத்தான்.
“ஏன்னா அருவி வேற, அகத்தியன் வேற இல்ல” என்றாள் அருவி காதல் மீகிய நிலையில்.
“அருவி” என்று அவளை அவளை விட அதிக காதலோடு அணைத்துக் கொண்டான் அகத்தியன்.
நீ நான் காதலானோம் !!!