“உன்னை ஏன் நான் முன்னாடியே பார்க்கல, அட்லீஸ்ட் ஒரு பத்து வருஷம் முன்னாடின்னு ஃபீல் பண்ண வைக்கிற அருவி நீ” என்று அவன் அவாவினை ஆத்மார்த்தமாகச் சொல்லிட, அருவியோ தலையசைத்து மறுத்தாள்.
அருவியோடு பெரிதாகக் கூட அகத்தியன் பேசியதில்லை, ஆனாலும் பேசும் பொழுதுகள், அவளின் அமைதியான, அழுத்தமான பண்பு. கடினமாக வெளியே தெரிந்தாலும் உள்ளுக்குள் இருக்கும் கனிவு எல்லாம் அகத்தியனின் காதல் கொண்டிருந்தது.
“பத்து வருஷம் முன்னாடி லவ் சொல்லியிருந்தா கண்டிப்பா திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டேன்” என்று உண்மையாகச் சொன்னவள் அவனின் கரத்தை அழுத்திக் கொண்டு சுவரில் சாய்ந்த வண்ணம் நின்றாள். இருவரின் நிழலும் அந்த இருள் சூழ்ந்த பொழுதில், குறுகிய வெளிச்சத்தில் சிதறி எதிர் சுவரில் பார்க்க ஓவியம்.
“பட், இப்ப உங்க கூட இருக்கறப்ப பத்து வருஷம் மிஸ் ஆச்சேன்னு எனக்கும் தோண வைக்கிறீங்க?” என்று சொல்ல,
“லவ்னு இல்ல அருவி, இந்த அம்மா பொண்ணு பார்த்துச்சே, உன்னை ஏன் பார்க்கல?” என்றான் ஆயாசத்துடன்.
“அச்சோ டாக்டர்” என்று அவன் தோளில் அடித்தவள்,
“இப்ப இருக்க காலத்தை நல்லா வாழ்வோம். ஃபீல் பண்ணனும்னா நிறையா ஃபீல் பண்ணணும் விடுங்க தியன்” என்று சொல்லிப் புன்னகைத்தவள்,
“உங்களுக்குத் தெரியுமா? இன்னும் நான் அம்மா கிட்டக் கூட ஓகே சொல்லல. உங்க கிட்டத்தான் சொல்லணும்னு வெயிட் பண்ணேன்” என்று ஆர்வமாகச் சொல்ல,
“அடப்பாவமே! அதுக்குள்ள எங்கம்மா உனக்குப் புடவை செல்க்ட் பண்றாங்க, ஏதோ சீரியல் ஹீரோயின் கட்டுறதுன்னு அம்மாவும் தாராவும் ஒரே டிஸ்கஷன்” என்று சொல்ல, அருவி காலையில் அவளுக்கும் தேன்மொழிக்குமான உரையாடலைச் சொன்னாள்.
“கல்யாணம்னா நிச்சயம் பயமிருக்கு. ஆனா உங்க கூடனும்போது எனக்கு எங்க வேணும்னாலும் போகலாம்னு தோண வைக்கிறீங்க. இது காதலான்னு தெரில. பட் கண்டிப்பா நம்பிக்கை” என்று அருவி அவளகத்து உணர்வை அப்பட்டமாய் அகத்தியனிடம் சொன்னாள்.
அவளைக் கனிவுறப் பார்த்தவன்,
“கண்டிப்பா, ஈஸியா காதலிச்சிடலாம் ஆனா நம்பிக்கை கொடுக்கிறது கஷ்டம் அருவி, தேங்க்ஸ் எங்கூட காஃபி ஷேர் பண்ண ஒத்துக்கிட்டதுக்கு” என்று குறும்பாய் அவன் கண்ணடிக்க,
“ஷேர் மட்டுமில்ல, நீங்க தான் இனிமே வீட்ல காஃபி போடணும், ஐ லவ் யுவர் காஃபி” என்றாள் அருவி இன்னும் பெரிதாய் புன்னகைத்து.
அகத்தியன் அருவியை எப்போதும் போல் ரசித்துப் பார்த்திருந்தான்.
“ஆமா என்னோட லவ் ஸ்டோரியை கேட்டீங்களே, உங்களோடதை சொல்லுங்க” அருவி ஆவலாய் கேட்டாள்.
“என் லவ் ஸ்டோரி, டூ பீ கண்டினியுட், ஸோ அதுக்குள்ள எப்படி சொல்ல?”
“அகத்தியன்…” என்று அருவி முறைப்பாய்ப் பார்க்க,
அவள் கையோடு கை கோர்த்தவன்,
“நிஜமா தெரில, இதே மாதிரி ஒரு மழை நாள்ல நீ மழையில நனைஞ்சா உன்னைப் பார்க்க யாருமில்லன்னு சொன்னப்பவா, இல்ல உன்னோட தனிமை வேற என்னோட தனிமை வேறன்னு சொன்னப்பவா? நான் ஃபர்ஸ்ட் டைம் பாடினப்ப, நீ ஐ ஃபீல் குட் சொன்னியே, உன்னை எப்போவுமே ஃபீல் குட்டா வைக்கனும்னு எனக்குள்ள ஒரு ஆசை வந்துச்சே அப்போவா, எப்ப தோணிச்சு தெரில. பட் நீ என் அருவின்ற ஃபீல் எப்பவும் எனக்குள்ள ஓடிட்டே இருக்கு”
“அ..அது தனியா இருக்கறதால ஒரு தலைவலின்னா கூட நானே தானே என்னைப் பார்த்துக்கணும், உங்களுக்கு அம்மா இருக்காங்க. என்னோட அண்ணா அண்ணி எல்லாம் யூஎஸ்ல. ஸோ ரொம்ப ஹெல்த் கான்சியஸா இருப்பேன். இனிமே நோ ப்ராப்ளம். அதான் டாக்டர் சாரையே கல்யாணம் பண்ண போறேனே”
வலியோடு ஆரம்பித்து, வற்றா காதலென வார்த்தைகளை முடித்தவளை வாஞ்சையோடு பார்த்த அகத்தியன்,
“புரியுது. தனிமை நாமளே தேடிக்கிட்டா இனிமையா இருக்கும், ஆனாலும் நம்மளையும் மீறி ஒரு கசப்பு வந்துடும் அருவி. நான் ஃபீல் பண்ணிருக்கேன். அதனாலயே எப்பவும் பேஷண்ட்ஸ் ஹாஸ்பிட்டல்னு என்னை பிசியா வச்சிருப்பேன்”
“ஆமா ஹாஸ்டல்ல இருக்கப்ப, மனசு விட்டு பேசுற அளவு க்ளோஸ் ப்ரண்ட்ஸ் யாரும் கிடையாது. நானா போய் பேசவும் மாட்டேன். ஆனா தனியா முன்னாடி எங்க பழைய வீட்ல இருந்தப்ப. காலேஜ்லேர்ந்து ஒரு தலைவலின்னு வந்தாலும் நானே காஃபி போட்டு குடிக்கனும்ன்றப்ப, என் தலைவலி இன்னும் ஜாஸ்தியாகிடும். அதுக்காகவே ஹாஸ்டல் போய்ட்டேன்”
“இனிமே நோ ப்ராப்ளம். நானே காஃபி போட்டு தரேன்” அகத்தியன் சொல்ல,
“எனக்குத் தலைவலி வரும்போதெல்லாம் நீங்க வீட்ல இருப்பீங்களா என்ன?”
“நான் உன் பக்கத்துல இருக்கப்ப, உனக்கு தலைவலியே வராது” என்றான் காதலாய்.
“அய்யோ டாக்டர் போதும்” அருவி சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“சரி வா அருவி, இருட்டிடுச்சு கீழ போகலாம்” என்று அகத்தியன் சொல்ல,
அருவிக்கு ஏனோ அவனுடனான கணங்கள் இன்னும் நீள வேண்டும் என்று அகம் விழைய, விழைதலின் விளைவாய் விரும்பியவன் கரத்தினை இறுகப் பற்றியவள்,
“கொஞ்ச நேரம் இப்படியே இருப்போம் தியன்” என்றவளின் விழிகள் கலங்கி இருந்தது.
“ஹேய் என்னாச்சு?”
“தெரில” என்றவளுக்குத் தொண்டையை அடைத்தது.
பத்து வருட நெடிய தனிமை. தனித்த பொழுதுகள் தந்து போன வலிகள். அவனோடு இருக்கும் பொழுதினை அகம் பெரிதும் விரும்பிட, ஏதோ ஒரு ஆசுவாசம் அருவிக்குள் அருவியாய் பொழிந்திட, அருவியின் தனிமை உடைப்பட்ட பொழுது அது. அதன் விளைவு விழி நீராய் வெளிவர,
அகத்தியனுக்கும் ஏனோ கண்கள் கலங்கியது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன்,
“அழாத அருவி” ஆதரவாய் அணைத்துக் கொண்டான்.
“கீழ போனதுமே கல்யாணம் பண்ணிக்கலாம். அப்போ கொஞ்ச நேரம் என்ன ரொம்ப காலம் ஒன்னா இருக்கலாம்டா” என்று சொல்ல,
அருவிக்கு அவன் வார்த்தைகளில் வலி மறைந்திட, அவனிலிருந்து விலகியவள்,
“அப்போ வாங்க கீழே போகலாம் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று அவனைப் போலவே சொல்ல, இருவருக்கும் அவ்வளவு புன்னகை. சத்தமிட்ட இதழ் புன்னகை அல்ல அது.
விழிகளின் சங்கீதம்.
இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் பார்த்து அப்படி ஒரு நிறைவாய் புன்னகைக்க, சிறிது நேரம் அமைதியாக நின்றவர்கள் கீழே இறங்கி வந்தார்கள்.
அவர்கள் தளம் வந்ததும்,
“வீட்டுக்கு வாயேன் அருவி” என்று அகத்தியன் அழைக்க அருவியோ,
“மிஸஸ்.அகத்தியனா மாறிட்டு வரேன்” என்றாள் சின்ன புன்னகையோடு.
அதைப் புரிதலோடு கடந்த அகத்தியனும் வீட்டுக்குள் போனான். இதுவரை இருவருமே ஒருவரின் வீட்டிற்குள் போனதே இல்லை. சக்தியும் தேன்மொழியும் மட்டுமே பாலமாக, பார்சல் செர்வீஸாக செயல்படுவர்.
அத்தையைக் கண்ட சக்தி அவளருகில் உட்கார்ந்து கொண்டு,
“அத்தை! ஐ அம் சோ ஹாப்பி! அதுவும் அகத்தியன் அங்கிள், ந்..நோ..நோ..மாமா. அகத்தியன் மாமா தான் உங்க ஹப்பின்றப்ப இன்னும் ஹாப்பி அத்தை” என்று உற்சாகமும் உவகைத் துள்ளலோடும் சக்தி சொன்னான்.
“அது என்ன அகத்தியன் அவ்வளவு ஸ்பெஷல் உனக்கு?”
“பின்ன அங்கிளை நீங்க கல்யாணம் செஞ்சிக்கிட்டா அவர் கையால சாப்பிடலாம். இப்ப ஐ ஃபீல் லிட்டில் ஷை. உங்க சமையல் கிட்ட இருந்தும் எஸ்கேப்” என்றவனின் காதை அருவி திருக,
“அத்தை ஐ அம் ஜஸ்ட் கிடிங். அகத்தியன் அங்கிள் ஸோ கைண்ட், ப்ரண்ட்லி, அண்ட்” என்று அவன் சொல்லிக் கொண்டே போனான்.
“போதும்! போதும் சக்தி! ” என்று அருவி சிரித்தபடி சொல்ல, அதற்குள் தேன்மொழியிடம் போய் அகத்தியன் அருவியின் சம்மதம் சொல்ல, தேன்மொழி தீயாய் வேலைப் பார்த்தார்.
“அருவிம்மா” என்றபடி தேன்மொழி வர,
“வாங்க பாட்டி”
“வாங்கம்மா” சக்தியும் அருவியும் வரவேற்றனர்.
“சக்தி பையா, உங்கப்பா நம்பர் போட்டுத் தா. விடியோ கால் கூட ஓகே” என்று சொன்னார்.
அருவியோ அவரின் ஆர்ப்பாட்டம் பார்த்து “மா, அங்க இப்ப வேற டைம். நானே அண்ணா கிட்ட பேசுறேன்” என்று சொன்னாள்.
“அருவிம்மா! ஓகே சொன்னதோட உன் வேலை ஓவர். இனி நீ தியனோட, டேட்டிங் மீட்டிங் ஈட்டிங் எதுனாலும் பண்ணு. நான் கல்யாண வேலையைக் கவனிக்கிறேன்” என்றவர் சக்தியை கதிர்வேலுக்கு போன் செய்யச் சொல்லி, அவரிடம் பேச, கதிர்வேலுக்கு ஒன்றுமே புரியவில்லை.
தங்கை திருமணம் என்பது மகிழ்வான விசயமானாலும் அருவி சம்மதம் அவருக்கு அண்ணனாக முக்கியமாயிற்றே. அருவிக்குப் போன் செய்து பேசியவர் அவளுக்குச் சம்மதம் என்றதும் சக்தியிடம் பேசி, அகத்தியனிடம் பேசி, அவனைப் பற்றி அறிந்து தெரிந்து, சென்னையில் இருக்கும் அவரின் நண்பர்களிடம் சொல்லி அவன் வேலைப் பார்க்கும் மருத்துவமனையில் விசாரித்து என்று அவ்வளவு வேலைகள் பார்த்தார்.
தங்கை என்றால் அவருக்கு அவ்வளவு பிரியம். அவள் திருமணத்திற்கு இத்தனை வருடம் கழித்து ஒத்துக்கொண்டது நிம்மதியாக இருந்தது, அதே சமயம் திருமணமாகவில்லை என்பதால் வருபவனுக்கு எல்லாம் தள்ளி விட முடியுமா என்ன? இருபது நாட்களில் இந்தியா வருவதற்கான வேலைகளைப் பார்த்தார்.
“அண்ணா, நீ லீவ்ல வரப்போ மேரேஜ் வச்சுக்கலாம்” என்று அருவி சொன்னபோதும் கதிர்வேல் கேட்கவில்லை.
“இப்பவே லேட், இனியும் லேட் பண்ணக்கூடாது டா அருவி” என்று அவர் ஒரு பக்கமும், தேன்மொழி தாரா ஒரு பக்கமும் கல்யாண வேலைகளைப் பார்க்க, அருவிக்கும் அகத்தியனுக்கும் பார்த்து ரசிப்பதைத் தவிர வேறு வேலையில்லை.
*****
அடுத்த நாள் கதிர்வேல் குடும்பத்துடன் இந்தியா வருவதாக இருந்தது. யாரிடமும் சொல்லவில்லை. மிக மிக நெருங்கிய உறவுகள், நட்புகள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அருவி வேலை முடிந்து லீஃப்ட்டில் ஏற, அகத்தியன் முதன்முறை அவர்கள் லிஃப்டில் தனியே சந்தித்தது போல, ஓடி வந்து உள்ளே நுழைந்தான்.
“என்ன அருவி மேடம் உங்களைப் பார்க்கவே முடியல” அகத்தியன் வம்பிழுக்க,
“நீங்க தான் டாக்டர் பிஸீ” என்றாள் அருவி. ஆம் அகத்தியனுக்கு இந்த ஒரு வாரமாக நைட் ஷிஃப்ட்.
“நைட் ஷிஃப்ட் அருவி”
“தெரியும் தியன்”
“ஓகே அருவி, அப்புறம் எப்படி ஃபீல் பண்ற எதாவது சிம்டம்ஸ்” என்று புருவம் தூக்கி அவன் கேள்வியாய்க் கேட்க, அதற்குள் அவர்கள் தளம் வந்துவிட,
இருவரும் அங்கு நின்றே பேசினர்.
“என்ன சிம்டம்ஸ்?” அருவி புரியாது கேட்டாள்.
“பட்டர்ஃப்ளைஸ் இன் ஸ்டோமக். நம்ம இன்னும் த்ரீ டேய்ஸ்ல கல்யாணம் செஞ்சிக்கப் போறோம். அதான் எப்படி ஃபீல் பண்ற கேட்கிறேன்” என்றதுதான் போதும்.
அருவியென அருவி ஆர்ப்பாட்டமாய் சிரிக்க முயன்று, தன்னைக் கட்டுப்படுத்தியவளுக்கு விழிகளில் நீர் கோர்த்தது. தன் வாயை மூடி சிரிப்பை அடக்கினாள்.
“ஏய் அருவி, என்ன இப்படி ஒரு சிரிப்பு?” அகத்தியன் கேட்டிட,
“இல்ல ஹ்ம்ம், அது..அஹ்..அது தேனும்மா சொல்வாங்க, இவன் எப்பவும் டாக்டர் மாதிரி பேசுறான்னு. அது மாதிரி நீங்க சிம்டம்ஸ், ஹாஹா முடியல போங்க” என்றவள் கொஞ்சம் கொஞ்சும் சிரிப்பைக் குறைத்து, அகத்தியன் விழி பார்த்து,
“பட்டாம்பூச்சி, கரப்பான்பூச்சியெல்லாம் இல்ல. ஐ ஃபீல் குட். ரொம்ப அமைதியா ஃபீல் பண்றேன். உங்களோட வாழப்போற அந்த நாளுக்காக காத்திட்டு இருக்கேன்” என்று தன்னுர்வுகளை தயக்கமில்லாமல் தலைவனிடம் சொல்லிட,
அகத்தியனுக்குள் அந்திமழை அந்த நேரம்.
“ஐ லவ் யூ அருவி” என்றவன் அவள் நெற்றியில் முட்டிட,
அப்போது பார்த்து தேன்மொழி வெளியே வர, வெட்கம் அலையெனச் சூழ்கிறது அருவியை.
அகத்தியனுக்கும் அதே உணர்வு உடனே அவளை விட்டு விலகினான்.
தேன்மொழியோ “டேய்! நான் கண்ணாடி போடல, ஸோ ஒன்னும் பார்க்கல” என்று கிண்டலாய் சொன்னார்.
“பார்த்தாலும் நோ ப்ராப்ளம் ம்மா” என்ற அகத்தியன்,
“உள்ளே வாங்கம்மா” என்று அம்மாவின் தோளில் கைபோட்டு புன்னகையோடு அவரை உள்ளே தள்ளிக் கொண்டு போக, அருவியோ வெட்கத்தின் வழியில், அவன் காதல் மொழியில், தன் வீட்டுக்குள் புகுந்து கொண்டாள்.
*****************************
திருமணம் முடிந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு,
அருவி ஆவலாக அகத்தியனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
‘ஹச் ஹச் ஹச்’ என்று அருவி தும்ம,
“நான் அப்பவே பனியில நிக்காதீங்கன்னு சொன்னேன் அவன் தான் கேட்கல, பனியில நின்னு இப்ப பாரு டா அருவி” என்று தேன்மொழி கடிந்து கொண்டார்.
“வெதர் சரியில்லம்மா” என்று சமாளித்தாள் அருவி.
“ஹாய் மை ஸ்வீட் ஹனி” என்று கூவிக்கொண்டே வந்தான் சக்தி.