அகத்தியனுக்கு அருவி சம்மதம் சொன்னதும், அதிர்வில் அவனையறியாமலே அவனது கைகளிலிருந்து குடை விலகியது.
இப்போது அகத்தியன் மொத்தமாக மழைக்குள். அகம் புறம் எம்மருங்கிலும் குளுமை. காதல் தந்த இனிமை!
தலையைக் கோத தண்ணீர் வெளியே தெறிக்க, ஏறும் போது எப்போதும் லிஃப்டில் செல்பவன், இன்று அடி மேல் அடி வைத்துப் படிப்படியாக ஏறினான்.
ஈரத்தோடு அவசர அவசரமாக அறைக்குள் புகுந்த அத்தையைப் பார்த்த சக்தி,
“என்னத்த குடையோட அங்கிள் வந்தாங்களே?” என்று கேட்க அருவி அதற்குள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாளே.
வீட்டை விட்டு வெளியே வந்த சக்தி அகத்தியனைப் பார்க்கக் கையில் குடையோடு வந்த அவனும் நனைந்திருக்க,
சக்தியிடம் குடையை நீட்டியவன்,
“இந்தா சக்தி” என்று விட்டு அவன் வீட்டுக்குள் புகுந்து கொள்ள,
“என்ன அங்கிள் குடை எடுத்துட்டு போயும் நீங்களும் அத்தையும் நனைஞ்சிட்டீங்க?” என்று சக்தி கேட்டான்.
“இது குடைக்குள்ள அடங்காத மழை சக்தி” என்றான் மோகனப்புன்னகையோடு.
அகம் கொள்ளும் காதல் அடங்கா மழை, பிரியத்தின் பெருமழை!!
சக்தியும் அறியாப் பிள்ளையாய் வெளியே எட்டிப் பார்க்க, பெருமழையே.
“ஓகே அங்கிள், ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக்கோங்க” என்று சொன்னான்.
“ஓகே சக்தி பை” என்றபடி அவன் வீட்டுக்குள் புகுந்து உடை மாற்றி வந்த அகத்தியன், கிச்சனுக்குள் புகுந்து காஃபி கலக்கினான்.
“என்னடா? நீ சொல்லாம வெளியே போன சக்தி கிட்ட கேட்டா அருவியை அழைக்க போனேனு சொன்னான், இப்படி நனைஞ்சு வர, இரண்டு பேருக்கு எதுக்குடா மூணு கப் காஃபி?” என்று தேன்மொழி கேள்வியாய்த் தொடுத்தார்.
“மா! இருங்க, உங்க மருமகளுக்கு ஒரு கப் போதுமா?” என்று அகத்தியன் கேட்க,
“அப்போ சக்திக்கு?” என்றார் தேன்மொழி.
“எனக்குக் காஃபி வேண்டாம்” என்று கடுப்பில் அகத்தியன் சொன்னான்.
“ஓ! இந்த படத்துல எல்லாம் ஒரே கூல்டிரிங்க்ஸ் இரண்டு ஸ்ட்ரா அப்படியா? நடத்து நடத்து” என்று தேன்மொழி மகனின் மனம் புரிந்து கிண்டல் செய்தார்.
“உங்க வயசுக்குத் தகுந்த மாதிரியே பேச மாட்றீங்கம்மா. எல்லாம் இந்த டீவியால, முதல்ல அதைக் கட் பண்றேன்”
“கட் பண்ணினா என்னடா எனக்குத் தான் நெட்ஃப்ளிக்ஸ், அமெசான் ப்ரைம், எம்.எக்ஸ் ப்ளேயர் எல்லாம் இருக்கு. யூ -டியூப்ல பார்த்துப்பேன், போடா டேய்” என்றார்.
“மா! இதெல்லாம் உனக்கு யார் சொன்னா?” அகத்தியன் அதிர்ச்சியும் தாயின் பேச்சில் மலர்ச்சியுமாகக் கேட்டான்.
“சக்திடா! எவ்வளவு புத்திசாலி பையன் தெரியுமா? டீவில சீரியல் போடுறதுக்கு முன்னாடியே ஹாட்ஸ்டார்ல சீரியல் காட்டுறான்” என்று சக்தியை புகழ ஆரம்பித்துவிட்டார்.
“மா! சீரியல் பைத்தியமாகிட்ட நீ, இப்படி ஒருத்தன் நெட்ஃப்ளிக்ஸ்ல சீரிஸ் பார்த்து மெண்டல் ஹெல்த் இன்ஸ்டியுட்ல அட்மிட் ஆகுற அளவுக்குப் போயிட்டான்”
“டேய் டேய்! இந்த டாக்டரா பேசுறதை நிறுத்துடா! இப்படி பேசாம வயசுப்பையன் மாதிரி பேசியிருந்தா எப்பவோ உனக்குக் கல்யாணம் ஆகியிருக்கும். அதை விட்டு இதை சாப்பிடாத, பார்க்காத, தூங்காதன்னு, போடா டாக்டர்னா வசூல்ராஜா மாதிரி இருக்கணும்டா” என்று மேலும் அவர் இருந்த மன நிலையில் மகனைக் கலாய்த்தார்.
“மா” என்று முறைத்த அகத்தியனைத் தோளில் தட்டியவர்,
“சும்மா சொன்னேன் தியா! நீ அருவி கூட சந்தோசமா இருக்கணும், அவ்வளவு தான். காஃபி ஆறிடும் போய் கொடு” என்று சொன்னார்.
அகத்தியன் அருவி வீட்டு க்ரில் கேட்டருகே நின்று கொண்டு சக்தியை அழைக்க,
“ஹாய் அங்கிள்” என்றபடி சக்தி வெளியே வந்தான்.
“டேக் திஸ் காஃபி” என்று சக்தியிடம் ஒரு கப்பை நீட்டியவன்,
“அத்தை எங்க சக்தி” என்று கேட்டான்.
சக்தி என்ன ஆதிவாசியா? அமெரிக்க வாசியாயிற்றே! குடை கொடுத்தாலும் நனைந்தே வந்த அத்தை, நேற்றோ அருவி என்று உருகி உருகிப் பாடிய அகத்தியன், அறுபது வயது தேன்மொழிக்குப் புரியும் மாற்றங்கள் சக்திக்கா புரியாது? முதலில் புரியாமல் இருந்தாலும் இப்போது அவன் வயதுக்கு எல்லாம் புரிந்தது.
“என்ன அங்கிள்? அத்தையை ரொம்ப தேடுற மாதிரி இருக்கு” கிண்டலாய் சக்தி கேட்க,
அகத்தியனின் நினைப்பில் சக்தி சின்ன பையன் தானே? அவனிடம் என்ன சொல்ல என்று அகத்தியன் தயங்கி பின்,
“இல்ல மழையில நனைஞ்சாங்களே, டாக்டர் தேவைப்படுமேன்னு கேட்டேன்” என்று அகத்தியன் சொன்னான்.
அதற்குள்ளாக அருவி வேறு புடவைக்கு மாறி வெளியே வந்தவள்,
சக்தியைப் பார்த்து “சக்தி நாளைக்கு டெஸ்ட் இருக்கு சொன்ன தானே, போய் படி” என்று சொல்லவும்,
சில நொடிகள் சக்தியின் பார்வை இருவரையும் அளவிட்டாலும், அத்தை சொல் கேட்டு வீட்டுக்குள் போனவன்,
மீண்டும் அருவியின் அருகில் வந்து,
“அத்தை! அங்கிளுக்குத் தமிழ்ல மாமா தானே?” என்று கேட்டான்.
அண்ணன் மகனின் கேலியும் கேள்வியும் புரிந்த அருவி, தன் கைகளைக் கட்டிக் கொண்டு,
“ஆமா மாமா தான், அண்ட் அந்த மாமா பெயர் அகத்தியன். இஸ் யுவர் டவுட்ஸ் க்ளியர்ட் டியர் சக்தி?” என்று அருவி கேட்ட தோரணையில், அகத்தியன் அவளையே விடாது பார்த்தான்.
“வாவ்!!!! அத்தை லவ் யூ அண்ட் ஹாப்பி ஃபார் யூ” என்று இறுகக் கட்டிக்கொள்ள, அருவிக்கு தன் தந்தையின் நினைவு. நிறைய விசயங்களில் சக்தி அருவிக்குத் தன் தந்தையை நினைவுப்படுத்தினான். கொஞ்சம் கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“யூ கேரி ஆன்” என்று இங்கிதமாய் அறைக்குள் சக்தி புகுந்து கொள்ள, அகத்தியனுக்கும் அருவிக்கும் அர்த்தம் உணர்ந்து அரும்பியது மென்னகை.
“மழை நின்னுடுச்சு, மாடிக்கு வா அருவி” என்று அகத்தியன் அழைக்க, அருவியும் போனாள்.
நேற்று போல் இல்லை வானம், ஏன் வாழ்க்கையும் தானே?
வானம் வெட்கம் கொண்டது போல் செந்நிறம் பூசியிருக்க, ஒரு பக்கம் மழை சுமக்கும் கருமேகங்கள், தரையெல்லாம் மழை நீர், இதமான வானிலை.
அகத்தியன் கையிலிருந்த காஃபி இப்போது கோல்ட் காஃபி ஆகியிருக்க,
அன்று போல் அகத்தியன்,
“ஹேவ் இட்” என்று கொடுத்தான்.
“சூடே இல்ல” என்றாள் கைகளில் வாங்கிய அருவி.
“இது கோல்ட் காஃபி குடி” என்று சொல்ல, முறைத்துக் கொண்டே பாதி குடித்தவள்,
“ஷேரிங்” என்றாள் அவனைப் போலவே.
அவள் செயலில் மழையையும் தாண்டிய குளுமை அவனுள்ளே. அது மங்கை தந்தது.
அவள் கையிலிருந்து காஃபி கோப்பையை வாங்கியவன், காஃபியைப் பருகிக் கொண்டே,
“நல்லா சூடா தான் போட்டேன், என் அம்மா, சக்தியெல்லாம் பண்ணின இண்டர்வியுல ஆறிடுச்சு அருவி ” என்று சொல்ல,
“இட்ஸ் ஓகே” என்றாள் அருவி.
“நேத்து அவ்வளவு யோசிச்ச, என் கண்லயே படாம இருந்த இன்னிக்கு அம்மா சொன்னதும் உடனே ஒத்துக்கிட்ட” என்றவனின் குரலில் கொஞ்சம் கோபமோ, வருத்தமோ எதுவோ ஒன்று இருந்தது.
அருவியோ மிகவும் ரிலாக்ஸாக தரை படியெல்லாம் ஈரமாக இருந்ததால் சுவரில் சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு,
“அம்மா சொன்னாங்கன்னு தான் ஒத்துக்கிட்டேன்” என்று இயல்பாகச் சொல்ல, அகத்தியன் முகம் அதிருப்தியைக் காட்டியது.
அடுத்து அவள் சொன்னதில் ஆகாயத்தில் பறந்தான்.
“ஏன்னா, அவங்க அகத்தியனோட அம்மா” என்றாள் அழுத்தமாக.
அகத்தியனுக்கு வார்த்தைகள் வரவே இல்ல. பெருமூச்சு விட்டவன் பேரன்பின் விளைவாய்,
“அருவி” என்றான் அவ்வளவு காதலோடு.
அவனைப் பொருத்தவரையில், இது அருவிக்கான காதல். காதல் என்பது அருவியே!
“என்ன அகத்தியன்?” என்றாள் இவளும் ஆதுரமாக.
“தேங்க்ஸ்! நீ அம்மாவோட கம்பல்ஷன், இல்ல அவங்க ஏதோ சொல்லி உன்னை ஒத்துக்க வச்சாங்களோன்னு, ஒரு சின்ன ஃபீலிங். பட் நீ” என்றான் நிம்மதியும் நிறைவும் கலந்த ஒரு புன்னகையோடு.
அவன் உணர்வுகள் புரிந்தவளும்,
“அம்மா சொன்னாங்கன்னு கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டேன். ஆனா இன்னமும் எனக்குக் கல்யாணம் மேல ஒரு பிடித்தம் வரல. அதை விட அது மேல உள்ள பிடித்தமின்மை போகல”
“அப்புறம் ஏன் அருவி? உன்னை ஏன் கஷ்டப்படுத்திக்கிற?” அவளுக்காக, அவன் அகம் துடிக்க, அகத்தியன் பேசினான்.
“இல்ல, எனக்குக் கல்யாணம்தான் பிடிக்காது. பட் உங்களைப் பிடிக்குமே தியன். கூடவே இவ்வளவு வருஷம் கழிச்சு இங்க ஏன் நான் வரணும்? நம்ம ஏன் சந்திக்கணும். மே பீ உங்களுக்காகதான் இவ்வளவு நாள் நான் காத்திருந்தேனோ என்னவோ?” என்றதும், காதல் அருவி ஆர்ப்பாட்டமாக அகத்தியனுக்குள் பொழிந்தது.
“அருவி எப்போ இப்படி?” என்றான் புன்னகையோடு.
“நீங்க ஃபர்ஸ்ட் சொன்னப்போ எனக்குப் பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல, அதை விட அதை நான் காதல்னு ஏத்துக்கல. அதே பொறுமையா யோசிச்சா புரிஞ்சது. இத்தனை வருசத்துல நீங்களும் நானும் நிறைய பேரைக் கடந்திருப்போம், ஆனால் என் மேலதான் உங்களுக்கு அப்படி ஒரு அபிப்ராயம்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனாலும் என்னால உங்களை மாதிரி நினைக்க முடியல”
“உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க சொன்னீங்களே இது அருவிக்கான காதல்னு அது மாதிரி நீங்க எனக்கு ஸ்பெஷல். எதுனாலும் மனசு விட்டு பேசிடுறீங்க, நேர்மையா உங்க உணர்வு சொன்னீங்க, என்னையும் தொந்தரவு செய்யல”
அருவி சொல்லச் சொல்ல யாரிடமும் அவள் பேசமாட்டாள் தானே! தன்னிடம் மட்டும் தத்தை தனி மொழி பேச, அது தாய்மொழியாகினும் கூட புதுமொழியென, ரசித்துப் பார்த்திருந்தான் அகத்தியன்.
“கல்யாணம் பிடிக்கவே பிடிக்காம வெறுத்த ஒரு விசயம். நேத்து நைட் உங்க கிட்ட எப்படி வந்து பேசினேனே எனக்குப் புரியல, என்னவோ உங்க கிட்ட பேசணும்னு ஒரு உந்துதல். வந்துட்டேன், பேசிட்டேன். கண்டிப்பா அண்ணா கிட்டக் கூட அப்படி பேசினது இல்ல. ஆனா எனக்குப் பிடிக்காத ஒரு விசயமா இருந்தா கூட நீங்க கூட வரீங்கன்ற அந்த நினைப்பு என்னை யோசிக்க வச்சது”
“இன்னிக்கு தேன்மொழிம்மா வந்து பேசவும் அம்மா ஞாபகம். அம்மாவால தான் என் கல்யாணம் பார்க்கக் கொடுத்து வைக்கல. அட்லீஸ்ட் தேன்மொழிம்மாவுக்கு அந்த சந்தோஷம் தரனும்னு ஆசைப்பட்டேன். இது நீங்க நினைக்கிற காரணம் இல்ல தியன்” என்று சொல்ல அகத்தியன் இன்னும் ஆர்வமாய் அவள் பேச்சைக் கேட்க,
“யாரோட அம்மா வந்து சொன்னாலும் நான் ஒத்துப்பேனா என்ன? அவங்க அகத்தியனோட அம்மா. அதான் ரீசன், அது மட்டும்தான் ரீசன்” என்றாள்.
அதற்குள் மேல், உடல் தடுத்தாலும் உள்ளம் தடுக்கவில்லை அகத்தியனை. அருவியின் அருகே சென்று அவள் கரம் பற்றி இருந்தான்.
ஒரு நொடி அதிர்ந்தாலும், அவன் அகம் புரிந்தவள் அழுத்தமாக அவளும் அவன் கரம் பற்றிக்கொண்டாள்.