நீ, நான், காதல்!
“சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா”
“இனிக்கும் மம்மி இனிக்கும், டாட் நேமை சொல்ல முடியாம இப்படி காட் நேம் சொல்ற நீ?” என்று கிண்டல் செய்த மகனை முறைத்த மதி, அவர்கள் வீட்டில் இருக்கும் அந்த வெள்ளியிலான முருகன் சிலையை வணங்கி விட்டு மகனிடம் திரும்பிப் பேசினார்.
“சக்தி, அத்தை சொல்றதைக் கேட்டு நடக்கணும், உன் அத்தை கொஞ்சம் மூடி டைப், இப்படி படபடன்னு பேசறதை குறைச்சிக்கோ. இல்லன்னா உன் அப்பாவுக்கு கோவம் வரும்”
“மம்மி! யூ நோ நீங்க இதை ஃபிப்டி டைம்ஸ் மேல சொல்லிட்டீங்க”
அலுத்துக்கொண்டான் சக்தி. கதிர்வேலன் நிறைமதியின் மூத்த மகன். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவன்.
பிறப்பால் அமெரிக்கன். ஆனால் வளர்ப்பால் இந்தியன். அதிலும் குறிப்பாய்த் தமிழன். தமிழ்க்கடவுளின் பெயரை வைத்திருப்பதாலோ என்னவோ இருபத்தைந்து ஆண்டுகளாய் அமெரிக்க வாசியாகி விட்ட போதும் பிள்ளைகளை முடிந்தவரையில் தமிழ்ப் பண்பாட்டோடு வளர்த்தனர் கதிர்வேல் மதி தம்பதியினர்.
இந்தியனாய் வளராவிட்டாலும் அமெரிக்காவின் பழக்க வழக்கங்களை முடிந்த வரையில் பின்பற்றாமல் பிடித்து தங்களுக்குள் பிள்ளைகளைப் பிணைத்து வைத்திருந்தனர்.
இந்தியாவில் உள்ள கல்லூரியில் படிக்க செல்கிறான் சக்தி. இன்னும் இரண்டு வருடங்களில் கதிர்வேலின் இளைய மகளுக்குப் பள்ளிப் படிப்பு முடிந்து விடும். அதன் பின் மொத்தமாய் தங்கள் சொந்த ஊரான கும்பகோணத்தில் போய் செட்டில் ஆகிவிடலாம் என்பது அவரது திட்டம்.
திட்டத்தின் முதற்கட்டமாய் தன் மூத்த மகனைச் சென்னையில் இருக்கும் தன் தங்கையிடம் அனுப்ப முடிவு செய்து இதோ இன்னும் சில மணி நேரங்களில் விமானம் ஏறப் போகிறான் சக்தி. இங்கிருந்து துபாய், பின் துபாயிலிருந்து சென்னை.
“எல்லாம் பேக் பண்ணியாச்சா?” என்றபடி உள்ளே நுழைந்தார் கதிர்வேலன். கதிர்வேலன் பெர்க்லியில் (Berkeley) உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியாவில் மானுடவியல் அதாவது anthropology பிரிவில் பேராசிரியர்.
“டன் டாட். டாட்! நான் ஹாஸ்டல்யே தங்கிக்கிறேனே! ஐ மே கெட் நியூ ப்ரண்ட்ஸ், எதுக்கு ஆன்டி கூட? அவங்களை டிஸ்டர்ப் செய்ற மாதிரி. டூ அண்டர்ஸ்டாண்ட் மீ” என கதிர்வேலனைக் கரைத்து விடும் நோக்கில் பேசினான் சக்திவேலன். அவனுக்கு அவனது அத்தையுடன் போய் தங்கியிருக்கத் துளியும் அவா இல்லை. அவனும் இரண்டு மாதமாய்ப் போராடுகிறான். அசைந்து கொடுக்கவில்லை அவன் அப்பா.
“அத்தைன்னு சொல்லி பழகு சக்தி அண்ட் உன் அத்தைக்கு நீ வரதுல ரொம்ப சந்தோஷம். அவ ப்ளாட்டை உனக்காக ரெனோவேட் பண்ணி வச்சிருக்கா, ஷி டூ நீட்ஸ் எ கம்பனி சக்தி, புரிஞ்சிக்கோ. ஹாஸ்டலை விட வீட்ல இருந்தா நீ சிட்டியை நல்லா சுத்திப் பார்க்கலாம். நோ மோர் ஆர்கியுமெண்ட்ஸ் ரிகார்டிங் திஸ். மதி! நீ இவன் கிட்ட சொல்ல மாட்டியா?” என மனைவியையும் முறைத்துப் பார்த்தார்.
“நான் சொல்லிட்டே தான் இருக்கேங்க”
“எஸ் அப்பா, அம்மா அவன் ப்ளைட் ஏறுற வரை சொல்லிட்டே இருப்பாங்க” என்று சிரித்தபடி சொன்னாள் அவரது இளைய மகள் யாழினி.
“ஏய் போடி! நான் போனதும் என்னோட திங்க்ஸை யூஸ் செய்ய தானே விரட்ட நினைக்கிற” என சக்தி சண்டையிட தொடங்க, யாழினியும் பதிலுக்குப் பேச, மதி தான், “இன்னும் நாலு மணி நேரத்துல அவனுக்கு ஃப்ளைட் இப்பவும் சண்டை போடனுமா? யாழி ” என அதட்டல் பாதியும் மகனைப் பிரிய வேண்டும் என்ற கவலை மீதியுமாய் சொன்னார்.
“ம்மா, நோ வோரிஸ்! டெய்லி வீடியோ கால் பேசறேன். அக்சுவலி லேடி ஹிட்லர்ட்ட போறேனு நான் தான் ஃபீல் பண்ணனும். இனிமே வீட்ல ஒரு டம்ப்ளர் அரசி கம்மியா வடிக்கலாம்னு யூ ஷுட் பீ ஹாப்பிமா” என சக்தி மதியின் அருகில் அமர்ந்து சொன்னான்.
“டேய்! என்ன பேசுற நீ? டாடி கேட்டார்னா அவ்வளவு தான்! அத்தையை இப்படி பேசாத சக்தி, கிவ் ரெஸ்பெக்ட்” என்று மதி கண்டித்தார்,
“எஸ், எஸ். இல்லனா ஒரு படம் இருக்குமே, ஏதோ ப்ளவர்! ம்ம்ம், காலி பள்வர்?” என்று சக்தி யோசிக்க,
“நோ! இட்ஸ் பாசமலர் படம் ஓட்டுவார் டாடி அதானேம்மா?” என்றாள் யாழினி.
மதியோ, “சக்தி, அத்தைக்கு நம்மள விட்டா யாரு இருக்கா நீ போய் உன் அத்தைக்குத் துணையாய் இருக்கனும். இப்படியெல்லாம் பேசிட்டு இருக்காத ” என அதட்டலாய் சொல்லிவிட சக்தி அமைதியானான்.
விமானம் ஏறும் நேரம் நெருங்க நெருங்க மதிக்கு கண்ணில் கண்ணீர் அணைக் கட்டி நிற்க, கதிர்வேலன் தான் மதியை சமாதானம் செய்தார்.
“இங்க பாரு மதி, இன்னும் எத்தனை வருசத்துக்கு இப்படியே பிள்ளையை கட்டுக்குள்ள வச்சிருக்க முடியும் சொல்லு, என் தங்கச்சி அவனை நல்லா கவனிச்சிப்பா, சக்தி வளர்ந்துட்டான், இன்னும் இரண்டு வருசம் போகட்டும், நாமளும் அவனோட போயிடலாம் ” என ஆறுதல் சொன்னார்.
“சரிங்க! உங்க தங்கச்சி நல்லா பார்த்துப்பா, இருந்தாலும் என் மகனை விட்டு தனியா நான் எப்படி இருப்பேன்?” என்று மீண்டும் அவர் கண்ணீர் சிந்த, மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டார் கதிர்வேலன்.
“மா! டோண்ட் வரிம்மா, செம் லீவ்க்கு நீங்க அங்க வந்திடுங்க, சீக்கிரம் நம்ம ஊர்க்கார பொண்ணா பார்த்து நான் கரெக்ட் பண்ணி வைக்கிறேன்” என்று சொன்னான் சக்தி.
“படிக்கிற வழியைப் பார்க்கணும் சக்தி, உன் அத்தை கிட்ட நல்ல பெயர் எடுக்கணும், அதான் முக்கியம்”
‘ஆஸ்கார் அவார்ட் கூட வாங்கிடலாம் அத்தை கிட்ட நல்ல பெயர் வாங்கிறதுதானே கஷ்டம்’
மனத்தில் அத்தையை அர்ச்சனை செய்தாலும் அப்பா இருப்பதால் மகன் கப்சிப்.
“சக்தி! நல்லா எஞ்சாய் பண்ணு, அத்தையை டிஸ்டர்ப் செய்யாம நல்ல பையனா இரு, ஆல் தி பெஸ்ட்” என்று மகனைக் கட்டியணைத்து வழியனுப்பினார் கதிர்வேலன்.
“யாழி! ஐ மிஸ் யூ” என்று சக்தி சொல்லவும் யாழினியின் கண்ணிலிருந்து சரெலன நீர்வீழ்ச்சி.
“ஐ டூ மிஸ் யூடா சக்தி ” என்று அவள் அழ, இப்படியே சில பல சீன்களுக்குப் பிறகு சக்தி விமானம் ஏறினான்.
சென்னை விமான நிலையத்தில் கால் வைக்கையில் மனத்தினுள்,
‘சிங்கார சென்னையே சிங்கிளாக இருக்கும் என்னை சீக்கிரமே மிங்கிள் ஆக்கிடு’ என்று வேண்டுகோள் விடுத்துக் கொண்டே சென்னைப் பெண்களை சைட் அடிக்கத் தொடங்கினான்.
ம்ஹூம், அப்படியே விழிகள் விமான நிலையத்தினுள் சுழல, அவன் கண்ணில் பட்டாள் அவள்.
அவள் அருவி .
கதிர்வேலனின் பாசமலர்.
சக்திவேலனின் அத்தை.
முப்பத்து நான்கு வயது மங்கை என்று சொல்ல ஆசை, ஆனால் பேரிளம் பெண், தனியார் கல்லூரியில் பேராசிரியை.
விமான நிலையத்தில் அவனை அழைக்க வந்திருந்தாள் அவன் அத்தை அருவி.
‘ச்ச.. பங்க்சுவல்டியில பாப்கார்னை மிஞ்சுற கேஸ், பட்னு பொரியற மாதிரி சட்டுனு வந்து நின்னுட்டு சைட் அடிக்கிறதும் போச்சு! சக்தி கேம் ஸ்டார்டட் டா’
“என்ன சக்தி? என்னைப் பார்த்துட்டும் அமைதியா இருக்க?” என அருவி அருகில் வந்து கேட்கவும்,
“ஹாய் ஆன்டி?எப்படி இருக்கீங்க?” என சக்தி புன்னகை முகமாய் விசாரித்தான்.
“நான் நல்லா இருக்கேன், சக்தி நீ நல்லா வளர்ந்திட்ட டா. எவ்வளவு வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து?” என அவன் தோளில் தட்டியவள்
“அப்புறம் அண்ணா, அண்ணி, யாழிக்குட்டி எல்லாம் எப்படி இருக்காங்க?”
“எல்லாரும் ஃபைன் ஆன்டி”
“அது என்ன ஆன்டி அத்தைன்னு சொல்லு சக்தி, எல்லாரையும் ஆன்டின்னு தான் சொல்லுவ, தென் வாட் ஐ அம் டூ யூ? உன் அப்பாவோட சொந்த தங்கச்சின்னா அத்தைன்னு சொல்றதுல என்ன கஷ்டம்” என கண்டிப்போடு அருவி கேட்டாள்.
‘ஓ மை காட்! என்னடா இன்னும் ஆரம்பிக்கலயே பார்த்தேன். ஏர்ப்போர்ட்லயே இவ்வளவு. இன்னும் வீட்ல இவங்க கூட தங்கினா, அரெகண்ட் அருவி’ என்றதாய் போனது பெரியவளைப் பற்றி சின்னவனின் அனுமானம்.
“சாரி அத்தை” என்றதோடு முடித்துக் கொண்டான்.
‘ஆரம்பமே அதிருதடா, அத்தை கிட்ட மாட்டினடா’ என்று எங்கோ ஒரு குரல் இவனை கிண்டல் செய்வதாய் வேறு பட்டது.
பின்னர் அவள் காரை எடுக்க, சென்னையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தான். அவர்களது அபார்ட்மெண்ட் வந்ததும்,
“சக்தி இறங்கு” என்று அருவி சொல்ல, அவனும் இறங்கி விட, இருவரும் சேர்ந்து அவனது ட்ராலிகளைத் தள்ளிக் கொண்டு லிஃப்ட் ஏறினர்.
மூன்றாவது மாடியில் இருக்கும் இவர்களது வீட்டினுள் நுழைந்தவுடன் சக்திக்குக் கண்ணைக் கட்டியது. பின்னே இது மூஸியமா? இல்லை வீடா ?என்பதில் அவனுக்கு மிகப்பெரிய சந்தேகமே.
தூசி துரும்பு என்று ஒன்றுமே இல்லை. அத்தனை கனகச்சிதமாய் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அவன் மனக்கண்ணில் கலிபோர்னியாவில் அவனது கலைந்த அறை வந்து போனது எங்கும் பொருட்களும் துணிகளும் சிதறிக் கிடக்க, அதில் இடம் தேடி அவன் உறங்க வேண்டும். இங்கோ படுக்கை விரிப்பு. இவ்வளவு ஏன், மிதியடி கூட அட்டென்ஷனில் இருப்பதாய்த் தோன்றியது
‘அய்யோ! அத்தை நம்மளையும் இது மாதிரி மாத்திடுவாங்களோ? நம்ம நினைச்சா கூட ரூமை இப்படி நீட்டா வச்சிக்க முடியாதே! இன்னும் ஒரு நாள் கூட ஆகலையே? இப்பவே ஐ அம் கான்’ என்பதாய் அவன் முழித்துக் கொண்டு நின்றான்.
அவள் அவன் குடிப்பதற்கு ஜீஸ் கொடுக்கவும் அதை மடக்கென்று குடித்தவன்,
“ஆன்டி, ஐ அம் வெரி டயர்ட், ரூம் ப்ளீஸ்” என்று விசாரித்தவன் அப்படியே மெத்தையில் சாய்ந்தான்.
முதல் நாள் மதியம் உறங்கியவன் மறு நாள் பதினொரு மணிக்கு தான் எழுந்தான்.
“ஆன்டி” என்று அவன் அழைக்க, அருவி அவனை முறைத்தாள்.
“அத்தை! காபி ப்ளீஸ்” என்று கேட்டான்.
“ப்ரஷ் பண்ணியா நீ?” என அவள் எங்கொயரியை ஆரம்பிக்க, வாயைத் திறக்காமல் உடனே உள்ளுக்குள் ஓடியவன் ப்ரஷ் செய்து விட்டு வந்தான். அவன் கையில் சூடான காபியைக் கொடுத்தாள் அருவி. அவள் தன் அண்ணன் மகனை புன்னகையுடன் பார்க்க,
“அத்தை! காபி சூப்பர்” என அவன் பாராட்டினான்,
அருவியின் மனமோ, “நான் காபி மட்டும் தான் சூப்பரா போடுவேன்னு எப்படி உங்கிட்ட சொல்லுவேன்” என்று கவலையோடு நினைத்தது.
“ஓகே சக்தி, டிபன் இருக்கு, சாப்பிட்டு டீவி பாரு, நான் போய் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கிட்டு வரேன். ஈவினிங் உன்னை வெளியே அழைச்சிட்டுப் போறேன். வீட்டை விட்டு வெளியே போகாத, முக்கியமா எதிர் வீட்ல பேச்சுக் கொடுக்காத. நான் வந்தா மட்டும் டோரைத் திறக்கணும்” என்று அருவி ஐந்து கட்டளைகளை இட்டுச் சென்றாள். இவனுக்கோ,
‘நம்ம ஹவுஸ்’ல இருக்கோமா! இல்ல ஹவுஸ் அரெஸ்ட்ல இருக்கோமா’ என்ற எண்ணம் வர, அந்த எண்ணம் அவனை ஏற்றியும் விட அப்படியே எரிச்சல் மிக தாய் தந்தையை போன் போட்டு திட்டலாம் என்று திட்டம் போட்டு, அதை அப்படியே மட்டம் செய்தான். பின்னே அங்கே இப்போது வேற நேரம் இல்லையா? இங்கு பகலானால் அங்கு இரவு தானே?
இன்னமும் இவனுக்கு இந்த நேரம் காலமெல்லாம் பிடிபடவில்லை.
சாப்பாட்டுத் தட்டை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தவன், அவனது tab ஐ எடுத்து அவனுக்கு மிகவும் பிடித்த செந்தில் கவுண்டமணியின் காமெடிகளைப் பார்க்கத் தொடங்கினான்.
அமெரிக்காவில் பிறந்து கேம் ஆஃப் த்ரோன்ஸ், அவெஞ்சர்ஸ் என்று பார்த்து வளர்ந்தாலும், அவனது தாய் தந்தையைப் பார்த்து அவனும் யாழினியும் சில தமிழ் படங்களும் பார்ப்பர். அதிலும் இப்போது வளர்ந்து விட்ட இணைய உலகினால் மீம்கள் எல்லாம் அவர்களுக்கும் புரியும்.
வெளியே கிரில் கேட் மட்டும் உள்பக்கம் பூட்டி இருக்க, மரக்கதவு திறந்திருந்தது. அந்த கிரில்கேட்டைப் பார்க்கையில்,
‘இட்ஸ் எ ஜெயில்’ என்ற உணர்வு தோன்றுவதை தடுக்க முடியவில்லை. அருவி செய்து வைத்த இட்லியையும் தேங்காய் சட்னியையும் சாப்பிட்டவன், தட்டை கழுவி வைத்து விட்டு வெளியே பார்க்க, எதிர் வீட்டில் கதவு திறக்கும் சத்தம்.
‘முக்கியமா எதிர் வீட்ல பேச்சுக் கொடுக்காத’ என்ற அத்தையின் வார்த்தைகள் அவன் செவிகளில் மீண்டும் மோதியது,
‘ஏன் பேசக்கூடாது? ஒரு வேளை எதிர்வீட்ல ஏஞ்சல் இருக்குமோ? ஓ காட் !சென்னை வந்த உடனே நான் கமிட் ஆகக் கூடாதுன்னு இது ஆன்டியோட ஆன்டி அமெரிக்கன்(anti-american) திட்டமோ? அப்படி எந்த பியுட்டி தான் ஆப்போஸீட்ல இருக்கான்னு பார்த்திடுறேன் நான்’ என்று எடக்கு மடக்காய் எண்ணங்கள் ஓடிட, கால்கள் தானாய் கிரில் கேட்டை திறந்து, அப்படி யார் தான் எதிர்வீட்டில் இருக்கிறார்கள் என்று பார்க்கும் ஆவல் அதிகமாகியது அந்த அமெரிக்கனுக்கு.
எதிர்வீட்டுக் கதவும் திறந்தது.